Friday 31 December 2010

'இமாவின் உலகிற்கு' அகவை ஒன்று

எப்படியோ ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. புதிய நட்புகள், புதுப் புது அனுபவங்கள் ;).


பின்தொடரும் பார்வையாளர்கள், பின்தொடராது' பின் தொடர்வோர் மற்றும் இன்று இந்த இடுகையைக் காணும் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பிறக்கும் புத்தாண்டு மகிழ்வு கொண்டுவரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கிறேன்.

அன்புடன்
 இமா

Sunday 26 December 2010

நட்புக்கு நன்றி

இறைய.. 0----னிணைப்பு
 ;)
அழைப்பிதழ் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது.
அபிப்பிராயம் சொல்லி உதவிய வலையுலக நட்புக்களுக்கு... முக்கியமாக மருமக்கள் ஜீனோ, ஜெய்லானி & தோழி ப்ரியாவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். 'கட்டிலுக்குக் கீழே தூங்கிக் கொண்டு ;) பிஸியா இருந்தும்' கலர் அடித்து உதவியவருக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்.

செய்முறை காண... http://www.arusuvai.com/tamil/node/29825

டிசெம்பர் 26 - ஒரு மீள்பார்வை

& ஒரு அழைப்பு

டிசெம்பர் 26 - வருடாவருடம் Boxing Day

டிசெம்பர் 26, 1960 - என் அன்புப் பெற்றோரது மணநாள்
டிசெம்பர் 26, 2004 - மட்டுநகரில்... இரண்டு நாட்களில் ஐம்பதாவது மணநாள் கொண்டாடவிருந்த என்  ஞானப்பெற்றோர் அவர்களது குடும்பத்தினரோடு ஆழிப்பேரலைப் பேரழிவில் சிக்கிக் காணாமற் போனமை
டிசெம்பர் 26, 2010 - செபாவின் தங்கத் திருமண நாள்


