Thursday 28 April 2011

கையாலாகாத்தனம்

[l:-) இமாவின் உலகத்தார் அனைவருக்கும் அன்பு வணக்கம். 
கடந்த சில... அல்ல, பல மாதங்களாகவே தட்டச்சு செய்வது சிரமமாக இருந்து வந்தது.
இந்த வருஷம் வாழ்த்துக்கள் உட்பட இதுவரை 25 இடுகைகள்தான் பதிவிட்டு இருக்கிறேன். அவை கூட அதிகம் தட்டச்சு செய்யாமல் படங்களை இட்டு நிரப்பியவை. பலது ஏற்கனவே ஏதோ ஒரு சமயம் தட்ட ஆரம்பித்து அரைகுறையாக நின்ற பதிவுகள், இப்போ முடித்து வெளியிட்டவை.

எப்படியாவது சமாளித்து ஓட்டி விடலாம் என்று இதுவரை முயற்சித்து... இனி இயலாது என்கிற நிலைக்கு வந்தாயிற்று.

வலது கை கட்டாய ஓய்வு கேட்கிறது. மருத்துவ ஆலோசனையின்படி மெதுவே இடது கைக்கு வேலைகளை மாற்றிப் பழக்கிக் கொண்டு இருக்கிறேன். முறையாகத் தட்டச்சு கற்றதில்லை. என் வசதி போல் சில விரல்களைப் பயன்படுத்துகிறேன். ஆனால் பிடித்த வேலை. ;) தட்ட ஆரம்பித்தால் வேக வேகமாகத் தட்டுவேன்... பிறகு வேதனையில் இரவு உறக்கம் தொலைந்து போகிறது.

விடுபட்டுப் போன கடமைகள் நிறைய இருக்கின்றன, பதில் போடாத முக்கிய மின்னஞ்சல்கள் ஏராளம்; என் உலகத்து இடுகைகளில் கருத்துச் சொன்னவர்களுக்குச் சரியானபடி பதில் சொல்வதில்லை; பெற்றுக் கொண்ட விருதுகள் பல இன்னமும் இணைக்கப் படவில்லை.

அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.

இடது கையால் வேலை செய்வது சுலபமாக இல்லை. பழக்கம் இல்லை. அதிக நேரம் எடுக்கிறது. ஆனாலும் முக்கியமான வேலைகளைத் தவிர்க்க இயலவில்லை!
இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாம் தவணை வேறு ஆரம்பிக்கவிருக்கிறது.

எத்தனை நாளைக்கு ஸ்மைலியும் சுருக்கமான கருத்துக்களும் சொல்லிச் செல்வது! படிக்கிற வலைப்பூச் சொந்தக்காரருக்கு ஏனோதானோவென்று நான் கருத்துச் சொல்லி இருப்பதாகக் கூட எண்ணத் தோன்றலாம் அல்லவா? 

என் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டு வலைப்பூ உறவுகளிடமிருந்து தற்காலிகமாக விடைபெறலாம் என்று தோன்றிற்று.

இறுதித் தொடர்பதிவுக்கு அழைத்த விதத்தில் அதிராவுக்கு மட்டும் என் நிலை பற்றிச் சுருக்கமாகத் தெரியும். இப்போ மீதிப் பேரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்புகிறேன்.

சமீபத்தில் புதிதாகப் பின்தொடர இணைந்துள்ளவர்களை ஏமாற்றுவது போல் இருக்கிறது. கவலையாக இருக்கிறது. ;( மன்னியுங்கள்.

கை வலிக்கிறது என்று சொல்வதற்கும் கை வலிக்கத் தான் தட்டச்சு செய்ய வேண்டி இருக்கிறது. ;))

என் உலகில் சேமிப்பில் உள்ள இடுகைகள், முடிகிற வரை அவ்வப்போது தன்னால் வெளியாகும். வேறு பகிர்ந்து கொள்ள இருந்தால் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன்.  

கருத்துச் சொல்லாவிடினும் வழமை போல் உங்கள் அனைவர் இடுகைகளையும் படித்துக் கொண்டு இருப்பேன். ;) தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு என் நன்றிகள்.

அனைவருக்கும் மீண்டும் என் அன்பு

_()_

kia ora

மீண்டும் சந்திப்போம்

-    இமா

Tuesday 26 April 2011

கொழுக்கட்டைப் பின்னூட்டம்

ய்ம்.. யம் ;P
 மஹீஸ் ஸ்பேஸ் கொழுக்கட்டை

இந்தக் கொழுக்கட்டைக்கான குறிப்புக் காண இங்கே சொடுக்குக.

