Sunday 28 February 2010

பின்தொடர்வோரே!



 புதிது புதிதாகப் பின்தொடர இணைந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் அனைவருக்கும் இமா கையால்  ஒரு பாரிய டேலியா.


இந்த மலருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ;)

மருமகள், அவர் கணவரோடு ஹாமில்டன் பூங்காவிற்குச் சென்றிருந்தோம். அங்கு அன்று டேலியா மலர்க் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய தினம் வானன்டைன்ஸ் தினமாகவும் இருந்ததால் வாசலில் அமர்ந்திருந்தவர் பார்வையிடச் சென்றவர்களுக்கு அவர்கள் வாலன்டைனுக்குக் கொடுக்குமாறு டெலியாக்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்படி எனக்குக் கிடைத்த டேலியா இதோ உங்களுக்காக. ;)

Saturday 27 February 2010

அதிராத அன்னம்!?

 
அதிராமல் அதிரா முன்னே போய் வழிமறித்த அந்த அன்னம் இதில் யாராக இருக்கும்!!
~~~~~~~~
Rotorua City Lakefront முன்னால்

Friday 26 February 2010

'கலக்குங்க'

'எல்லோருக்கும் கப் கொடுத்து கலக்கிட்டு நம்மை மட்டும் மறந்துட்டாங்களே,' என்று சோகமாக இருக்கிற ஆட்களுக்காக இந்த இடுகை. ;)
எனக்கு காபி, டீ எல்லாம் கலக்கத் தெரியாது. தேவையானது எடுத்து வைத்திருக்கிறேன்.
'கலக்குங்க' என்று சொல்லாமல் கலக்கிக் குடிங்க. ;D
கலக்கத் தெரியலையா!! அப்போ வேற வழி இல்லை. ;( இப்படி சோகமாக உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமீபத்தில் இந்த பசுவைக் கடையில் பார்த்தேன். உண்மையில் முதலில் கவனித்தது கிறிஸ்தான். என் ரசனை தெரிந்த ஆள். ;) 'வாங்கலாமா!' என்றார். வாங்கி வந்தாயிற்று. வீட்டில் வந்து ஆர்வமாக சுற்றி இருந்த கடதாசியைப் பிரித்து எல்லோருக்கும் காட்டினோம்.  மூத்தவர் இது போல் ஒன்று முன்பே கடைகளில் கவனித்திருக்கிறார். ஆனாலும் அதன் அழகைப் பாராட்டினார். சின்னவர் பார்த்து ரசித்தார். 

மருமகள் மட்டும் விபரமாக 'பசுவின் வாயிலிருந்தா பால் வரும்!?' என்றார். ;D

தயாரிப்பாளர்கள் வேறு எப்படித்தான் பாலைப் பசுவின் வயிற்றில் தங்க வைப்பதாம்! ;)
~~~~~~~~~~
பி.கு
மருமகளைக் கூட்டிக் கொண்டு ரோடோரூவா (ம்.... எனக்கே சரியா வாசிக்க முடியல, Rotorua என்று படிங்க,) ட்ரிப் போன போது தங்கி இருந்த லாட்ஜ் வாசலில் மேலே இருக்கிற மூவரும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள், க்ளிக்கி விட்டேன். 

ஒரு 'டிஷ் வாஷர்'

இப்போ கொடும் கோடை இங்கு. அநேகமான சமயங்களில் பாத்திரம் கழுவும் இடத்தில் முகத்தில் வெயில் அறைகிறது.

மகன் எத்தனையோ தடவை கேட்டு விட்டார், 'ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும், ஒரு 'டிஷ் வாஷர்' (இது 'பாவா வாஷர்' மாதிரி இல்லை, வேறு) வாங்கலாமே!' என்று. எனக்கு பிடித்தமாக இல்லை. காரணம்... முழுவதாக இல்லாவிட்டாலும் நான் ஒரு தாவரபட்சணி. :)

'நானே சிறந்த டிஷ்வாஷர்' என்று நம்புபவள் நான். முதலில் நீர் அருந்தப் பயன்படுத்துபவை, அடுத்து பானங்கள் அருந்துவதற்கானவை, பின்னால் மரக்கறிப் பாத்திரங்கள், கடைசியாக மாமிசம் வைத்திருந்த பாத்திரங்கள், தொட்டி,  இறுதியாக தேய்க்க உபயோகித்த 'ஸ்பான்ச்'.