தாயாய்த் தாதியாய்த்
தோழியாய்
நல்லாசானாய்...
இன்றுவரை எனக்கு மட்டுமல்லாது 
என் குழந்தைகளுக்கும் 
அனைத்துமாக இருந்து வரும் 
என் அன்பு அன்னை செபாவையும் 
எனது அருமைத் தந்தையையும் 
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
 ~~~~~~~~~~

இங்குள்ள உறவுகள், நட்புக்களுக்கு இன்றிரவு ஒரு குட்டி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். ;) என் மகிழ்ச்சியில் இணைந்துகொள்ள உங்களையும் அழைக்கிறேன்.

அழைப்பிதழ் இதோ..

வருக. ;)

வாழ்த்த விரும்பின்.. செபாம்மா இதயத்திற்குத் தொடர்பு இதோ ;)

 அன்புடன் 
இமா

Friday 24 December 2010

நத்தார் வாழ்த்துக்கள்


இங்குள்ளவை சென்ற வருடம் அன்பளிப்புகளில் மாட்டவென்று (gift tag) செய்தவை. நீள்சதுர வடிவ அட்டைகளை இரண்டாக மடித்து, பல்லுக் கத்தரிக்கோலால் ஓரங்களை வெட்டி விட்டு, ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி, துளைகள் செய்தேன்.

ஒற்றை அட்டை 'gift tag'

வலையுலக கிறீஸ்தவ நட்புகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்தோதய வாழ்த்துக்கள்.
அன்புடன்
இமா

Monday 6 December 2010

Thursday 25 November 2010

இன்றைய அறுவடை


இமாவின் உலகில் இறுதியாக (62வதாக) இணைந்துகொண்ட குறிஞ்சிக்காகவும், எனக்கே தெரியாமல் என்னைப் பின்தொடரும் அனைவருக்காகவும் என் உலகத்து ஸ்ட்ராபெரிச்செண்டு. 

மலர்களே! மலர்களே!


இங்கு அனைவரும் காண என் உலகைப் பின்தொடரும் அறுபத்தொருவருக்காகவும் இன்று பறித்த என் தோட்டத்து மலர்கள்.

ஒரு மீற்றர் உயரம் வளரும் என்று செடியில் தொங்கிய சிட்டை சொல்லிற்று. செடியோ கொடியாகிப் படர்கிறது. மூன்று வருடங்களாக எங்கள்  வீட்டு 'ட்ரைவ் வேயில்' பூத்துச் சிலிர்க்கின்ற இந்த ரோஜாவிலிருந்து பதியன்கள் வைத்து வேறு இடத்தில் நட்டிருக்கிறேன்.

'ரோஜா' வண்ணத்தில் அழகிய பெரிய பூக்கள்; அதைவிட மென்மையான வண்ணத்தோடு குட்டிக் குட்டியான பூக்கள்; இடை இடையே மொட்டுக்கள்; சிவப்பாய்த் துளிரிலைகள், கொஞ்சம் பெரிய மென்பச்சை இலைகள்; கடும்பச்சையாக பளபளவென்று முதிர்ந்த இலைகள்; தளதளவென்று எறியும் சிவந்த மொத்தக் கிளைகள்; மெல்லிய பச்சைக் கிளைகள்; முதிர்ந்து வயதானதால் பசுமையற்றுப் போன கிளைகள்; எப்போதும் பூக்களுக்காகச் செடியைச் சுற்றிச் சுற்றி வரும் வண்டுகள்; சென்ற வருடத்து வசந்தத்தின் அடையாளமாக மீந்து போன காய்கள் என்று வாழ்க்கையின் பல படிகளையும் ஒருங்கே கொண்ட இது... ஒரு செடி மட்டும் அல்ல. என் தோழி.

தினமும் காலையில் வேலைக்குப் புறப்படும் சமயம் முதலில் ரோஜாத் தரிசனம், மிகச் சிறிதே ஆனாலும் அழகான நொடிகள் அவை. மெத்தென்றும் சட்டென்று விதம் விதமாய்த் தலையசைத்து காலைவணக்கம் சொல்லும் என் ரோஜாக்கூட்டம். அந்த நொடிச் சந்தோஷம் நாளை அருமையாக ஆரம்பித்து வைக்கும். (சமீபகாலமாக பாடசாலையில் இருக்கும் மேரிமாதாவுக்காக தினமும் சில பூக்கள் கொண்டு செல்லும் வழக்கம் தொற்றி இருக்கிறது.)
மீண்டும் வீடு திரும்புகையில் பூக்களைப் பார்த்ததும் களைப்புக் காணாது போய்விடும்.கொஞ்ச நேரம் செடியோடு பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் உள்ளே போவேன்.

செடியிலிருந்து உதிர்ந்த இதழ்கள் எப்பொழுதும் 'ட்ரைவ் வே' முழுக்கக் கோலம் போட்டிருக்கும். அது ஒரு அழகு.

தோட்டத்தில் பூக்கள் போதிய அளவு கிடைக்கிறது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் என்று எங்கு சென்றாலும் செபா அறுசுவையில் செய்துகாட்டிய பூச்செண்டு போல் ஒன்று கொண்டு செல்கிறேன். பெறுபவர் சந்தோஷம் என்னை மேலும் சந்தோஷப் படுத்துகிறது.

ஒரு வீட்டுக்கு மறுமுறை சென்றபோது அந்த வீட்டு ஆன்டி கொட்டிப் போன பூக்களை எடுத்துவிட்டு நான் மீண்டும் பாவிக்கட்டும் என்று மீதி அமைப்பைப் பாதுகாத்து வைத்திருந்து எடுத்துக் கொடுத்தார். எங்கள் அதிபர் பிறந்தநாளுக்குக் கொடுத்தது பாடசாலையில் இருக்கும் பெரிய மேரிமாதா பாதத்தின் அருகே இருக்கிறது. பதினெட்டாம் அறை ஆசிரியர் மேசையில் அவர் பிறந்தநாளுக்குக் கொடுத்தது இருக்கிறது. இரண்டிலும் தினமும் பூக்களைப் புதுப்பிக்கிறேன்.

இன்று இது உங்களுக்காக.

Wednesday 10 November 2010

விடைபெறுவது...


"ஹாய்!"

"வீடு மாறிப் போறன். அதுதான் இந்த சோகம். ;("

"போற இடத்தில ஒழுங்கா நல்ல பிள்ளையா இருக்க வேணும்." - இது இமா

"எல்லாரும் சந்தோஷமா இருங்க. நான் போய்ட்டு வாறன். ஒருவரும் என்னை மறக்கப்படாது. சீயா மீயா. ;("

இப்படிக்கு 

அன்புடன் 
பிப் ஸ்க்விக்

Sunday 7 November 2010

நியூசிலாந்துத் தீபாவளி

இமா எப்படித் தீபாவளி கொண்டாடினேன்?

யாரோ ;) கேட்டிருந்தார்கள்.

 

சின்ன வயதில் ஊரில் டைக் வீதியில் வசிக்கையில் தெருவில் அனேகமான வீடுகளில் அழகழகாய்த் தீப ஆவளி பார்த்திருக்கிறேன்.

வாசற்கதவைத் திறந்தால் தெரு, அப்படித்தான் எல்லா வீடுகளும் இருக்கும் அங்கு. படிக்கட்டில் அமர்ந்து பார்த்தால் தெரு முழுவதும் தெரியும். கார்த்திகைதீபம் பார்க்கப் பிடிக்கும். அத் தெருவுக்குக் காவடி வரும், கார்த்திகைப் பூச்சி ஊர்வலம் வரும்.

