Friday 28 May 2010

தாரா வந்தேன்


ஹாய்! எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்? நான் மலாட் தாரா. (அப்பிடித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கிறன்.) சீவிக்கிறது இங்க\l/

பின்னால தண்ணி கொட்டுது பாருங்க, அது வாத்துக் குளம். இதுக்கெல்லாம் ஒரு சரித்திரம் இருக்கு.
இங்க வரைபடம் பார்த்துக் கொண்டு கமராவும் கையுமாக நிற்கிறவர்... இமாட பெறாமகன் என்று வைங்களன். ஒருவரும் பேர் கேட்கக் கூடாது, என்று சொல்லி இருக்கிறா. அவவுக்கு மொழி மாற்றக் கஷ்டமா இருக்குதாம். 

மற்றப் பக்கம் இந்த பீனிக்ஸ் மரங்கள் வடிவாக வளர்ந்து இருக்கு.

இது என்ட மூத்த மகள். மிச்சப் பிள்ளைகள் இங்கதான் எங்கயாவது சூரியக் குளியல் குளிச்சுக் கொண்டு இருப்பாங்கள். இவ போன வருஷம் பிறந்த ஆள். இந்த வருஷத்து முட்டைகளை ஒளிச்சு வச்சு இருக்கிறன். (தாரா பார்த்தால் பிரச்சினை, அதுதான்.)

இவங்கள் எங்கட குடும்ப நண்பர்கள். எப்பவும் எங்களோடையேதான் சுற்றிக் கொண்டு இருப்பாங்கள். கூடு மட்டும் மரத்தில கட்டுவாங்கள், நாங்கள் எங்கயாவது பற்றைக்குள்ள. சாப்பிடுறது எல்லாம் ஒன்றாகத்தான். நல்ல பிள்ளைகள்.

என்ட மனுசிக்கு ரெண்டு பேரிலையும் இந்த ஒரு ஆளோட மட்டும் நல்ல ஒட்டு. அப்பிடி என்னதான் கதை பொதுவாக இருக்குமோ தெரியாது.

கதை தொடங்கினால் இவர் மேல போய் நிண்டுருவார். தலைப்புப் பிடிக்கிறது இல்லையோ தெரியாது.

குருவியம்மா பப்பி மாதிரி, குளிக்கக் கள்ளம்.

இவவும் எவ்வளவோ ட்ரை பண்ணுவா, குளிக்க வைக்க. ஒண்டும் நடக்காது. வலுக்கட்டாயமா முழுகவார்த்துவிட வெளிக்கிடுவா. இவவுக்குத் தேவையில்லாத வேலை, அங்க முட்டை எல்லாம் சூடு ஆறிக் கிடக்கும், பாவம். அதைக் கவனிக்காம இங்க 'சாட்' பண்ணிக் கொண்டு இருப்பா.

அதுக்காக நான் போய் முட்டைகளைப் பார்ப்பன் எண்டு மட்டும் நினைக்காதைங்க.
எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு. இந்த 'சைட்ல' எனக்கு ஒரு 'சைட்' இருக்கு.

அங்க பாருங்க, தண்ணீரிலே தாமரைப் பூ. என்ன வடிவா சூரியக்குளியல் எடுக்கிறா எண்டு பாருங்க.
பார்க்காதைங்க, பார்க்காதைங்க. 
நான் மட்டும்தான் பார்ப்பேன் . ;)

Thursday 27 May 2010

Kia ora Vanitha ;)