டிஷ் வாஷர் இந்த ஒழுங்கில் கழுவுமா!!!

டிஷ் வாஷிங் லிக்விட் வரும் போத்தல் பெரிதாக இருக்கிறது கவிழ்த்தால் தேவைக்கதிகம் ஊற்றி விடுகிறது. இது ஆரோக்கியத்துக்கும் கேடு, சேமிப்புக்கும் கேடு என்று....

இந்த ஏற்பாடு

ஒரு வெற்று ஹான்ட்வாஷ் போத்தலில் நிரப்பிவிட்டால் மூடியைத் திருக வேண்டாம். அளவுக்கு அழுத்தி எடுத்துக் கொள்ளலாம். 

கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு விடயம் - வெயில் படும்படி வைத்தால் வீணாக வெளியேறிவிடும்.

வேலையிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தினேன். தோழிகள் பாராட்டினர், சிலர் பின்பற்றுகிறார்கள். சமையல் எண்ணையைக் கூட இப்படி எடுத்து வைத்து உபயோகிக்கலாம்.

உங்களுக்கும் உதவக் கூடும். பிடிக்காவிட்டால் விட்டு விடுங்கள். :)

Wednesday 24 February 2010

ஏட்டுச் சுரைக்காய்....

....கறிக்குதவாது. படத்தில இருக்கிற கப் காபிக்குதவாது. 
ஆளாளுக்கு கப் கேட்கறீங்களே!! ;)

வாணி கேட்ட ப்ளூ கப் இதோ


ஜீனோ ரெண்டும் வேணும் என்று கேட்டதால்...


ஆளுக்கு ஒரு கலர். ;)

 

எதுவும் கேட்காமல் பின்னூட்டம் கொடுத்த பிரபாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று தெரியல. ஸோ, நானே ச்சூஸ் பண்ணிட்டேன். ;)




இரண்டும் வேண்டும் என்று சொன்னீங்க சந்தனா. ஒன்று கார்ல வச்சுக்கலாம்...



டிரைவிங் லெசன் போறப்ப யூஸ் ஆகும். மற்றது...

வீட்டுக்கு. ;)

உங்க பேர் தெரியலையே அனானி!!
அதான் இப்படி விதம் விதமா மூன்று. ;)

 ஸ்பெஷலா இனிப்'பூ', புளிப்'பூ', துவர்ப்'பூ', கசப்'பூ', உறைப்'பூ', உவர்ப்'பூ'  என்பதான ஆறு சுவைகளையும் குறிக்கும் விதமாக...


ஆறு பூக்கள் பெய்ன்ட் செய்த கப் :)

சரி, வந்த எல்லோருக்கும் கப் கொடுத்துட்டேனா!!
கலக்கிட்டேன்ல! ;D

நான் வரைந்த ஓவியமே! - 1

செல்வி. ரூத் மில்லர் - எங்கள் பாடசாலையில் உப அதிபர் பதவியில் இருந்து வெகு காலம் முன்பு இளைப்பாறியவர். இளைப்பாறிய பின்னும் கடந்த பத்து வருடங்களாக தனது நேரத்தைப் பாடசாலை வளர்ச்சிக்காகவே செலவழிப்பவர். கணிதத்தில் புலி. இங்கு பிறந்தவர். உலக சரித்திரம், ஆங்கில மொழி, கிறிஸ்தவ சமயம் என்று பாடங்களில் சந்தேகம் வந்தால் இவரிடம்தான் ஓடுவோம். 

எழுபத்துமூன்று வயதான இவர் இன்றுவரை தனி வீட்டில் இருக்கிறார். 'ரிலீவிங்' (விடுமுறையில் செல்லும் ஆசிரியர்களுக்காக கற்பித்தல்) செய்கிறார், வாகனம் ஓட்டுகிறார், நீச்சலடிக்கிறார் & கற்பிக்கிறார். கல்விச் சுற்றுலாக்களின் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமைத்துக் கொடுக்கிறார். மாணவர்களின் சீருடைகளில் கிழிசலை அவதானித்தால் திருத்திக் கொடுக்கிறார். பாடசாலை விசேட வைபவங்களின் போது மலரலங்காரம் செய்து வைக்கிறார். வருடாவருடம் பரிசளிப்பு விழாவின் போது இவர் பெயரால் ஒரு மாணவருக்குக் கிண்ணம் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.ப்படி இவர் செய்யும் காரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வருடம் இரு முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுலாவும் கிளம்பி விடுவார், எல்லாம் தனியாகத்தான்.