எல்லாம் சில வருடங்கள் தான்.

அந்த வீட்டை விட்டு எங்களுக்கே உரிய நிலத்திற்கு இடம் பெயர்ந்தோம். அத்தோடு இந்த மாதிரியான காட்சிகள் காண எங்காவது புறப்பட்டுப் போக வேண்டும் என்று ஆகி விட்டது. அயல் என்று ஆரம்பத்தில் தந்தையாரின் நண்பர் ஒருவரும் ஒரு சிங்களக் குடும்பமும் மட்டும் தான் இருந்தார்கள். பின்னால் ஒழுங்கையில் வீடு கட்டி வந்தவர்கள் தந்தையாரோடு கூடக் கற்பித்த ஆசிரியர்கள். அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆதலால் தீபாவளி கிடையாது.

ஆனாலும் ஒரு 'அங்கிள்' எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று வாழை வெட்டி வைத்துத் தீபம் ஏற்றிக்காட்டினார். ;) சந்திரகிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று பந்துகள் கொண்டு விளக்கம் கொடுத்தார். அப்போ  எங்கள் பகுதிக்கு மின்சார இணைப்புக் கிடையாது. சிமிளி விளக்கை வைத்து... ;)

ஊருக்குப் போனால் எல்லோரையும் பார்க்க வேண்டும்.

பொறுமையாக நிறைய விஞ்ஞான விளக்கங்கள் தருவார் அங்கிள். அவர்கள் வீடு சோலை போல் இருக்கும், அத்தனை மரங்கள். தொட்டி தொட்டியாக மீன்கள், ஆடு, மாடுகள். ஒரு தொட்டியில் 'மீன்களுக்குத் தீன்' என்பதாகப் புழுக்கள் கூட வளர்த்தார்.

இங்கு தீபாவளி... சென்ற வருடம் கடையில் ஒரு சிட்டி விளக்கைக் கண்டு பிடித்து வாங்கி வந்து 'கனோலா' எண்ணெயில் தீபமேற்றி அணையும் வரை வாசலில் வைத்திருந்தேன். பிள்ளைகள் இருவரும் என்னை வினோதமாகப் பார்த்தார்கள். (அந்தத் தீபத்தைத்தான் படம் எடுத்து வாழ்த்துப் போட்டேன்.)

இம்முறை இங்கு ஒரு 'அங்கிள்' வீட்டுக்குப் போனோம். அன்று அவர்களுக்குத் திருமணநாள். எனவே இரட்டைக் கொண்டாட்டம் - கேக், உளுந்துவடை, பருப்புவடை, ரோல் & பச்சைச் சம்பலோடு. செபாம்மாவும் கூட வந்தார்கள்.  'அன்ரி' போடும் கோப்பி சுவையாக இருக்கும்.

இம்முறை தீபாவளி அன்றுதானே Guy Fawks Day.

மறுநாள் ஏஞ்சல் வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு, 'வாண வெடிகள் வாங்கி இருக்கிறோம். வெடிக்க வருகிறீர்களா?' என்று. இது தீபாவளிக்காக அல்ல. Guy Fawks வெடிகள். இந்த வாரம் மட்டும் வாண வெடிகளுக்கு அனுமதி உண்டு.

இங்குள்ள வீடுகளில் அதிகமானவை பலகை வீடுகள்.எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்ற வாரம் எல்லா வகுப்புகளிலும் Fireworks safty தொடர்பான வகுப்புகள் எடுக்கப்பட்டன.

ஏஞ்சலில் அழைப்பை ஏற்று நானும் க்றிஸும் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்குப் போனோம். இங்கு இப்போ அஸ்தமனம் தாமதமாவதால் பேச்சு, ஒரு கோப்பி & உலர் பழங்கள் என்று பொழுது போக்கிவிட்டு இருள ஆரம்பித்ததும் வெளியே இறங்கினோம். 

படங்கள் தெளிவாக இல்லை, பொறுத்தருள்க. ;))

Thursday 4 November 2010

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இமாவின் உலகுக்கு வருகைதரும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் இமா

Monday 1 November 2010

கார்த்திகை பூத்தது

பெண்களின் விரல்களைக் காந்தள் மலருக்கு ஒப்பிடுவார்கள்.

திருகோணமலையில், என் வீட்டுத் தோட்டத்தில் நின்றது ஒரு கார்த்திகைச்செடி; அழகாக நெருப்பு வர்ணங்களில் பூக்கும்.

அது எப்படி என் தோட்டத்திற்கு வந்தது!

சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தால்...
ஒரு தினம் உப்புவெளியில் இருக்கும் என் பெரியதந்தையார் வீடு சென்று திரும்புகையில் பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது, வேலியோரத்தில் காடாய் முளைத்துப் பூத்துக் கிடந்த காந்தள்மலர்கள் மனத்தைக் கவரவும், கடத்தி இருந்தேன் கிழங்குகளை. ;)

இங்கும் கிழங்குகளை ஓர் கடையில் கண்டேன். ஆசையில் வாங்கிவந்தேன்.
வாங்கி வந்த இரண்டு கிழங்குகளில் ஒன்று மட்டும் செடியானது. 
மொட்டு விட்டது. பூக்க ஆரம்பித்ததும் தான் இது வேறு நிறம் என்பது தெரிந்தது.
 
இங்குள்ள எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு வேறுபாடு தெரிகிறது. ;)
ஆயினும் அழகு அழகுதான்.
அதில் மாற்றம் இல்லை.
அதுபோல் அவை இங்கு கார்த்திகையில் பூக்கவும் இல்லை.

முதல் முறையாகக் காய்த்ததை அவதானித்தேன்.
நீளமாக, பார்க்க ஓகிட் செடியில் வளரும் காய் போல் இருந்தது. எதிர்பார்த்ததற்கும் முன்பாக முதிர்ந்து காய்ந்தது. முத்து முத்தாய் விதைகள், சோளமுத்துக்கள் போல்.
முளைவிடுமா, நடுகைக்கு ஏற்ற காலம் எது என்பது போன்ற அறிவு எனக்கு இல்லை. செடி உள்ள அதே சட்டியில் புதைத்து விடலாம். முளை விட்டால் இதுதான் என்று தெரிந்து கொள்வேன். பார்க்கலாம்.
~~~~~~~~~~~~
காந்தள்மலர் கண்ணில் படும் போதெல்லாம் சுவாமி விபுலானந்தரின் 'ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று' தவறாமல் நினைவு வரும். இப்போதும் வருகிறது.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
~~~~~~~~~
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
~~~~
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

