Friday 30 September 2011

Who is online today!!!


Expect the unexpected. ;))

இண்டைக்கு இருக்கிறது நானே..தான் - இமா. ;)

இனிமேல் 'இமாவின் உலகம்' மெல்லமாத்தான் சுழலும் போல இருக்கு.

கை, கைவிடப் பார்க்குது... இப்ப ரெண்டு கையும். நான்தான் இனிக் கவனமா இருக்க வேணும்.
http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001485/

http://en.wikipedia.org/wiki/Tennis_elbow

எப்பவும் போல எனக்கு உங்களோட தொடர்பு இருக்க வேணும் எண்டால் மெல்லமா எண்டாலும் உலகம் சுழல வேணும். ஏலுமான நேரம் சின்னதா ஏதாவது பகிர்ந்து கொள்ளுறன். ஏலாத நேரம் படம் காட்டுறன். ;)
கருத்துச் சொல்ல வேணும் எண்டு கட்டாயம் இல்ல. பார்த்திட்டு மனசுக்குள்ள ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டுப் போனால் போதும். ;)

உங்கட வலைப்பூ இடுகைகள் எல்லாம் கட்டாயம் வாசிப்பன்; கருத்துச் சொல்ல இல்லயெண்டு மட்டும் குறை நினைக்கப்படாது ஒருவரும்; என்ட ஃப்ரெண்ட்ஸ் நீங்கள் - அப்பிடி நினைக்க மாட்டீங்கள் எண்டு தெரியும். வாசிக்கிற நேரம் சுருக்கமாகவாவது கருத்து எழுதப் பாக்கிறன். இல்லாட்டியும் நான் வந்தது உங்களுக்குத் தெரியவரும். ;)
ஏலும் எண்டு கனக்க எழுதினால் அடுத்தடுத்த நாட்களிலதான் பிரச்சினை ஆகுது. அதால இனி ஏலும் எண்டாலும் எழுத்தைக் குறைக்க வேணும்.

சரி, சந்தோஷமாக, சுகமாக இருங்கோ எல்லாரும்.
எப்போதும் போல் அடிக்கடி சந்திப்போம்.
அன்புடன்
இமா க்றிஸ்

Who is online now?

Thursday 29 September 2011

Who is online?


Surely not imma. ;)

It's U...
You are online now. ;)

Friday 23 September 2011

கல்லூரிச் சிட்டுக்கள்

நாங்கள் ஊரில 'interval' எண்டுறத இங்க 'morning tea' எண்டுறாங்கள்; 'lunch interval' - 'afternoon tea' ஆகி இருக்கு. ஜெனி எப்பவும் 'recess' எண்டுவா; அவ 'Aussie'.
 
எங்கட 'department' நாற்சார் வீடு மாதிரி. நடுவில சின்னதா 'courtyard'... மூன்று 'bbq' மேசைகள், 'drinking fountain', 'worm bin' & 'dust bins' இருக்கு.
எங்களுக்கு 'morning tea' முடிய, இவைக்கு 'morning tea'.
'cup cake', 'pizza', 'pie' & 'sandwich' ஓரங்கள்... இப்படி விதம்விதமாகச் சாப்பிடுவார்கள்.

உள்ள ஒரு ஆள் தனிய இருந்து சாப்பிடுறா. இங்க வெளியில சண்டைக்கு ரெடியாகுகினம் இவை.
சண்டை நடக்கேக்க குறுக்கால ஒரு சின்னன் வந்ததில படம் சரிவரேல்ல. பிறகு இவங்கள் சமாதனமாகீட்டினம், எடுக்கக் இடைக்கேல்ல. இன்னொரு நாள் பாப்பம்.

உள்ள சாப்பிட்டுக்கொண்டிருந்தவ இவதான்; வண்டியைப் பாருங்கோ. ;)) 

"அடுத்த பாடத்துக்கு மணி அடிச்சுக் கேக்குது." 

எனக்குத் தெரிஞ்சு... ஒரு ஆறு வருஷமா இந்தச் செவ்வரத்தமரத்திலதான் இவை குடியிருக்கினம். உள்ள கூடு இருக்குது.

சிட்டுக்குப் பின்னால 'Just juice' போத்தலில இருக்கிறது 'worm tea'. செடிகளுக்கு விடுறதுக்கு எடுத்து வச்சிருக்கிறம்.
சிட்டு, தொட்டித் தட்டில சேருற தண்ணீரையே 'tea' எண்டு குடிச்சுரும்.

