Wednesday 2 September 2015

எலியும் ஆக்டொபஸும்

இது சாமோவன் மொழி வாரமாம். இன்று எட்டாம் ஆண்டுச் சின்னவர்களை அழைத்துக் கொண்டு Auckland War Memorial Museum பார்க்கப் போனோம்.

சாமோவன் வகுப்புகளை எடுப்பவர்கள் வரவில்லை. இருவரில் ஒருவருக்கு காய்ச்சல் தொற்றியிருந்தது; மற்றவர் குழந்தைக்கு அம்மை கண்டிருந்தது. மன்னிப்புக் கோரினர் நடாத்துனர்கள். பதிலுக்கு Tongan  இருவர் வகுப்பு எடுத்தார்கள்.

ஆங்கிலேயரின் அறிமுகத்திற்கு முன்னர், பசிஃபிக் தீவார், இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு எப்படி சிறப்பாகத்  தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர் என்பது பற்றி ஒரு மணி நேரம் வகுப்பு நடந்தது.

மேலே படத்தில் உள்ள பொருளைப் பார்க்க என்ன தோன்றுகிறது உங்களுக்கு!

கணனியை இயக்குவதை 'மௌஸ்' என்கிறோம், இதுவும் பார்க்க அப்படித் தானே இருக்கிறது! 'எலி' எனலாமா இதையும்?

நிறையப் புள்ளிகள் கொண்ட பெரிய வகைச் சோழி ஒன்று, அதற்குப் பொருத்தமான அளவில் காப்பிக் கொட்டை வடிவிலான கல் ஒன்று, மூன்று புரிகளாலான தென்னங் கயிறு,  இவ்வளவுதான் இந்த உபகரணத்தில் இருப்பது. (தென்னங் கயிறு என்று நான் குறிப்பிட்டுச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. உலகின் இந்தப் பகுதியில்... ஒவ்வொரு நாட்டர் ஒவ்வொரு பொருளைக் கயிறு திரிக்கப் பயன்படுத்துகிறார்கள். நியூஸிலாந்தில் ஹரேகேகே; சில இடங்களில் தாழை, புல்லு இப்படிப் பலதும் பயன்படுகின்றன.)

இது என்ன பொருள்! ஏதாவது ஊகிக்க முடிகிறதா? 

சரி... ஒரு கதை சொல்கிறேன். படித்துக் கொண்டே சிந்தியுங்கள்.

முன்னொரு காலத்தில் ஒரு எலி வசித்து வந்ததாம். ஒரு நாள் கடற்கரையில் உலா வந்த சமயம், அதற்கு உறக்கம் வர, அருகே கிடந்த மரக்கட்டை ஒன்றின் மேல் ஏறி, சுகமாகப் படுத்து உறங்கிப் போனதாம்.

மீண்டும் எலி கண் விழித்த போது, கட்டை மிதவையாகக் கடல் நீரில் மிதந்துகொண்டு இருந்திருக்கிறது. எலிக்கு எப்படிக் கரை சேருவது என்று தெரியவில்லை. ;(

அருகே வந்த மீனிடம் உதவி கேட்டது. அதற்கு மீன், "நான் 'ஆ!' என்கிறேன். வாயுள் குதி. கரையில் கொண்டு பொய் விடுகிறேன்," என்றதாம். எலிக்குப் பயம் - மீன் விழுங்காமல் கரை சேர்க்குமா? எதற்கு வீண் வம்பு. மறுத்து விட்டு வேறு யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் காத்திருந்தது.

பல மணி நேரம் யாரையும் காணோம். அப்போது அங்கே,
சிலந்திமீன்நீராளிபேய்க்கடம்பான், சாக்குச்சுருளி என்றெல்லாம் தமிழில் அழைக்கப்டும் ஆக்டோபஸ் ஒன்று வந்து சேர்ந்தது. ;)) (வேறு பெயர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாசகர்களே!)

"என்ன யோசனை எலியாரே!" என்று ஆக்டோபஸ் வினவ, தன் சோகக் கதையைச் சொன்ன எலி, "என்னை மட்டும் பாதுகாப்பாய் கரை சேர்ப்பாயானால்... உனக்குப் பெரி..ய சன்மானம் கொடுப்பேன்," என்று ஆசை காட்டிற்று.

இளகிய மனம் கொண்ட அந்த ஆக்டொபஸும், "சரி என் தலை மேல் குதி. அழைத்துப் போகிறேன்," என்றது. எலியும் ஏறிக் கொண்டது. ஆக்டோபஸ் தன எட்டுக் கால்களாலும் நீந்தி எலியைக் கரை சேர்த்தது.

தொப்பென்று கரைக்குத் தாவிய எலி ஓட முற்பட, தடுத்து, "எனக்குச் சன்மானம் தருவதாகச் சொன்னாயே! எங்கே அது! கொடுக்காமல் போகிறாயே!" என்றது. அதற்கு எலி, "உன் தலையைத் தடவிப் பார். சன்மானம் அங்கே தான் இருக்கிறது," என்றது.

தன் ஒரு கையால் தலையைத் தடவிற்று ஆக்டோபஸ். அங்கே... என்ன இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்!! நெல்லோடு கூடக் கிடந்த பாவத்திற்காக ஒன்று வெயில் காயுமே, அதுதான் குவியலாக இருந்ததாம். ;( ஏமாந்து போன ஆக்டொபஸுக்கு கடுங்கோபம். 'எங்கு எலியைக் கண்டாலும் ஒரே விழுங்கில் காலியாக்கி விடுவது,' என்று கங்கணம் கட்டிற்று.


இதன் அடிப்படையில் தான் ஹாவாயைச சேர்ந்தவர்கள் (ஏனைய பசுபிக் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்தாரும் கூட) இந்த எலியை இரையாகக் காட்டி தங்கள் உணவுக்காக ஆக்டொபஸைப் பிடிக்கிறார்களாம்.

காப்பிக் கொட்டை வடிவக் கல்லு ஏன்!! பாரத்திற்காகக் கல்லு; காப்பிக்  கொட்டை வடிவம் - இறுகக் கட்ட வசதியாக.

பிற்பாடு ஆங்கிலேயர் வருகையோடு, இந்த அமைப்புடன் உலோகக் கொக்கியும் இணைந்திருக்கிறது. உண்மையில் அது அவசியம் இல்லையாம். ஆக்டோபஸ், சோழி எலியை முழுவதாக விழுங்கி விடும். பிறகு கயிற்றை உயர்த்தும் போதும் ஆக்டோபஸ் தப்பிக்கச் சாத்தியமே இல்லை.

கடைசியாகவாவது... இதன் பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி! :-) பெயர் ம(க்)காஃபே(க்)கே...
'ம(க்)கா' என்றால் கல் / பாறை; 'ஃபே(க்)கே' என்றால் எலியல்ல, ஆக்டோபஸ்.