Friday 15 October 2010

லைன்ல வாங்கோ

ஹாய்! ப்ரெண்ட்ஸ்!

ஒரு அறிவித்தல்
இங்கு ஜீனோவைத் தவிர மற்ற அனைவருக்கும் 'பப்பி ஃபேஸ்' பெய்ன்ட் செய்துவிடப்படும்.
ஜஸ்ட் $ 1.00 (NZ)

வரிசையா வாங்கோ பார்ப்போம்.

பி.கு
பப்பிக்கு மட்டும் ஸ்பெஷலா 'டோரா ஃபேஸ்' இலவசம். ;)))

Wednesday 13 October 2010

என்ன சொல்கிறீர்கள்!!

வரப்போகும் சனிக்கிழமை (16/10/2010) எங்கள் பாடசாலை வருடாந்தச் சந்தை - School Fair நடைபெற இருக்கிறது.
கடந்த ஒன்பது வருடங்களில் ஒரு முறை வீட்டுத்துணிகள் (லினன்) விற்பனைப் பிரிவிலும், மீதி எட்டு வருடங்களும் விளையாட்டுப் பொருள் விற்பனைச்சாலையில் வேறு இரு ஆசிரியர்களுடனும் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். முதல் வருடம் பழக்கமில்லாததால் சங்கடமாக இருந்தது. இப்போ ரசிக்கிறேன். பிடித்திருக்கிறது.

இம்முறை 'ஃபேஸ் பெய்ன்டிங்' பொறுப்புக் கிடைத்திருக்கிறது, தயாராகிறோம். 

முன்பு ஒரு முறையும் இதற்காகப் பாதி வேளையில் என்னை இழுத்துப் போய் விட்டார்கள். இன்னொரு முறை பலூன் விற்றேன். ;) ஒரு முறை பணப்பெட்டிக்குக் காவல் வைத்தார்கள். திடீர் திடீரென்று வேறு வேலைக்கு இழுத்துப் போய் விடுவார்கள். எது செய்தாலும்.... ஜிலுஜிலு என்று ஒரு தொப்பி, முகத்தில் ஒரு படம்... வந்தீர்களானால் என்னை அடையாளம் காண மாட்டீர்கள். 

இது எங்கள் நாள். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சந்தோஷமாக ஒன்று கூடும் நாள்.