//கறிவேப்பிலை கிடைக்காத ஆட்கள் காதிலே கொஞ்சம் புகை வரவைக்கலாமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்........... // நானும் எங்க வீட்டு கறிவேப்பிலைச் செடியை //போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணியிருக்கேன். ஹிஹி! // ;))

Saturday 23 April 2011

வாழ்த்துக்கள்

கிறிஸ்தவ வலையுலக உறவுகளுக்கு இமாவிடமிருந்து ஈஸ்டர் வாழ்த்துக்கள்


இரண்டு முட்டைகள் திருட்டுப் போயிருக்கின்றனவே!
யார் எடுத்திருப்பார்கள்!!
ஒரு வேளை... அ.கோ.மு சாப்பிடும் ஆட்களோ! ;)

Friday 22 April 2011

சென்ற வருட அறுவடையிலிருந்து


ஊரில் இருக்கும் போது இப்படி ஒரு அச்சாறு போட்டு வைப்பேன். குறிப்பு என்று எதுவும் கிடையாது. என் கண்ணும் மனதும் சொல்கிறது தான் எதற்கும் அளவு. என் அதிஷ்டம், ஒரு பொழுதும் கெட்டுப் போனதில்லை; நன்றாகவே இருக்கும்.

இங்கு வந்து இதெல்லாம் மறந்து போய் விட்டது. மிளகாய் விலை அதிகம், சின்ன வெண்காயமும் கிடைப்பதில்லை.

மிளகாய்... சென்ற வருட அறுவடை தேவைக்கதிகமாக இருக்கவும் மூத்தவர் இந்த அச்சாறு செய்வதைப் பற்றி நினைவு படுத்தினார். அவருக்கு மிகவும் பிடிக்கும்.

இப்போ நான் சாப்பிடுவது இல்லை. நேற்றுத் தான் பார்க்கிறேன்... பெரிய சாடி முற்றாகத் தீர்ந்து போய் இருக்கிறது. இது ஒன்றுதான் மீதம்.

'குறிப்பு இருக்கும் என்று வந்தேன், ஏமாந்தேன்' என்று யாரும் சொல்லக் கூடாது. ;)

இம்முறை விடுமுறையில் சென்ற காரணத்தால் தோட்டம் போடவில்லை. இந்த வருட இறுதியில் அச்சாறு செய்கிற போது மறக்காமல் அளவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

Wednesday 20 April 2011

பஞ்சு தோசை & மஞ்சு சட்னி

கொஞ்ச நாளாக இந்தத் தோசையும் சட்னியும் மனதில் வந்து தொந்தரவு தருது. இது அசோக்நகர் ஸ்பெஷல்.

யாராவது இந்தச் சிவப்புச்சட்னி (வெங்காய சட்னிதான்) குறிப்புத் தந்தால் அவங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும். ;)) இது மாதிரிக் குறிப்பு வேணாம், இதே குறிப்புத் தான் வேணும். ;) பாப்பம், யார் சொல்றீங்கள் எண்டு.
அம்முலூ... எங்க இருக்கிறீங்கள்!!! ;)

அப்பிடியே..
முன்னால 'ஆஸ்மி' படத்தைப் பார்த்து ஏதோ 'பதர் பேணி' பற்றிக் கதைச்சீங்களே, அதையும் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டுப் போங்க.

Monday 18 April 2011

ப்ரொமீலியாட்ஸ்

இங்கு வந்த முதல் வருடம்... கணவர் வேலையொன்றில் இணைந்து, குழந்தைகளும் பாடசாலையில் சேர்ந்து விட்டதும் முதல் முறையாக பகற்பொழுதுகளில் தனிமையில் விடப்பட்டேன். அதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாத தனிமை, அயலாரையும் தெரியாது. நாடு புதிது, வீடு புதிது, இங்கு நிலவிய அசாத்திய அமைதியும் புதிதாக இருந்தது.

வேலைக்குப் போக அரசு அனுமதி இல்லை என்ற நிலையில் மௌன்ட் ஈடன் செஞ்சிலுவைச்சங்கக் கடையில் தொண்டராக இணைந்துகொண்டேன்.
 2004 ல் இப்போ இருக்கும் வீட்டை வாங்கிக் குடிபெயர்ந்தோம். அந்தச் சமயம் கூட வேலை செய்த ஓர் தோழி கொடுத்த அன்பளிப்பு இந்த ப்ரொமீயாட்களின் ஆரம்பம்.

இரண்டு வீடுகளுக்குப் பொதுவான இடம் இது. இதுவரை வெள்ளைக்கற்கள் பரவி இருந்தது. சமீப காலமாக 'ஸ்னோ ட்ராப்ஸ்' ஆக்கிரமிப்பு அளவுக்கதிகமாக இருக்கவும் அவற்றை நீக்கி மீண்டும் 'வீட்மற்'றைச் சரி செய்து... என்ன வைக்கலாம்!! அழகு ப்ரொமீலியாட்ஸ்.