இவரது வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கும். வருடா வருடம் பாடசாலை காலாவுக்காகச் (gala) செடிகள் முளைக்க வைத்து விற்பனை செய்வார். என் தோட்டத்து டேலியாக்கள் இவர் கொடுத்த கிழங்குகளில் இருந்து முளைத்தவை. பாடசாலை (ஜீனோவும் அதிராவும் கண்ணை மூடுங்கோ) 'மண்புழுப் பண்ணை'யும் இவர் பொறுப்பில்தான் இருக்கிறது.

இப்போ ரூத்தைப் பற்றி ஏன் சொல்ல வந்தேன்!!!! 
ம்.. ரூத் ஒரு சிறந்த ஓவியர். ;) 
ஏராளமான ஓவியங்கள் விற்பனை செய்திருக்கிறார். பாடசாலைக்கு எனவும் சிலது அன்பளிப்புச் செய்திருக்கிறார். அவற்றை விற்றுப் பணமாக்கி இருக்கிறோம். இருந்தும் இன்னமும் சிறந்த ஓவியர்களிடம் நுணுக்கங்களைக் கற்று வருகிறார்.

2007, 2008 இரு வருடங்களும் எங்கள் பாடசாலையில் மாணவர்களுக்காகவென  இலவச (பயன்படுத்தும் பொருட்களுக்கான தொகையை மட்டுமே பெற்றுக் கொள்வார்) ஓவிய வகுப்புகள் நடாத்தி இருந்தார்.  அப்போது பாடவேளை இல்லாத ஆசிரியர்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்று அழைப்பு வைத்திருந்தார். ஒரே ஒரு ஆசிரியை மட்டும் தொடர்ந்து கற்று வந்தார். ஆர்வம் இருந்தும் வகுப்பு வேளைகளில் செல்வது இயலாது இருக்கிறது என்னும் என் ஆதங்கத்தை சென்ற வருட ஆரம்பத்தில் நான் வெளிப்படுத்தி இருந்தேன்.

அது முதல் முடிந்தவரை பிரதி செவ்வாய் அன்றும் மதிய போசன இடைவேளையில் ஓவிய வகுப்புகள் நடக்கிறது. வாசகசாலைப் பொறுப்பாளர், பாடசாலைச் செயலாளர், ஆசிரியர்கள் என்று எப்படியும் பத்துப்பேர் சேர்ந்து விடுவோம். 

இது மூன்றாவது (வாணி கவனிக்க) முயற்சி. இம்முறை எண்ணெய் வர்ணங்களைப் பயன்படுத்த இருக்கிறோம்.
குறை வேலையைக் குருவுக்கும் காட்டக் கூடாது என்று சொல்வார்கள். இங்கு எனக்கு ஏற்கனவே பாராட்டுப் பத்திரம் கிடைத்து விட்டது. ;) 

எல்லோர் பொறுமையையும் நிறையச் சோதித்து விட்டேன். ;)

வரைய இருக்கும் ஓவியம்...

...இப்படி வர வேண்டும்.

முதற்படியாகக் கரியால் கோடு இழுத்து வைத்திருக்கிறேன்.


மற்ற நண்பர்கள் சிலரது கோட்டுச் சித்திரங்கள்



வாரா வாரம் வரைவதை உங்களோடு பகிர்ந்து கொள்வதாக இருக்கிறேன் - ஏதாவது சொல்வீர்கள் என்கிற நம்பிக்கையில்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பி. மு.கு 
 மையைக் கலக்காமல் பூச முடியாது என்பது இமாவுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் இந்த இடுகைத் தொடரின் கீழ் யாரும் வந்து 'கலக்குங்க' என்று கருத்துச் சொல்லுதல் ஆகாது என்பதை அனைவருக்கும் அன்புடன் அறியத் தருகிறேன்.
நன்றி
வணக்கம் _()_

நான் வரைந்த ஓவியமே! - 0





 இதைப் பார்த்துக் கொண்டே இருங்க. பின்னேரம் வந்து விபரம் சொல்கிறேன். ;)

Tuesday 23 February 2010

நன்றி மருமகளே!