என்னிடம் கைவினை கற்கும் மாணவிகள் இருவர் கூட்டாக வாழ்த்திதழ்கள் தயாரித்து விற்று அந்தப் பணத்தைப் பாடசாலைக்குக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் வயதுக்குச் சுலபமல்ல இந்த வேலை. பாருங்களேன்...
சிலுவை - ஐரிஸ் ஃபோல்டிங் - அறிமுகம் செய்து வைத்த அறுசுவைத் தோழிகள் நர்மதாவுக்கும், வாணிக்கும் என் நன்றிகள்.

மீதி இரண்டும் பிரதானமாக எம்போஸிங் முறையில் தயாரானவை.

சென்ற தவணை அனேகமான காலை & மதிய போசன இடைவேளைகளை வகுப்பறையில் செலவழித்திருக்கிறார்கள். எப்போ இவர்களைத் தேடிப்போனாலும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டு, உணவு அருந்திக் கொண்டு அதே சமயம் மும்முரமாக வேலையில் இருப்பார்கள்.
இந்தத் தொகுதியிலுள்ளவை எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. வெகு நேர்த்தியாக இருந்தது வேலை.
சூரியகாந்தி - நாட்காட்டியிலிருந்து
ஸ்டிக்கர் & ரிப்பன்
ஸ்டொகிநெட் வண்ணத்துப் பூச்சி & கிஃப்ட்ராப்
விடுமுறைக்காலம் கூட இருவருக்கும் இந்த வேலையில் தான் போயிருக்கிறது. அனுபவித்துச் செய்திருக்கிறார்கள்.
அழகான ஆந்தை
தையல் வேலை
ஒரு விடயத்தை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இதில் என் பங்கு அதிகம் இல்லை. யோசனை சொன்னேன். எப்போவாவது மேற்பார்வை செய்தேன். ஊக்கம் கொடுத்தேன். மீதி எல்லாம் அவர்கள் வேலைதான். தாங்களாகவே விலையும் நிர்ணயம் செய்தார்கள். 50 சதம் முதல் $3.50 வரை ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயித்திருந்தார்கள். ஆசிரியர்களிடம் விற்பனையை ஆரம்பித்தார்கள். தபாலுறைகள் இல்லாதது யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.நன்றாக விற்பனையாகின்றன.

முதல் நாள் விற்பனை $11.50. இன்று $13.00

சந்தைக்கு நடுவே 2 நாட்கள் மீதமுள்ளன.

வெள்ளிக்கிழைமை மதிய இடைவேளையின் பின் மீந்திருப்பவற்றுக்கு தபாலுறைகள் தயாரித்து இணைக்க இருக்கிறார்கள். தேவைப்பட்டால் விலைக்குறைப்பும் பரிசீலிக்கப்படுமாம். முழுவைதையும் விற்று முடிப்பதுதான் அவர்கள் நோக்கம்.
கீழே உள்ளவை நிறைவுறாதவை.

பதினொரு வயதான இவர்கள் திறமையையும், பாடசாலைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி சான்றிதழுக்கு சிபாரிசு செய்யலாம் என்று இருக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள்!!

Monday 4 October 2010

மலர்களே! மலர்களே!

முன்பு இரண்டு ரஷ்ய மாணவிகளைப் பற்றிக் கூறினேன் அல்லவா! அவர்கள் இறுதி நாள் அன்று எனக்காகக் கொடுத்தவை இந்த மலர்களும் வாழ்த்திதழ்களும்.
மலர்களாக மலர்ந்துள்ளவை, மீள்சுழற்சி செய்யப்பட்ட முட்டை அட்டைப் பெட்டிகள்.
சில நாட்கள் கழித்து ஒரு மாணவி வீட்டார் நன்றி தெரிவித்து மின்னஞ்சல் செய்தி ஒன்றினைப் பாடசாலைக்கு அனுப்பி இருந்தார்கள்.
என்னை இங்கு பின்தொடரும் மற்றொரு மாணவியிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல்கள் வருகின்றன. ;)

Sunday 3 October 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்



கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். ;)))


இமாவின் உலகப் பிரசித்தி பெற்ற கட்லட் பாடசாலை நிகழ்வொன்றுக்காகத் தயாரானது. கிளம்பும் சமயம் பார்த்தால் வெற்று ஐஸ்க்றீம் பெட்டிகள் எதனையும் காணோம்.

அவற்றில் கொண்டு போனால் திரும்பக் கொண்டுவருவதைப் பற்றி யோசிக்கத் தேவை இராது. தவிர ஒரு பெட்டி, ஒரு டின் மீனில் செய்த கட்லட்டுக்குச் சரியாக இருக்கும்.

