Tuesday 18 January 2022

வானவில் கேக்

பேத்தி பல மாதங்களாக தன் மூன்றாவது பிறந்தநாளுக்கு வானவில் கேக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மகன் இம்முறை யாரையும் அழைப்பதாக இருக்கவில்லை. நாம் இருவர், அவர்கள் மூவர் மேலும் இரு நட்புகளும் அவர்களது நான்கு மாதக் குழந்தையும் மட்டும்தான் என்பதால் கேக் பெரிதாக இருக்கத் தேவையில்லை என்று மகன் அபிப்பிராயம் சொன்னார்.

ஒரு தட்டில் மட்டும் வருமாறு கேக் செய்து அதற்கு ஏற்றபடி அலங்காரம் செய்யலாம் என்று எண்ணினேன். சின்னப்பெண்ணுக்கு 'ரெய்சின்ஸ்' மிகவும் பிடிக்கும் என்று கொஞ்சம் சேர்த்தேன்.

இருவருமாக அமர்ந்து வானவில் செய்தோம். 'இன்டிகோ' & ஊதா நிறங்களைப் பிரித்துக் காட்டுவது சிரமமாக இருந்தது. அவ்விரண்டிற்கு மட்டும் வெள்ளை நிறத்தில் வளைவு செய்து தூரிகையினால் வர்ணம் பூசிவிட்டேன்.

கேக்கின் மேற்பரப்பில் பச்சைநிற 'பட்டர் க்ரீம் ஐசிங்' பூசினேன். இதற்கு பச்சை றித்துடன் 'மின்ட்' சுவை சேர்த்திருந்தேன். மேலே 'மின்ட்' சுவையூட்டிய பச்சை நிற தேங்காய்த் துருவல். தொடர்ந்து மூன்று கேக்குகள் இதே முறையில் செய்தாயிற்று. இந்த வருடம் வேறு ஏதாவது செய்யவேண்டும். ஆனால் குட்டிப்பெண் மனதில் என்ன வைத்திருக்கிறாரோ!

ஆந்தையும் அது இருக்கும் மரமும் குட்டிப்பெண்ணின் முதலாவது பிறந்தநாள் கேக்கிலிருந்து வந்தது. டைனோசர் குட்டி, இரண்டாவது பிறந்தநாள் கேக்கிலிருந்து வந்தது. சின்னச் சின்னப் பூக்களையும் இலைகளையும் கொண்டு அலங்கரித்தேன். வானவில்லின் அடியில் பொன் நிறைந்த பானை ஒன்று வைத்தேன். சின்னப்பெண்ணின் பொம்மை - அவராக. :-)

Sunday 16 January 2022

கியோரா!

Kia ora! அனைவருக்கும் நல் ஆரோக்கியம் மிக்க ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும் என்கிற வாழ்த்துகளுடன்... இடையில் ஒரு வருடத்திற்கு மேல் அஞ்ஞாதவாசம் இருந்து எட்டிப் பார்க்கிறேன்.

வாழிடம் மாறிவிட்டது; வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இங்கு வராதிருந்த காரணம், நேரமின்மை என்பதில்லை. சந்தோஷமான வாழ்க்கை, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுக்கும் சமயம் வேறு விடயங்கள் பிந்தங்கிப் போகும். அப்படித்தான் இமாவின் உலகமும் சுழலாமல் நின்றது. அது இங்கு மட்டும்தான். உண்மையில், என் உலகம் எப்பொழுதும் போல் அழகாக ரசனைகள் நிறைந்ததாகச் சுழன்றுகொண்டேதான் இருக்கிறது. பல சமயம் இடுகைகள் தட்ட ஆரம்பித்து அரைகுறையாக விட்டிருக்கிறேன் என்பது இன்று வந்து பார்க்கும் போது தெரிகிறது. இதையிட்டு மனவருத்தம் எதுவும் இல்லை. பதிவுலகில் பதிவிடாவிட்டாலும் என் அன்புக்குரியவர்கள் மனதில் அழகான அனுபவங்களைப் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறேன்.