மருமகள் விடுமுறைக்காக கணவருடன் வந்து இரண்டு வாரங்கள் என்னோடு தங்கி இருந்தார். இங்கு வந்த பின், கடந்த பத்து வருட காலத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிய முதல் உறவினர் இவர்கள்தான். காலையில் பாடசாலை, மாலையில் ஊர் சுற்றல் என்று மகிழ்ச்சியாக இரண்டு வாரங்கள் கழிந்தன.

நடுவே ஓர் நாள் எங்களிடம் இருக்கும் தேநீர்க் கிண்ணங்களைப் போல் தன் மருமக்களுக்கும் கிடைத்தால் வாங்கிப் போகலாம் என்று விசாரித்தார்.

எங்கள் வீட்டில் எம் நால்வருக்கும் பெயர் பொறித்த கிண்ணங்கள் உள்ளன.

முதன் முதலில் என் சகோதரர் என் கணவர் பெயரோடு ஒரு கிண்ணம் 'காரமண்டல்' (இங்கு) சென்ற போது கண்டதாக வாங்கி வந்தார். தமிழ்ப் பெயரெல்லாம் கோப்பையில் எங்கே கிடைக்கப் போகிறது. நான் மீதிப் பேருக்கு என் கையால் பெயரும் படமும் வரைந்து கொடுத்தேன். (அதெல்லாம் படம் பிடித்து வைக்கவில்லை.) அவற்றில் ஒன்று மட்டும் உடையாமல் மீதியாக இடுக்கிறது. இங்குதான் எங்காவது படம் இருக்கும். நீங்களே தேடிக் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். ;)

இப்போது வீட்டில் பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் வெண்மை நிற மையால் ஆங்கிலத்தில் பெயர் பொறித்த சிவப்புக் கிண்ணங்கள்.
ஒருமுறை 'கான்டினென்டல் சூப்' கம்பெனியார் ஒரு குறிப்பிட்ட கடைத்தொகுதியில் ஐந்து சூப் பாக்கட்டுகள் வாங்கிக் கொண்டு இணையத்தில் போய்ப் பெயர் பதிவு செய்தால் இலவசமாக நாம் விரும்பும் பெயர் பொறித்த கிண்ணம் (mug) அனுப்புவதாக விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி வந்தவைதான் அவை அனைத்தும்.

மருமகள் குறிப்பிட்ட பெயர்கள் கடையில் கிடைக்கக் கூடிய பெயர்களாகத் தெரியவில்லை. எனவே நானே இரண்டு கிண்ணங்களை வாங்கிப் பூக்கள் வரைந்து பெயர் பொறித்துக் கொடுத்தேன்.

 மருமகள் இருந்த நாட்களில் தகரத்தில் அடைக்கப்பட்ட நிலக்கடலை வீட்டில் புழக்கத்தில் இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் மூடிகளை தேவையான போது நான் கிண்ணங்களை மூடி வைக்கப் பயன்படுத்துவது உண்டு.



கிண்ணங்களின் உள்ளே சாக்லேட். ;)




இங்கு என் பெயர் உள்ள இடங்களில் எல்லாம் குழந்தைகளின் பெயர்கள் இருந்தன.



யோசனைக்கு நன்றி மருமகளே. :)

இமா காதில் 'வாஷர்'

'இமாவைக் காணவில்லை,' என்று ஏங்குவோருக்காக இந்த இடுகை. ;)
'காதில பூ' கேள்விப் பட்டிருப்பீங்க, இது காதில 'வாஷர்'. ;)

கீழுள்ள படத்தை வரைந்தது நான் அல்ல, என் சக ஆசிரிய நண்பர் ஒருவர்.
ஒரே ஒரு குறை, சிரிப்பைக் காணோம். ;(


வருடத்தின் முதலாம் வாரம் எங்கள் பாடசாலைக்கு வரும் ஏழாம் எட்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் இந்தப் பயிற்சி கிடைக்கும். அவரவர் படத்தை வரைந்து, இது போல் உணர்வுகளைக் காட்டும் குமிழ்களும் வரைந்து, அவ்வுணர்வுகளால் அவர்கள் ஆட்கொள்ளப் பட்டிருந்த தருணங்களை விபரிக்குமாறு கேட்கப்படுவார்கள்.
உதாரணத்துக்கு ஒரு படம் வரையலாம் என்று ஆரம்பித்த ஆசிரிய நண்பர் அச்சமயம் வகுப்பினுள் வேறு வேலையாக நின்றிருந்த என் முகத்தை வரைய ஆரம்பித்தார். சரியாகத்தான் வரைந்து இருக்கிறார். ;)

அணிந்திருக்கும் காதணியைப் பற்றிய கதை.