பெட்டிகள் கண்ணில் படாது போகவே, அலமாரியில் இருந்து ஒன்றை வெளியே எடுத்து அதிலிருந்ததை வேறு பாத்திரத்தில் கொட்டி வைத்து விட்டு கழுவி எடுத்துப் போனேன்.


பாடசாலை மேசையில் இருந்த பெட்டியைக் காணோம். ;( தேடும் போது உமா சொன்னார் அது தனக்கென நினைத்து எடுத்து வைத்து விட்டாராம்.

எதற்காகக் கொண்டு வந்தேன் என்பதைச் சொல்லி விட்டு அவருக்கு இன்னொரு நாள் தனியாக வீட்டுக்கு எடுத்துப் போவது போல் செய்து வருவதாக வாக்களித்தேன்.


"என் பெயர் அதில் போட்டு இருந்தது. அதனால் எனக்குத்தான் என்று நினைத்து விட்டேன்" என்றார் மெதுவாக.
பெட்டியைப் பார்த்தேன். அவர் சொன்னது சரிதான் "உ மா"

"உங்களுக்குத் தமிழ் தெரியுமா?"
"எழுத்துக் கூட்டி மெதுவே வாசிப்பேன். பேச வராது," என்றார் ஆங்கிலத்தில்.
 
மாமாவுக்குக் கோமா வ(ர்)உமா!!

ஆமா! பக்கத்துல பாமா.

ஆமைக்கும் அடி சறுக்கிய தருணம் ஒன்று. ;)
மற்றது உண்மையில் சோளப்பூ தான். முன்பொருமுறை தோட்டத்தில் விளைந்தது.

இல்லாதது இமா -இட்லி மா.

Saturday 2 October 2010

பேரை மாத்தப் போறேன்ன்ன்ன்

ஏதோவொரு காரணத்துக்காக இணையத்தில் தேடலுலாப் போனால்... 
இமா பற்றிய சிறு குறிப்புக்கு - http://tinyurl.com/tamabb
இமா என்றால் என்றறிய - http://tinyurl.com/tamabb) :)

.....என்று விளம்பரம் செய்தது.

'அட! எம்மைப் பற்றி யாரோ தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்களே!' என்று பெருமையாக வந்தது.
என்ன பேசினார்கள் என்று அறியாவிட்டால் எப்படி! போய்ப் பார்க்கலாம் என்று சந்தோஷமாகப் போனால்...

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
டூ மச். ;(((

இங்கே பாருங்களேன்

இமா: இரண்டாம் மாடி = டூ மச்சு!


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இது உண்மையிலேயே டூ.... மச். ;((((
பேரை மாத்தப் போறேன்ன்ன்ன். ;(
சின்னதா அழகா ஒரு பேர் சொல்லுங்க....

Saturday 25 September 2010

இமாவும் தமிழ்த் தட்டச்சும்

நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(

இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்பது எனக்கு ஒரு கனவு.

பல வருடங்கள் முன்பு, ஊருக்கு வந்திருந்த என் சகோதரர் ஒரு கணனி வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தார். அப்போ அது ஏதோ பெரிய என்னவோ போல, தனி அறை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தது. (இந்த ஊரில் எனக்கே ஒரு அறை கிடையாது. ஹும்! )

ஸ்கூல் விட்டு வந்து வேலை எல்லாம் முடித்து விட்டு ஆட்டோ பிடித்துப் போய் கணனிக்கல்வி கற்றுவந்தேன். (இந்தக் காலகட்டத்தில் என் 'மேட் 50' க்கு    என்ன ஆயிற்று என்பது இப்போ நினைவுக்கு வரவில்லை.) எல்லோரும் சின்னச் சின்ன மனிதர்களாக இருக்க, நான் மட்டும் பொருந்தாமல் இருந்தேன். தட்டச்சு வேறு தெரியாது.

இரண்டு சிறு பெண்கள் மனமிரங்கி என்னைத் தோழியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை பார்த்தார். நாட்டைவிட்டு நிரந்தரமாகப் பயணப்படவிருப்பதை அவருக்கு மட்டும் சொல்லி இருந்தேன். "டீச்சர், என்னையும் உங்கட ப்ரீஃப் கேசில வச்சுக் கூட்டிக் கொண்டு போங்கோ," என்பார்.

பரீட்சையில் எனக்குத்தான் எல்லாவற்றிலும் அதிக புள்ளிகள் கிடைத்திருந்தது.  காரணம் என்று எனக்குத் தோன்றியது 1. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்தமை. 2. தட்டச்சு செய்வதில் என் வேகம் போதாவிட்டாலும் தட்டியவரை தவறு இல்லாமல் தட்டி இருந்தமை.