May this day be special in every way.
- imma

இங்கும் காண்க பெண்வண்டுகள்

இது ஒரு, ஒன்றில் நான்கு (4 in 1) இடுகை. ;)
1. எனக்குப் பிடித்த பெண்(வண்டு)கள்
மாணவியாக இருந்த காலத்தில் எனக்கும் பேனா நண்பர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசை இருந்தது. என் தோழியரக்கெல்லாம் நண்பர்கள் இருந்தனர், இந்தியாவில் எங்கோ ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில். அவர்களுக்கு அவ்வப் போது நகப்பூச்சு, வாசனைத் திரவியங்கள் எல்லாம் வந்துசேரும். எனக்கு செபாவிடம் இருந்து அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ;) ஆயினும் குறை ஒன்றும் இல்லை. என் தோழி நகச்சாயம் பயன்படுத்த மாட்டார். எனவே அவை எல்லாம் பயன்படுத்தி முடித்து விட்டு வெற்றுப் போத்தல்களை மட்டும் தரச்சொல்லி என்னிடமே கொடுத்து விடுவார். 
அறுசுவைத் தோழி ஒருவர் என் 'பெண்வண்டு' ஆசையைப் புரிந்து கொண்டு அனுப்பியவை இவை.
கூடவே நகச்சாயங்களும் கைவினைக் குறிப்புகளும் என் குட்டித் தோழிக்கு அன்பளிப்புகளும் வந்தன. ;) சேர்ப்பித்துவிட்டேன் குட்டித் தேவதையிடம். ;)
நோக்கம் 2 - நன்றி தோழி ;)
 நோக்கம் 3 - அறுசுவையில் நடந்த இனிய பெண்வண்டுக் கோலாகலத்தை மீண்டும் நினைவூட்டிய சந்துவைப் பின்தொடர்தல். 
பூங்கதிர் தேசத்தில் எங்கு காணினும் பெண் வண்டுகள் பார்த்துப் பரவசமாகி இமாவின் உலகிற்குப் பறந்து வந்த ஜேர்மானிய தேசத்துப் பெண்வண்டுகள் இவை. ;)
சரி, எல்லாரும் வரிசையா வந்து பின்னூட்டம் போட்டு விட்டுப் போங்க. ;)
முடிந்தால் வண்டுகளைப் பின்தொடருங்கள். ;)
~~~
பெண்வண்டுகளைப் பின்தொடர்கிறார் அதிரா.

Saturday 22 May 2010

மேலே போகிறேனா! ;)

வருந்துகிறேன்

 
மங்களூர் விமான விபத்தில் சிக்கிய அனைவரது குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.
~~~~~~~

இன்று பலர் மனதையும் பாதித்துள்ள செய்தி இது.

என் தந்தை ஏழு வருடங்கள் தங்கி இருந்த இடம், என் மருமகன் சில வருடங்கள் தங்கிக் கற்ற இடம் + சமீபகாலமாக இந்தியர்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு.... என் இந்த இடுகைக்குக் காரணம்.

மரணத்தைக் கண்டு நான் அஞ்சியது இல்லை. இருப்பினும் தனித்து மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்தின் போதும் வேண்டிக் கொள்வேன்... என் கடமைகள் முடியும் வரை வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென.

தொடர்ந்து செய்திகளை அவதானித்து வருகிறேன்.

கனவுகளோடு கண் மூடியோருக்கு என் அஞ்சலி.
விபத்தில் மீண்டோர் நலம்பெற என் பிரார்த்தனைகள்.  
-இமா

Wednesday 19 May 2010

கள்ளச்சாவி கோஷ்டி

நான் அரண். அப்பிடித்தான் இங்க எல்லாரும் கூப்பிடுறாங்கள். அதுக்கு என்ன அர்த்தம் எண்டு நான் என்ன சொல்றது, பரண் எண்டு பேர் வைக்கலாம் எண்டால் இப்பிடியும் வைக்கலாம்... எண்டு அம்மா நினைச்சு இருப்பா போல. இல்லாட்டி...ரைமிங்காக இருக்கும் எண்டு வச்சாவோ தெரியா. எப்பிடியும் 'அரணும்' முக்கியம் தானே. முழுப்பேர்... அரண் சாம்ப..க்ருஷ் ('ணன்' சேர்த்து வாசியுங்கோ தமிழ்ச்சனங்களே! கழற்றி விட்டிட்டாங்கள் வெள்ளைகள்.)

நான் நடக்கத் தொடங்கின நாள் நல்லா நினைவு இருக்கு. முதலாவது பிறந்தநாள் அண்டைக்கு என்னைக் கீழ விட்டுப் போட்டு மிச்ச எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டும், வந்த கூட்டாளிமாரில ஒருவர் அழுது கொண்டு நிண்டவர்.. அவரைச் சுற்றி முழுசிக் கொண்டும் நிண்டவங்கள்.