என் தந்தையாருக்கு தச்சு வேலை, மற்றும் பல்வேறு விடயங்களில் ஈடுபாடு உண்டு. எப்போதும் அதற்கேற்ற மாதிரியான பொருட்களை வாங்கிச் சேர்த்தபடி இருப்பார். செபா அம்மாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், 'நல்லதுதான், திருமணத்தின் போது நகை நட்டு போடுவதற்குப் பதில் வாஷரும் நட்டுமாகப் போட்டு விடலாம்,' என்பார். ;)
இந்தக் காதணி பார்க்க வாஷர்களைக் கோர்த்தது போல் இருக்கவே பழைய நினைவுகள் வரவும் ஆசையாய் வாங்கி வந்தேன். :)

இவை இரண்டும் நியூசிலாந்து பாவா சிப்பிகளால் (paua shells) செய்யப்பட்ட வாஷர்கள். ;)

Saturday 6 February 2010

'குட்டீஸ் ஒன்லி'

இன்று இரண்டாம் முறையாக இந்த வருடம் குட்டித் தேவதை தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இம்முறை 'குட்டீஸ் ஒன்லி'. அவர்களில் ஒருவருக்கு நேற்று ஆறாவது பிறந்தநாளாம். இன்றுதான் கொண்டாட்டம். அதை முடித்துக் கொண்டு தனது இன்னும் குட்டியான சகோதரியுடனும் தாயாருடனும் வந்திருந்தார். 

குட்டீஸ் பார்ட்டியில் இமாவுக்கு என்ன வேலை என்கிறீர்களா! 'Fas paint'ing - ஃபேஸ் பெய்ன்ட் தான், இது பிராண்ட் பெயர்.
முதலாவதாக வந்த விழாநாயகி உயரமாக ஒரு 'பார் சேரில்' ஏறி அமர்ந்து கொண்டார். எனக்கு இந்தத் தொழிலில் முன் அனுபவம் பெரிதாகக் கிடையாது. ஒரே ஒரு முறை, என் குட்டியர் (கோகுவோ கொஹானோ என்று நினைவு,) போட்டு விடக் கேட்டார் என்று போட்டு விட்டிருக்கிறேன். எங்கோ படம் இருக்க வேண்டும். பிற்பாடு எப்போதாவது ஸ்கான் செய்து இணைக்கிறேன்.
மற்றப்படி பாடசாலையில் மாணவிகள் 'ஸ்கூல் காலா' வின் போது போட்டுவிடுவதை மேற்பார்வை செய்திருக்கிறேன்.  அப்போ ஆலோசனைகள் சொல்லுவேன், அவ்வளவே.

இது என்ன பிரமாதம் என்று நினைத்துக் கொண்டுதான் ஆரம்பித்தேன். ஆனால் ஆளாளுக்கு ரசனையாய் வாய்க்குள் 'லாலிபாப்' சுவைத்துக் கொண்டு இருக்கையில் வரைவது அத்தனை சுலபம் இல்லை என்பது பிற்பாடு புரிந்தது. நடுவே, மீதிப் பேர் என்ன செய்கிறார்கள் என்பதையும் முன்னறிவித்தல் எதுவும் கொடுக்காமல் தலையைத் திருப்பிப் பார்த்து விடுவார்கள், வைக்க நினைத்த குட்டிப் புள்ளி நீண்டு கோடாகி விடும். ;)

விழா நாயகி விரும்பியது, சிவப்பு வண்ணத்துப் பூச்சி. இன்ன நிறப் பொட்டுகள், உடல் இன்ன நிறம் என்பது போன்ற விபரங்கள் எல்லாம் தந்தார்கள். முடிந்து கண்ணாடியில் பார்த்ததும் ஒரு சின்னச் சிரிப்பு. (இது எல்லோர் முகத்திலும் தெரிந்தது.) 