அங்கு கற்றது கைமண்ணளவுதான் என்பது பின்னால் புரிந்தது.

பிற்பாடு க்றிஸ் அலுவலகத்தில் ஒருவர் உதவியால் தமிழ் தட்டச்சு என்று ஆரம்பித்து, தேவை எதுவும் இல்லாத காரணத்தால் அப்படியே நின்று விட்டது. என் பெயருக்கான குறியீடுகளை மட்டும் மனனம் செய்து வைத்திருந்தேன்.

இங்கு வந்து வெகு காலம் கழித்து மீண்டும் அந்த ஆவல்.. எப்படியாவது தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். இங்குள்ளவர்களிடம் விபரம் எதுவும் பெயரவில்லை. ஊரில் இருந்து குறுந்தட்டு வரவழைக்கலாம் என்றார்கள். 

இலங்கையரிடமும் கேட்டு அலுத்து விட்டது. ஒரு குட்டி சிங்கள மாணவரைப் பிடித்தேன். அவர் சொன்னார், "மிஸ், ஜெனி மிஸ்ஸைக் கேளுங்கள். அவர் ஏதோ வலைத்தள உதவியோடு ஜேர்மன் மொழி தட்டுகிறார்," ஜெனியிடமும் கேட்டேன், முன்னேற்றம் எதுவும் இல்லை.

அலன் தன் வேற்று மொழித் தோழர்கள் ஆங்கில மூலம் தட்டச்சு செய்வதைச் சொன்னார். எல்லாம் அரைகுறைத் தகவல்களாக இருந்தன. ஒரு ரஷ்யத் தோழி ஒலிமாற்ற முறைத் தட்டச்சு பற்றிக் குறிப்பிட்டு விபரம் சொன்னார். அங்கிருந்து அவரது உதவியால் 'கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்' முறையில் தட்ட ஆரம்பித்தேன். என் சிந்தனை முறைக்கும் அதற்கும் ஒத்துப் போகவில்லை. தவறுகள் சரளமாக வந்தன. திருத்தத்தில் நேரம் அதிகம் செலவாயிற்று.

இதற்குள் தூயாவின் சமையல் கட்டு வழியாக அறுசுவைக்குள் நுழைந்திருந்தேன். எழுத்துதவி பிடித்திருந்தது. அதுவே என் நிரந்தர தட்டச்சு இயந்திரமாயிற்று. அங்கு தட்டி எங்காவது கொண்டு போய் வைப்பது நேரம் எடுத்தாலும் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டேன் என்பதில் பெருமையாக இருந்தது.

ஆனாலும் தமிழரல்லாத தமிழர் பலர் அங்கு உலவியது புரியாமல் குழம்பிய நாட்கள் அதிகம். ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி இருக்கிறேன். எப்போவாவது என் உலகுக்கு வருகை தருவார். இப்படி ஒன்று நிகழ்ந்ததே அவருக்கு நினைவில் இல்லை. ;)

அறுசுவையில் என் கைவினைகள் வெளியாக ஆரம்பித்தன. உண்மையில் புகைப்படக் கருவியோடு சுற்ற ஆரம்பித்தது அதன் பின்தான். படங்கள் திருப்தி தரவில்லை என்று சந்தேகம் கேட்டேன். தீர்வும் கிடைத்தது. அதிகம் உதவியவர் அறுசுவை நிர்வாகி சகோதரர் பாபு அவர்கள்தான். (இங்கு ஜெய்லானி)