Tuesday 13 September 2011

!!! - 'ஜூம்...'


~~~~~~~~~~~~
பின்னிணைப்பு - 14/Sep

;) பிறந்தநாள் பையனுக்காக கொஞ்சமா 'ஜூம்' போட்டு...

நிறைய 'ஜூம்ம்ம்' ;)
பிறகு....
கீழே இன்னொருவர் வந்தார்.
குரல் கேட்டு மற்றுமொருவரும் சற்று நேரத்தில் ஓடி வந்தார்.
போர்மூட்டத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன.
என்மேல் குதிக்காதிருக்க வேண்டுமே என்கிற பயத்தில் நான் 'எஸ்...' ;)

Monday 12 September 2011

வேண்டாத விருட்சமொன்று

 என்னைப் பாதித்த ஒரு விடயம்; பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.
பெரிதாக ஒன்றும் இல்லை; சின்னது என்றும் இல்லை.

ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே மின்னஞ்சலை அனுப்புவதாக இருந்தால்...... ஒருவர் மின்னஞ்சல் மற்றவருக்குத் தெரியுமாறு அனுப்ப வேண்டாமே. 

எனக்கு சிலகாலம் முன்பு ஒரு மின்னஞ்சல் வந்தது. இப்போ சிரமமாக இருக்கிறது. ஒன்றா! இரண்டா! எத்தனை மின்முகவரிகள்!! எண்ணவில்லை - ஒரு நூறு இருக்கும். அத்தனை பேருக்கும் என் முகவரி தெரிந்து... அவர்கள் அனுப்பிவைக்கும் போது, அவர்களுக்கும் தெரிந்து.... அவர்களிடமிருந்து மின்னஞ்சல் பெறுபவர்களுக்கும் தெரிந்து....

 குறிப்பிட்ட சகோதரருக்கு இனிமேல் இதுபோல் வேண்டாம் என்று செய்தி அனுப்பினேன். புரிந்துகொண்டார்; பதிலும் அனுப்பினார். பின்னர் அவரிடமிருந்து பொது மின்னஞ்சல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அவர் ஆர்வக்கோளாறாய் ஆரம்பித்து வைத்த சங்கிலி இப்போ என் மதிட்சுவரில் விருட்சமாய் வளர்ந்து விடுவேன் என்று பயமுறுத்துகிறது. ;(
காலையில் வேலைக்குப் போகுமுன் செய்திகள் இருக்கிறதாவென்று பார்க்க வந்தால்... யாரோ யாருக்கோ அனுப்பி இருக்கும் செய்தி எனக்கும் வந்திருக்கும்.
சில செய்திகள் அந்த நாளையே பாதித்துவிடுகிறது. என்னைப் போலவே சிரமப்படும் யாராவது தங்கள் மின்முகவரியை  நீக்கி விடுமாறு செய்தி அனுப்பி இருப்பார்கள். அது எனக்கு இல்லாவிட்டாலும்.... எனக்கு வருகிறது; சங்கடமாக இருக்கிறது.
எப்போவாவது திட்டிக் கூட ஒரு மின்னஞ்சல் வரலாம். இனி எதுவும் செய்ய இயலாது... அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ;(

முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ID, பிறந்த தேதி, குடும்ப விபரம் எல்லாம் தனிப்பட்டவர் சொத்து. சொந்தக்காரர் அனுமதியின்றி இன்னொருவருக்குக் கடத்துவது சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.

என் மின்னஞ்சல் முகவரி எல்லோருக்கும் தெரியவேண்டும் என்று விரும்பி இருந்தால் நானே இமாவின் உலகிலோ, 'ஃபேஸ்புக்' பக்கத்திலோ கொடுத்திருப்பேனே.

நாம் எம் நட்புவட்டத்துக்கு உதவியாக இருக்கிறோமோ இல்லையோ, உபத்திரவமில்லாமல் இருப்பது முக்கியம்.

ஒரே செய்தியைத் தனித்தனியே அனுப்புவது நேரம் எடுக்கும் என்று நினைத்தால் மற்றொரு சுலபமான வழி இருக்கிறது. 
பெறுநர் விலாசம் - உங்களுடையதாக இருக்கட்டும். (உங்களுக்கு முதற்பிரதி வரும்.) Add Cc தெரிந்துகொள்வதற்குப் பதில் Add Bcc தெரிந்துகொள்ளுங்கள். அங்கு அனுப்பவேண்டிய அனைவர் மின்னஞ்சல்களியும் ஒன்றாகப் பதிந்துகொள்ளுங்கள்.