அடுத்து அவரது நெருங்கிய தோழி, (சென்ற வருடம் இவரை முதலில் சந்தித்தேன்) விரும்பியது ஒரு 'பூனை'. படத்தைக் காட்டினார். ஆரம்பித்தேன் வரைய. இவர்தான் அதிகம் தலையை ஆட்டியவர். (வாயை அசைத்தவரும் கூட) நிறையப் பேசினார். வேலை முடியும் வரை பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் ரசித்தார்.
மூன்றாம் ஆள், இருவர் முகங்களையும் பார்த்தபின் தீர்மானித்திருக்க வேண்டும், தனக்கும் வண்ணத்துப் பூச்சி வேண்டும் என்றார். ஆனால் சிவப்புப் புள்ளிகளுடன் கூடிய கருப்பு இறக்கைகள் வேண்டும் என்றார். உடல் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும் என்றார்.

இவர் கேட்டது சிலந்தி. பேச்சுவாக்கில் சிலந்திப் பூச்சிக்கு எத்தனை கால்கள் என்று கேட்டு விட்டேன். 'ஆறு' என்று சட்டென்று பதில் வந்தது. பிறகு எவ்வளவோ சொல்லியும் 'முயலுக்கு மூன்று கால்' போல 'சிலந்திக்கு ஆறு கால்' ;) தூர இருந்து பார்க்க சிலந்தி முகத்தில் அமர்ந்திருந்தது போலவே இருந்தது. 
இவர்தான் இன்று பிறந்தநாள் கொண்டாடிய மற்றவர். இவர் விரும்பியபடி ஒரு 'வானவில் வண்ணத்துப் பூச்சி.'

வலது கன்னத்தில் ஒரு ரோஜா வர்ண இதயம் வரையக் கேட்டார். உடலுக்குள் இதயம் இல்லையாம், வயிறு மட்டும்தான் இருக்கும் என்றார். நான் தன் தோழிக்கு என்ன உறவு, அவர் தாயாருக்கு என்ன உறவு என்பதெல்லாம் விசாரித்தார்.
பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தங்கை என் பெயரைக் கேட்டார். அவர் கேட்டது இடது கன்னத்தில் கருப்பு நட்சத்திரம் இரண்டு பொட்டுகளுடன், வலது புறம் ரோஜா வர்ண நட்சத்திரம் ஒன்று பெரிதாக வரையுமாறு கேட்டுக் கொண்டார். புகைப்படம் நன்றாக வந்திருக்கவில்லை.

எல்லாக் குழந்தைகளையும் முழுவதாகக் காட்டவே விரும்பினேன். இருப்பினும் ஒரு தயக்கம். ;) 

குட்டித் தேவதையின் தாயார் (என் முன்னாள் மாணவி) குழந்தைகளுக்காக விளையாட்டு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார். 

எல்லாம் முடிந்து இரண்டு மணி நேரம் கழித்து மூட்டை கட்டிக் கொண்டு புறப்படுகையில் மூன்று பேர் போட்டி போட்டுக் கொண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டார்கள். இதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றிற்று. ;)

Friday 5 February 2010

'தலைப்பிடக் கோருகிறேன்' முடிவுகள்


இன்றோடு ஒன்பது நாளாச்சு, 'தலைப்பிடக் கோருகிறேன்' அறிவித்து. கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்குமே  பரிசுகள் உண்டு.

கை கொடுங்க செந்தமிழ் செல்வி. ;) 
நீங்கள் கொடுத்த தலைப்பு சிறப்பாக இருப்பதை போட்டியில் பங்கேற்ற மற்ற அனைவரும் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
உங்களுக்குப் சிறப்புப் பரிசாக...

ஒரு போத்தல் நெய்ல் பாலிஷ் .... கூடவே இந்த ரோஸ்.

//டடாய்ங்... டடாய்ங்... டடாய்ங்... டடாய்ங்... டட்..டட்..டட்ட..டட.. டடாய்ங்!!!! // என்று பேக்ரவுண்டு ம்யூசிக் போட்டு....


"மரத்து மேல குருவிக் கூட்டம்" இருக்க விடாமல் துரத்திய ஜீனோபிரானுக்கு! இந்த போட்டோ பரிசு.

எவ்ளோ சிவிலைஸ்டா இருக்குது பாருங்கோ. ;)

//ச்சிப் ச்சிப்// என்று சொன்ன எல் போர்டுக்கு...

எங்கள் வீட்டு மஞ்சள் 'சிப்'.
//ஹி ஹி அதிசய மரம்// என்று சிரித்த சாருவுக்கு...
குருவியும் விளக்கும் காய்த்துத் தொங்கும் அதிசய மரம்.