அதற்கு முன்பு வீடியோக் கருவியோடு மட்டும் அலைவேன்.
அறுசுவை சிறிது சிறிதாக என் கூட்டை விட்டு என்னை வெளியே கொண்டு வந்து விட்டிருக்கிறது. நட்பு வட்டம் பெருகி இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

~~~~~~~~~~~~~

ம்.... நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(


இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.....

சேமித்து வைத்து பிற்பாடு வலைப்பூவுக்குக் கடத்தலாம் என்பதாக எண்ணம். எகலப்பை நிறுவ வைத்த சகோதரருக்கு நன்றி. ;)

அது ஒரு சுவாரசியமான கதை. ஒரு நாட்காலை.. தினமும் இப்படிக் காலையில் ஒரு முறை மின்னஞ்சல் இருக்கின்றதா என்று பார்த்து விட்டுப் போக வருவேன். அப்படி வந்தேன். என் அன்புக்குரிய சகோதரரும் அரட்டைக்கு வந்தார். எப்போதாவது தான் அரட்டை என்பதால் நான்கு வரி பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்துத் தொடர்ந்தால் அப்படி இப்படி அன்றே 'ஆன்லைன் வகுப்பு' எடுத்து எகலப்பை நிறுவ வைத்து விட்டார்.

எனக்குப் பாடசாலைக்கு நேரமாகிவிடுமோ என்கிற தவிப்பு. இதையும் விட முடியவில்லை. விடாது தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த அறிவுறுத்தல்களைப் பின்தொடர்வது சிரமமாக இருந்தது. எனக்குக் கணனி மொழி தெரியவில்லை. ;( சகோதரரோ விடுவதாக இல்லை. ;) எனக்குப் புரியக் கூடிய எளிமையான மொழிநடையில் அறிவுறுத்தல்கள் வர ஆரம்பித்தன.

"அதெல்லாம் இருக்கிற ஐந்து நிமிடநேரம் போதும்," என்று ஆரம்பித்து... ;) என் தடுமாற்றத்தால் நேரம் கடந்து கொண்டே இருந்தது. நடு நடுவே "சீக்கிரம், பாடசாலைக்கு நேரமாகிறது," என்று வேறு மிரட்டி வயிற்றில் புளியைக் கரைத்தார். ;)) இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. ;) மறக்க முடியாத அனுபவம். ;)

பிறகு... வெற்றிகரமாக வேலை முடிந்ததும் ஒரு சரிபார்ப்பு. ;) "தமிழில் தட்டு," "இப்போ ஆங்கிலத்தில் தட்டு," ஒருவாறாகத் திருப்தியாகி "சரி, இப்போ க்ளாஸ் எடுத்து முடிஞ்சுது. இனி நீங்க போய் உங்க க்ளாசை எடுக்கலாம்," என்று விடுவித்தார். ;)) 'அப்பாடா!' என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிப் பாடசாலைக்கு ஓடினேன்.

என் 28 வருட அனுபவத்தில்... எத்தனை பேரோடு கற்பித்திருப்பேன்! இப்படி ஒரு ஆசிரியரைக் கண்டதே... இல்லை. பிரமிப்பாக இருந்தது. ;) எடுத்த நோக்கத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்கிற வைராக்கியம்... நான் நிச்சயம் இப்படி இல்லை. ;)

ஒரு விடயம் உண்மை. என்னை வேறு யாரும் இதுபோல் 'ட்ரில்' வாங்கியது இல்லை. ;))

அன்று எடுக்கப்பட்ட வகுப்பின்போது சொல்லப்பட்ட முக்கியமான கருத்து ஒன்று, "இந்த மாதிரி டவுன்லோட் பண்ணி வச்சா எங்க வேணுமானாலும் தமிழில் தட்டலாம்."

'நான் என்ன தட்டப் போகிறேன்,' என்று அப்போ நினைத்தேன். இப்போ புரிகிறது, உண்மைதான். நிறையத் தடவைகள் நன்றி சொல்லியாயிற்று என்பதாலும் சகோதரர் இதைப் படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்று கருதியும் இங்கு நன்றி நவிலவில்லை. ;))

(இந்த நிகழ்வு பற்றி எனக்கொரு சந்தேகமும் இருக்கிறது, சரியோ தெரியவில்லை. ஒரு வேளை... அரட்டையில் என் இலங்கைத் தமிழைத் தமிங்கிலத்தில் படிக்கச் சிரமப்பட்டு அதைச் சொல்லாமல், என்னை இப்படித் தமிழில் தட்டவைக்க மேற்கொண்ட முயற்சியாக  இருக்கக் கூடுமோ!!!... ;))

Friday 17 September 2010

!!!

இது என் கைவண்ணம், கருப்பு வண்ணம். ;)



 தலைப்பிட்டு உதவுங்களேன்.
~~~~~
இன்று முதல் இமாவின் உலகில் கைவினைப் பகுதி 'craft' என்று ஆங்கிலத் தலைப்பின் கீழ் தென்படும். தமிழ் தெரியாத என் மாணவி ஒருவர் கைவினைக்காகப் பின்தொடர்கிறார்.

Monday 13 September 2010

உன்னைப் போல் உன் அயலானையும் நேசி!

எங்கள் வீட்டுக் குட்டித் தேவதையைத் தெரியுமில்லையா!
அவர் எனக்காக ஒரு 'தாங்க் யூ கார்ட்' தயார் செய்து வைத்திருந்தார். உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

தேவதையின் ஆன்ட்டியும் தேவதையாகத் தானே இருக்க வேண்டும். ;)

இந்தப் படத்தைப் பாருங்களேன். ஆன்டிக்கும் அதே போல் சீருடை. ;)))

கவிஞர்கள் மீன்விழியாள் என்று வர்ணிப்பார்களே, அது இது தானோ!! 

தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)