பேர்தான் எனக்கு பிறந்தநாள் எண்டு. என்னை உடுத்தி வச்சுப் போட்டு மற்ற எல்லாரும் முஸ்பாத்தியா இருந்தவங்கள். சும்மா வந்த ஆக்கள் எல்லாம் ஆளாளுக்கு ஒரு பாசலைக் கையில தந்து 'எங்க, ஆ..யம்மா சொல்லுங்கோ பாப்பம்.' எண்டு (சின்னனில நான் அப்பிடிச் சொல்லுவன், ஒண்டுமில்ல. கிஸ் தான்.) தங்கட பௌடர், சென்ட் போட்ட முகங்களை அமர்த்தி அமர்த்திக் கொஞ்சினதில, எனக்கு சொக்கு பேய் நோ நொந்து போச்சு. வெள்ளையா இருந்த முகம் ரூஜ் பூசின மாதிரி ஆகிப் போச்சுது. 

இவங்களுக்குத் தேவை இல்லாத வேலை. இப்பிடிப் 'பாட்டி' எண்டால், பிள்ளைகள் இருக்க வேணும் எண்டு, தனியப் பிள்ளைட பேரைப் போட்டு இன்விடேஷன் அனுப்பி விட அவங்களும் யோசிக்காமல் கொண்டு வந்து இறக்கிப் போட்டுப் போய்ட்டாங்கள் இந்த அண்ணாவ. அவர் தொப்பியப் பிடுங்கி வீசிப் போட்டு 'அம்மாஆ... ஆ... அ... ஆ...ஆ... ஆ... அ... ஆ... எண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு நிண்டதைப் பாக்க எனக்கு பிறந்த நாளே இனிக் கொண்டாடக் கூடாது எண்டு ஒரு வைராக்கியம் வந்துது. நான் சொல்லி யார் கேப்பினம். அம்மாக்கும் அப்பாக்கும் ஷோ காட்ட வேணும். நான் ஒரு சாட்டு. என்னவோ செய்யட்டும்.

எனக்கு போரடிச்சுது. பசிக்க இல்ல, ஆனால் அந்த கேக் நல்ல வடிவாக் கிடக்கு; வச்சு சும்மா பார்த்துக் கொண்டு இருக்கினம்; ஒருக்கா தொட்டுப் பாப்பம் எண்டு நினைச்சு எழும்பிப் போனன். எழும்பேக்க ஒரு ஆட்டம் ஒண்டு வந்துது. சமாளிச்சிட்டன். விழுந்தால் சிரிச்சுப் போடுவாங்கள். காட்டிக் கொள்ளக் கூடாது. அதுக்குள்ள மாமியும் அம்மாவும் கண்டு ஏங்கிப் போனாங்கள் போல. விழப் போற பிள்ளையப் பிடிச்சு உதவுவம் எண்டு இல்லாம வாயில கைய வச்சுக் கொண்டு அங்கேயே நிக்கினம். நான் தனியவே சமாளிச்சிட்டன். பின்ன, நான் யார்? அரண். அரண் சாம்பக்ரிஷ். பெலமான பிள்ளை.

பிறகு என்ன! நடக்கிறது ஒண்டும் கஷ்டமே இல்ல. எதுக்கு இவ்வளவு நாளும் என்ன அந்த 'வோக்கரில' போட்டுப் போட்டு வைச்சாங்களோ! எண்டு நினைச்சன். தவழுறத விட இது லேசு. ரெண்டு பக்கமும் செட்டை மாதிரி கையை நீட்டிப் பிடிச்சுக் கொண்டு... நல்ல பலன்ஸ் வந்திட்டு, ஒர்ரேஏ.... ஓட்டம். நேர போய் கேக்கடியில ப்ரேக் பிடிச்சன். அப்பிடியே நட்ட நடு கேக்கில சுட்டுவிரல விட்டுத் தோண்டி எடுத்து வாயில வைச்சு... சூ..ப்பர். உங்கட வீட்ட 'பாட்டி' நடக்கேக்க ஒருக்கா ட்ரை பண்ணிப் பாருங்கோ.

அண்டைக்கு எனக்கு உதவிக்கு வந்தவ என்ட மச்சாள்.
அவவும் ஒரு விரலில தொட்டு... வாய்க்குள்ள வைக்க, எல்லாரும் சிரிச்சு, சந்தோஷமா அதையும் வீடியோ எடுத்து, போட்டோ எடுத்து வைக்க.. எல்லாம் சுபமாக முடிஞ்சுது. அண்டைல இருந்து இண்டைக்கு மட்டும் ஓடிக் கொண்டு தானே நிக்கிறன்.