சில பழைய இடுகைகளைப் படித்துப் பார்க்கும் போது - முக்கியமாக என் தாயாரது வலைப்பக்கத்திலுள்ள இடுகைகளைப் படிக்கும் போது - ஒரு பெரிய உண்மை மனதில் உறைத்தது. மூளை ஒரு அளவுக்கு மேல் விடயங்களைச் சேமிப்பதில்லை. புதிய எண்ணங்கள் / நிகழ்வுகள் பதிவாகும் போது பழையன கழிந்து அல்லது மங்கிப் போய் விடுகிறது. மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும் அவை மேலே வர. அப்படி மங்கிப் போயிருந்த பல நிகழ்வுகளை பழைய இடுகைகள் மீட்டுக் கொடுத்தன.

மீண்டும் பதிவிட ஆரம்பிக்கப் போகிறேன் - பிரபலத்திற்காகவோ புகழுக்காகவோ அல்ல. என் நினைவுகளை இரைமீட்டுப் பார்க்க விரைவில் உதவும் என்பதால் மட்டுமே ஒரு தினக்குறிப்புப் போல - ஆனால் தினமும் என்று அல்லாமல் எழுதப் போகிறேன். முடிந்தால் தினமும் எழுதுவேன். :-) இப்போது விட்டுவிட்டால் இனி எப்போதும் எழுதாமல் விட்டுவிடுவேன் என்கிற பயம் ஒன்று இருக்கிறது. :-)

என் பிறந்தநாள் அருகில் வரும் சமயம் மூத்த மருமகள், 'உங்களைப் போல் கேக் செய்துதர என்னால் முடியாமலிருப்பதற்காக வருந்துகிறேன்,' என்றார். ஏற்கனவே ஒரு மாதம் முன்பாக உலர்பழக் கலவை அதற்காக மதுசாரக் கலவையில் ஊற ஆரம்பித்துவிட்டதைச் சொன்னேன். இம்முறை என் தேவைக்கு ஏற்ப பழங்கள் பல கிடைக்கவில்லை. கொரோராவினால் இலங்கையிலிருந்து இறக்குமதி குறைந்திருந்தது ஒரு காரணம் என்றால், நான் இருக்கும் கிராமத்திலோ அண்டைய ஊரிலோ ஓர் இலங்கைக் கடை இல்லை என்பதும் நான் முன்பிருந்த ஊருக்குச் செல்ல ஒரு மாதம் முன்புதான் அனுமதி கிடைத்தது என்பதும் கடைக்கு அடிக்கடி செல்லப் பயமாக இருப்பதுவும் முக்கிய காரணங்கள் தான். கிடைத்தவற்றைக் கொண்டு கேக் தயாராகிற்று. புதிய வீடு - oven இன்னும் பழகவில்லை. ஆனால் திருப்தியாக வந்திருந்தது. தட்டு - என் பெற்றோரின் பொன்விழா மணநாள் கேக்கிற்காகச் செய்தது. அதை மீண்டும் என் ஐம்பதாவது பிறநாளுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன் என்பது இன்று இங்கு வந்து பார்த்த பின்பு தான் நினைவுக்கு வருகிறது. 'ஐசிங் எம்ப்ராய்டரி' செய்து பார்க்க வெகு காலமாக ஆசை இருந்தது. பேத்தியின் பிறந்தநாள் கேக்கிற்குச் செய்ததில் கொஞ்சம் 'பட்டர் க்ரீம் ஐசிங்' மீந்திருந்தது. ஒரு பீங்கான் தட்டில் முயற்சி செய்தேன். அன்று வெப்பம் அதிகம் இங்கு. மறுமுறை செய்யும் போது வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு இறுக்கமாகவோ இளக்கமாகவோ ஐசிங் தயார் செய்ய வேண்டும்.

முதல்நாளே கேக்கை அறுகோணி வடிவில் அமைத்து, 'ஆமண்ட் ஐசிங்' பூசி மினுக்கி வத்திருந்தேன். விழாவுக்கான தினத்தன்று காலை 'royal icing' கொண்டு பூக்களையும் இலைகளையும் ஒரு பறவையையும் வரைந்தேன். தட்டிலும் சின்னதாக வளைவுகள் வரைந்தேன். இறுதியாக, 'Gold mist spray' அடித்துவிட்டேன்.

சின்னதாக ஆளுக்கொரு துண்டு வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.