//””பூனையின் தோழர்கள்””.... ஒரு நிழல், ஒரு கமெரா, ஒரு மரம்... 7 குருவி...:).// என்று கவிதை! சொன்ன அதிராவுக்கு இது. ;)


பயந்து போய் விட வேண்டாம், வெறும் நிழல்தான். ;)

தொடர்ந்து வரவிருக்கும் போட்டிகளிலும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும்
தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். ;)

இப்படிக்கு
இமா

Thursday 4 February 2010

சீச்சீ! இந்தப் பழ(ட)ம் புளிக்கும்

நேற்றுத் திடீரென்று ஒரு யோசனை, டைனிங் ஸ்பேசில் உட்கார்ந்திருக்கும் வட்டக் கண்ணாடி மேசையை அலங்கரித்துப் பார்க்கலாமா!
புதுமையாக இருக்கும். ஆனால், நன்றாக இருக்குமா இல்லையா என்று விஷுவலைஸ் பண்ணிப் பார்க்க முடியவில்லை. முயற்சிக்கலாம் என்று தோன்றியது.
(ஃப்ளாஷ் போட்ட போது மேசையில் கீறல்கள்)
இந்த மேசை பத்து வருடங்கள் முன்பாக எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இதில்தான் சாப்பாடு, என் கிராஃப்ட், அயர்னிங் என்று எல்லா வேலைகளும் நடக்கின்றன. இப்போ நிறையக் கீறல்கள் விழுந்து விட்டாலும் மாற்ற மனம் இல்லை. கதிரைகளுக்கு மட்டும் இருமுறை துணி மாற்றி இருக்கிறோம். முதல் முறை மகனும் நானும் மாற்றினோம். இரண்டு வருடங்கள் முன்பதாக கிறிஸ்ஸும் நானும் மாற்றினோம்.
(யன்னலூடாக வெயில்)
மேசைக்கும் புது வடிவம் கொடுக்கலாம் என்ற என் முதல் முயற்சியின் முடிவு இது. அப்பப்போ வேறு விதமாக அலங்கரிப்பதாக இருக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் (எவ்வகையாக இருப்பினும்) வரவேற்கப்படுகின்றன.

பயன்படுத்தி இருப்பவை 
  • வேண்டாம் என்று கழித்த பீங்கான் சூப் கிண்ணம் ஒன்று
  • மீள் சுழற்சியாகக் கொஞ்சம் 'வெட் ஓயாசிஸ்' (wet oasis)
  • காய்ந்த பாசி கொஞ்சம் 
  • ஸ்பைடர் பிளான்ட் (spider plant ) கொப்புகள் சில
  • ஐவி (ivi) கிளைகள் சில
  • கிளாஸ் பிளான்ட் (glass plant - சரியாகப் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது ;(  ) கிளைகள் சிறிது
  • மூன்று செயற்கைத் திராட்சைக் குலைகள்
  • ஒரு கிண்ணம் நீர்
  • இரண்டு கைகள்
  • கொஞ்சம் கற்பனை
(சுவரில் தொங்கும் நான் வரைந்த ஓவியமும் யன்னலூடாகத் தெரியும் திராட்சைப் பந்தலும் தலைகீழ் விம்பங்களாக)
(தூங்கும் உறியின் விம்பம்)
(திரைச்சீலைகள் மூடி இருந்தபோது)
புகைப் படம் எடுப்பதில் நிறையச் சிக்கல்கள்...
  • யன்னல் திரைச்சீலையை இழுத்து மூடினால் இருளாக இருக்கிறது.
  • ஃப்ளாஷ் போட்டால் கண்ணாடியில் ஒளி பிரதிபலிக்கிறது.
  • திரைச்சீலை திறந்திருந்தால் வானம், பறவைகள், ஆகாய விமானம் என்று எல்லாமே துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
  • கமரா திரையில் திருப்தியாகத் தெரிந்த படத்தை கணணித் திரையில் பார்த்தாலோ... நட்ட நடுவே இமா முகம் தெரிகிறதே!! ;D
என்னால் முடிந்த 'பெஸ்ட்' இதுதான்.
 
யாராவது விஷயம் தெரிந்தவர்கள் இந்த மாதிரியான போட்டோ எடுப்பதற்கும் ஏதாவது டிப்ஸ் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எடுத்த மீதிப் படங்கள் கொலாஜாக