ஒருவர் மின்னஞ்சல் மற்றவருக்குத் தெரியாது.

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். ;)) அதற்குக் கூட மருந்து இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு!!!!!!!

Sunday 11 September 2011

விடுமுறைகள் தரும் பரிசுகள்

விடுமுறைகள் என்றாலே மகிழ்ச்சிதான். கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாகும் ஒவ்வொரு விடயமும் வெகு நாட்கள் நினைப்பில் வந்து வந்து மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டு இருக்கும்.
சில விடுமுறைகள் மட்டும்... மருந்து மாத்திரைகள் பின்விளைவுகளை விட்டுச் செல்வது போல சில பின்விளைவுகளை விட்டுச் செல்கின்றன. இதற்கெல்லாம் பயந்து கொண்டு வீட்டோடு இருந்துவிடமுடியுமா என்ன?

இரண்டு வாரங்கள் முன்பாக நல்லவிதமாக ஒரு நோய்த்தொற்று என்றேனே... அப்போ ஒரு வாரம் விடுப்பிலிருந்தேன். பொழுது போகவில்லை. வீட்டு வேலையும் பார்க்க இயலவில்லை.
நகங்களை எல்லாம் சுத்தம் செய்து புதிதாக வர்ணம் பூசலாம் என்று தோன்றிற்று. என்னில் நான் ரசிக்கும், பெருமைப்படும் பாகங்கள் அவை. ;))
“சுப்பர் சிங்கர்’ பார்த்துக் கொண்டே பஞ்சில் ‘ரிமூவரை’ தொட்டு எல்லாம் நீக்கியாயிற்று. மீந்திருந்தது கைவிரல் நகங்களுக்கு அடியிலிருந்த மருதாணிச் சாயம் மட்டுமே.
அடுத்த வர்ணத்தைத் தொட்டு வைக்கத் தயாரானேன். எப்பொழுதும் இடதுகால் பெருவிரலில்தான் ஆரம்பிப்பேன். அந்த நகம் இம்முறை வித்தியாசமாகத் தோன்றியது.
 
சற்று தொடர்பு விட்டிருந்தது.
ஃபங்கஸ் தொற்று என்று தோன்றிற்று. கூடவே நிறைய சந்தேகங்கள், சிந்தனைகள். அழகு என்பது இரண்டாம் பட்சம்தான். இந்த நிலை தொடர்ந்தால்!! நகம் விழுந்துவிட்டால்!! சப்பாத்துப் போடாமல் குளிர் காலங்களை எப்படிக் கடத்த முடியும்!! சப்பாத்துப் போட வலிக்குமே! ஏதாவது தட்டுப் பட்டால் வலிக்கும். கோடையில் செருப்புப் போட்டால் அசிங்கமாகத் தெரிந்து வைக்கும். நினைக்கவே கஷ்டமாக இருந்தது. ;(
மூன்று நாட்களுக்கு குடும்ப வைத்தியரிடம் ‘பார்வை நேரம்’ கிடைக்கவில்லை. நான்காம் நாள் பார்த்தும் “இது ஒனைகோலைசிஸ்” என்றார். எல்லா நகங்களையும் உள்ளபடி காணட்டும் என்று பூச்சிடாமல் விட்டிருந்தேன். இந்தியர், தமிழ் பேசுவார் இவர். இவரிடம் போக ஆரம்பித்த பின் என் ஆரோக்கியம் பற்றி ஒரு பாதுகாப்பு உணர்ச்சி வந்திருக்கிறது.

இங்கு வந்தது முதல் ஒரு இந்தியத் தமிழ் வைத்தியரிடமே காட்டி வந்தோம். கணவரும் மனைவியுமாக அருமையாகக் கவனித்தார்கள். திடீரென குடும்பத்தோடு அவுஸ்திரேலியா கிளம்பிப் போய் விட்டார்கள். ;( அதன் பிறகு நான் பட்ட சிரமம் அளவில்லை. ஒவ்வொரு தடவை ஒவ்வொரு வைத்தியர் இருப்பார்.

இவர்களிடம் போய்ச் சேர மூன்று மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இருந்தாலும், பயனுள்ள காத்திருப்பு; பார்த்த மாத்திரத்தில் நோயைக் கண்டு பிடித்துவிடுவார்.