இடையில் இருக்கும் குட்டிச் செடி பெயர் மறந்து போயிற்று. (நினைவு வரும்போது வந்து பெயரை இணைக்கிறேன்.) அது பக்கத்து வீட்டுக் காமினி க்றிஸ் (இவர் தெலுங்கர், கணவர் தாய்லாந்துக்காரர்) வீடு மாறிப் போகையில் கொடுத்தது. அழகாக ஓர் பூப் போலவே வளர்ந்திருக்கும்.

ப்ரொமீலியாட் ஒரு அன்னாசிக் குடும்பத் தாவரம்

முழு நேர வேலை கிடைத்ததன் பின்னாலும் விடுமுறைக் காலங்களில் கடைக்குப் போய் உதவி வந்தேன். நான் மட்டும் அல்ல, முக்கிய நாட்கள் மற்றும் வேலை அதிகம் உள்ள நாட்களில் என் முழுக் குடும்பமும் அங்கே இருப்போம். இன்று என் தோழிகள் யாரும் அங்கில்லை. முதுமை அனைவரையும் வீட்டோடு இருத்தி விட்டது. இருக்கும் யாரையும் தெரியவில்லை; முன்பு போல் நினைத்த பொழுது போவது என்பது சங்கடமான காரியமாக இருக்கிறது.

அங்கு போய் வந்த அடையாளமாக என்னிடம் உள்ளவை இந்த ப்ரொமீலியாட்களும் சில புகைப் படங்களும்  முப்பத்து மூன்றாவது வருட விழாவன்று ஐந்தாண்டு சேவைக்காக எனக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமும் தான்.  பத்திரமாக வைத்திருக்கிறேன் அனைத்தையும்.
இதை விட... கடை தொடர்பான பல நினைவுகள் மனதில் இருக்கிறது. என் தோழிகள் என்னை மறந்தது போல் நான் அவைகளை மறக்குமுன் எங்காவது பதிந்து வைக்க வேண்டும். ;(

Monday 4 April 2011

ஃபீஜோவா ஃபான்டெய்ல்

ஹலோ ஃபான்டெய்ல்!!
என் வீட்டுத் தோட்டத்தில், இப்படி ஒரு ஃபீஜோவாச் செடியில் 
இப்படிப் பூத்து...
(கீழிருந்து பார்த்தால் இலைகள் இப்படித் தெரியும்.)
  
இப்படிக் காய்த்து.... 
இப்படி என் சமையல் மேடையில் வந்து இருந்தவற்றை....
 இப்படி வெட்டி வைத்துச் சாப்பிட்டாயிற்று. 
யம்.. யம் ;P

ஒழுங்கற்ற அமைப்போடு இருந்த ஒன்று இப்படிப் பறவையானது.
 
 இது.. ஃபீஜோவா அல்ல, பொஹுடுகாவா - நியூஸிலாந்து கிறிஸ்மஸ் மரம்.

Saturday 2 April 2011

என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!!

என் சின்னவர் மட்டும் பயன்படுத்தும் மின்னழுத்தி இது. அவருக்கு செபா கொடுத்த அன்பளிப்பு.  ஒரு நாள் 'எரிந்த அடையாளம் வந்துவிட்டது,' என்று  சொன்னார்.

இந்தப் பொருளைக் கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.
எந்தப் பயனுமில்லை. ;((

ஆனால் கோடை வரவும், அது வைத்திருந்த இடத்தில் உருகி (melt) :) மேசையெல்லாம் பிசுபிசுத்துப் போய் இருந்தது. ;(
ஊரில் இருந்த காலத்தில் ஓர் நாள் பேச்சு சுவாரசியத்தில் கவனியாமல் நான் சூட்டோடு துணியை அழுத்திவிட அங்குள்ள அழுத்தியில் கரி படிந்து விட்டது. சோகமாக நான் பார்க்க அண்ணா உடனே "ஒரு பனடோல் போட்டா சரியாகீரும்," என்றார்.
தலைவலியா இது, பனடோல் போட்டுச் சரியாக்க!!

இங்கு வந்தபின் சின்னவர் மோசமாகக் கெடுத்துக் கொண்டார் அழுத்தியை. தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்கிவிடலாம். அதற்கு முன்...

இப்படி இருக்கிற அழுத்திக்கு அண்ணா சொன்ன மாதிரி பனடோல் போட்டுப் பார்த்தால் என்ன!!
குட்டி மாத்திரையைச் சூடு வாங்காமல் கையில் பிடிப்பது தான் கஷ்டம். 
ஒரு குறடு எடுத்துப் பிடித்துக் கொண்டேன்.
மாத்திரை அழுத்தியின் சூட்டில் தானும் உருகி கறையையும் உருக்கி விட்டது. ஒரு துணியால் அழுத்தித் துடைத்ததும் போயே போச். ;)