என் நக அழகுப் பைத்தியம் பற்றித் தெரிந்திருந்ததால் “கவலையாகத்தான் இருக்கும். ஆனால் கூடுமான வரை ஒட்ட வெட்டிவிட்டு போய் ‘சாம்பிள்’ கொடுத்துவிட்டு வாருங்கள்,” என்றார்.

ஃபங்கஸ் தாக்கம் என்றால் மூன்று மாதம் மருந்து கொடுப்பாராம். வேறு காரணமாக இருந்தால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும், அது தானாகவே மாறுகிற போது மாறும். மாறாவிட்டால்... இப்போது செய்வது போல் பூச்சுப் பூசி மறைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்றும் சொல்லி அனுப்பினார்.

நகத்தை நறுக்கிக் கொண்டேன். பரிசோதனைச்சாலையில் இம்முறை வழக்கமான கேள்விகளுக்கும் மேலதிகமாக இரண்டு கேள்விகள் கேட்டார்கள். 1. சமீபத்தில் எப்போதாவது பொதுக் குழியலறை பயன்படுத்தியதுண்டா? 2. சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டீர்களா? கேட்டுக் கொண்டு மீதமிருந்த பாதிக்கப்பட்ட பகுதியையும் நறுக்கிக் கொண்டார்கள்.
 
தை மாதம் - இலங்கையில் என் விடுமுறைக்காலம், மழைக்காலமாக இருந்தது. தெருவில் ஓடிய அழுக்கு நீரில் கால்கள் நனைந்து வெகு நேரம் ஊறி இருந்த நாட்கள் அதிகம்.

வெள்ளியன்று பாடசாலை முடிந்து வந்து பார்த்த பொழுது தொலைபேசியில் பதிவானதொரு செய்தி இருந்தது. “உங்கள் நகத்துக்கான முடிவு தெரிந்துவிட்டது. வைத்தியர் சொன்னதுதான். மருந்துச் சிட்டை தயாராக இருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுங்கள். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை,” தாதியின் குரல்.

நிறமில்லா நகப்பூச்சுப் போல் சின்னதாக இரண்டு குப்பிகள் கிடைத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பகுதி நகத்தை ஒட்ட நறுக்கி விட்டு மேற்புறத்தைச் சுரண்டிக் கொள்ள வேண்டும். முதல் மாதம் ஒன்றுவிட்டொரு தினம் பூச வேண்டும். வாரமொருமுறை ‘ரிமூவர்’ கொண்டு சுத்தம் செய்து “நெய்ல் ஃபைல்” கொண்டு சுரண்டிக் கொள்ள வேண்டும். மருந்தில் வெடிப்புத் தெரிந்தால் இட்டு நிரப்ப வேண்டும். இரண்டாம் மாதம் வாரம் இருமுறையும் மூன்றாம் மாதம் வாரமொருமுறையும் பூச வேண்டும். மாத்திரை என்றால் சுலபம் போல் தோன்றுகிறது; சட்டென்று வாயில் போட்டு முழுங்கி விடலாம். பரவாயில்லை, ஒரு தீர்வு சொன்னார்கள் என்பது நிம்மதியாக இருக்கிறது.

முதற் சந்திப்பில் வைத்தியர் “கூகிள்’ செய்து பாருங்கள்,” என்று ஒரு கடதாசியில் ‘onycholysis’ என்று எழுதிக் கொடுத்தார். கிடைத்த படங்கள் பார்க்க சங்கடமாக இருந்தது. என் நிலமை பரவாயில்லை என்பது மட்டும் ஆறுதலான விடயம். ;)

மழை, ஈரலிப்பு மட்டுமல்லாமல் நான் செய்யும் வேறு சில (பல) வேலைகளும் தவறாக இருப்பது இப்போ புரிகிறது. ;) சில தீர்மானங்கள் எடுத்திருக்கிறேன்; அவற்றில் முக்கியமானது... நகத்தினால் தட்டச்சு செய்வதில்லை என்பது. (key 'A' - யில் ஏற்கனவே பள்ளம் ஒன்று தெரிகிறது.)

பயமாக இருக்கிறதே. ;) 
Prevention is better than cure

Friday 2 September 2011

சின்னப் பாதங்கள்

குடும்பத்தில் சின்னதாய்ப் புதுவரவொன்று என்பது எவ்வளவு அற்புதமான விடயம். 
பால்வடியக் குறுநகை, பிஞ்சுக் கால்களால் தத்தித் தடுமாறி நடை, தப்புத்தப்பாய் உச்சரிக்கும் வார்த்தைகள்... அவற்றைப் புரிந்துகொள்ள நெருங்கியவர்களால் மட்டுமே முடியும். 

மனித வாழ்வின் அழகான ஆரம்ப நிலை இது. நாள் முழுக்க, ஏன் ஆயுள் முழுக்க ரசித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.
ஆனால் உண்மையில் இது தொடர்ந்தால்!!! ரசிக்க இயலுமா!!??

என் ஒரு மாணவருக்கு பாடசாலை முடியும் நேரம் அழைத்துப் போவதற்காக ‘டாக்ஸி’ வரும். தினமும் பாடசாலை மணி அடிக்கப் பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிடும். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றியதில்ல; எனக்கே அது நல்லதென்று தெரியும். பன்னிரண்டு வயதான இந்தச் சின்னவர் அளவில் சின்..னவர்; அறிவில் இன்னும் சின்னவர்.

நானும் முயற்சிக்கிறேன்; இன்னமும் விலாசம், வீட்டுத் தொலைபேசி எண் எதுவும் மனனம் செய்யவைக்க இயலவில்லை. யாராவது கூடப் போய் ஏற்றிவிடுவது அவருக்குப் பாதுகாப்பு; எங்களுக்கும் நிம்மதி என்கிற நிலை. 

இன்று புதிதாக ஒரு சாரதி வந்திருந்தார். அவர் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தி இருந்தார். நாங்கள் எங்கள் இடத்தில் அமர்ந்திருந்தோம். இப்படிக் காத்திருக்கும் நிமிடங்களை நான் வாய்மூலக் கல்வி & மீட்டல் வேலைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். 

அவ்வேளை என் முன்னாள் மாணவி ஒருவர் எம்மோடு வந்து அமர்ந்து கொண்டார். இவர் இந்தியர். “ஹாய் மிஸிஸ். க்றிஸ்!” என்று சிரிப்போடு மெதுவே வந்து முதுகுச்சுமையை வாங்கில் இறக்கிவிட்டு அமர்ந்தார்.

“பகலில் ‘moon boot’ அணியக் கூடாது,” என்றேன்.
நிமிர்ந்து பார்த்தார். “sun boot’ தான் அணிய வேண்டும். மூன் பூட் இரவில் அணிய வேண்டியது இல்லையா!” என்றேன். சிரித்தார்.
“எப்படி இருக்கிறீர்கள்?”
“குட்” “முப்பதாம் தேதி சத்திரசிகிச்சை முடிந்தது. (இரண்டு நாட்கள் முன்புதான்) இன்னும் ஒரு மாதம் கழித்து ஆதாரங்களை எல்லாம் நீக்கி விடுவார்கள். உடனே பிஸியோதெரபி ஆரம்பிக்க வேண்டும். என் தசைகளுக்கு பயிற்சியில்லாமல் போய் மாதக் கணக்காகிறது இல்லையா?”

ஆமாம்! இவர் Cerebral palsy பிரச்சினையுள்ளவர். மூன்று வருடங்களுக்கு முன்பு சில காலம் இந்தக் குழந்தைக்கு உதவியிருக்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகம்; கெட்டிக்காரி. கூட இருந்தால் அந்த சந்தோஷம் யாரையும் தொற்றிக் கொள்ளும். இடது கைதான் எழுதும்; சமயத்தில் புத்தகத்தை அழுத்திப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்பார். கோடுகள் வரைகையில் அடிமட்டத்தை ஒருவர் கட்டாயம் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அது நகர்ந்து கோடு சரிந்து போகும். இப்போ உச்சரிப்புத் திருந்தி இருக்கிறது.

கால்!!!

எப்போதாவதுதான் சந்திக்க முடிகிறதென்பதால் விபரம் அதிகம் தெரியவில்லை. பிறப்பிலிருந்தே சிறிதாகவும் பலமில்லாதும் இருந்த ஒரு காலைத் திருத்தும் முயற்சி நடக்கிறது. எப்பொழுதும் சரிந்து சரிந்து மட்டும் நடப்பவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக walker உதவியோடு நடந்து திரிந்தார். அப்போது ஒருநாள் விசாரித்த போது வெகு சாதாரணமாகச் சொன்னார் “எலும்பை உடைத்து விட்டு தகடு பொருத்தி இருக்கிறார்கள்,” என்று. மீண்டும் அடிக்கடி சத்திரசிகிச்சைகள்; இப்போ நடைவண்டி இல்லாமல்; ‘மூன்பூட்’ அணிந்து; சரியாமல் நேர்நடை நடக்கிறார். விரைவில் குறைதெரியாத அளவு மாற்றிவிடுவார்கள் மருத்துவர்கள். விஞ்ஞான வளர்ச்சி... மருத்துவ வளர்ச்சி... எதையும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கிறது.

இவர் இன்னும் சின்னவர். இந்த வருட ஆரம்பத்தில்தான் எங்கள் பாடசாலைக்கு வந்து சேர்ந்தார். ஏழாம் ஆண்டு மாணவர். ஒரு நாள் காலை தொலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல, மறுமுனையில் தந்தை பேசினார், “இன்று சத்திரசிகிச்சை என்று அறை பதினெட்டு ஆசிரியருக்குத் தெரிவித்து விடுகிறீர்களா?” தொலைபேசி அருகே நாடாவில் தொங்கும் சிறிய குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து விபரத்தைக் குறித்துவிட்டு வகுப்பாசிரியையிடம் போய்ச்  சொன்னேன். “என்ன!!!” என்று புதிராகப் பார்த்தார் அவர். சின்னவர் மூன்று நாட்கள்தான் பாடசாலைக்கு வரவில்லையாம். அதன்பின் கற்கவென்று இன்று வரை வரவில்லை.

அவரைச் சந்தோஷப்படுத்தவென்று, பெற்றோரைச் சொல்லி அழைத்துவர வைத்தோம். இரு முறைகள் கைத்தடிகளோடும் இரு முறை சக்கர நாற்காலியிலும் வந்தார், தலையில் முடியில்லாமல். ஆமாம், கால் எலும்பில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது. சிகிச்சைகள் நடக்கின்றன. இன்று முக்கிய சத்திரசிகிச்சை; எலும்பை முழுதாக எடுத்துவிட்டு செயற்கை எலும்பு பொருத்துகிறார்கள்.

இந்த அழகுக் குழந்தை குணமாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்; எல்லாக் குழந்தைகளையும் போல இனிமையாக தன் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும்.

 

சிரித்துச் சிரித்தே எல்லோரையும் சிறையிலிடும் என் செல்லக்குட்டி ஒருவர் இருக்கிறார். இவருக்கும் Cerebral Palsy தான். கடகடவென்று உயர்ந்து வருகிறார். (இவர் தந்தை அசாதாரண உயரமாக இருப்பார்.) சின்னவர் இப்போதே என்னைவிட உயரம். என்னால் தொடர்ந்து உதவ இயலுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இவரை அன்பாகக் கவனித்துக் கொள்ள சின்னவருக்குப் பிடித்தவராக யாராவது ஒருவர் அமைய வேண்டும்.

சிலருக்குத் தன்னம்பிக்கை ஆதாரம்; சிலருக்கு மலர்ந்த முகம் ஆதாரம். தங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தி சுற்றி உள்ளவர்களைக் கவர்ந்து அவர்கள் ஆதரவையும் பெற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் கிடைப்பவற்றைப் பற்றிக் கொண்டு மெதுவே படரும், படரத் துடிக்கும் இந்த இளம் கொடிகளுக்காக உங்கள் பிரார்த்தனைகளை வேண்டி நிற்கிறேன். 

நம்பிக்கையுள்ளோர் இந்தச் சின்னப் பாதங்களுக்காகவும் இவர்கள் போல் பிறந்து வளரும் அனைத்துப் பாதங்களுக்காகவும் ஒரு நொடி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

-    இமா