எப்பவும் மச்சாள் எண்டால் எனக்கு உயிர். எல்லாத்திலையும் எனக்கு உதவுறவ. கனவிலையும் வருவா. எல்லாத்திலையும் எக்ஸ்பேட் அவ. நல்லா மாமரம் ஏறுவா. தானே நல்லா டீ போடுவா.
உங்கள் எல்லாருக்கும் சமையல் குறிப்பு எழுத, வாசிக்கப் பிடிக்குமெல்லோ! நல்ல நல்ல பின்னூட்டமும் போடுறனீங்கள். அவட ரெசிபியும் சொல்றன், குறிச்சு வையுங்கோ. குடிச்சுப் பாத்திட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கோ, என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குட்டீ (ப.கு - good tea)
~~~~
தேவையான பொருட்கள்
ஒரு கரண்டி தேயிலை
ஒரு கரண்டி பால்மா
அரைப்போத்தல் சீனி
ஒரு கோப்பை ஐஸ் தண்ணி

செய்முறை
  • எல்லாம் ஒண்டா வாய்க்குள்ள போடவும்.
  • நல்லாச் சப்பித் தின்னவும். 
  • ஃபிரிஜ்ஜத் திறந்து தண்ணிப் போத்தலைத் தொண்டைக்குள்ள கவிழ்க்கவும்.
அவ்வளவுதான். வயிற்றுக்குள்ள டீத்திருவிழா.
~~~~~~~~~~~~~~~~~~
பிறகு என்ன நடக்கும் எண்டால், அடுத்த நாளைக்கு மாமி வந்து 'நேற்று என்ன சாப்பிடக் குடுத்தனீங்கள் இங்க? இரவிரவாப் பிள்ளைக்கு கறுப்பா வயிற்றால போச்சுது' எண்டு கேப்பா.

அவவ விடுங்க. எங்கட வீட்டில நான் உதவித்தான் சமையல் நடக்கிறது எப்பவும். நல்...லா 'வெங்காய்' உரிப்பன். ஆனால் ஒண்டும் மிஞ்சுறதுதான் இல்ல. ;( அம்மா 'கடல்' அவிச்சுத் தருவா. அத முழுசு முழுசா விழுங்கினால் நல்லா இருக்கும். அவிக்காட்டியும் ஊறி இருந்தா நல்லா இருக்கும்.

மச்சாளும் நானும் சேர்த்து ஒரு நாள் ஷோகேஸத் திறக்கப் பார்த்தோம். நாங்களே திறப்பு செய்தோம். ரெண்டு ஈக்கில் துண்டு மடிச்சு மடிச்சு ரபர்பான்ட் போட்டு எடுத்தால் வடிவான திறப்பு வந்துது. திறக்கிறதுக்கிடையில மாமா வந்து டீவீயில 'உச்சந்தல உச்சியில' பாட்டுப் போட்டு விட நாங்க எல்லாத்தையும் மறந்து போனம். கதிரைல ஏறி நிண்டு அவர்ட தலையில தப்பினம். அவரும் நித்திரையாப் போனார்.

என்ட அடுத்த பேத்டேக்கு கேக் வெட்ட மெழுகுதிரி எடுக்கிறதுக்கு அப்பா கடைசி நேரம் 'ஸ்குடைவர்' கொண்டு வந்து ஷோகேஸ் திறந்து விட்டவர். இப்பவும் நினைவு இருக்கு. 'யார்ட வேலை இது?' எண்டு கேக்க, நான் மச்சாளையும் அவ என்னையும் கைகாட்டிவிட்டோம். "நல்ல நாளில பிள்ளைகள ஏசப்படாது," எண்டு பாட்டி சொல்லிக் காப்பாற்றி விட்டா. இவ மட்டும் இல்லாட்டி அண்டைக்கு அவ்வளவுதான் நாங்க.

அப்பப்ப பாட்டி சொல்லுவா. 'நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ பிள்ளையள். சின்னனில அம்மாவும் மாமியும் இப்பிடித்தான். உங்களை மாதிரியே! ஒருவரில ஒருவர் உயிரா இருப்பினம்.' எண்டு.

செய்யிறது எல்லாம் செய்து போட்டு இன்னமும் உயிரோடதான் இருக்கினம் எண்டு சொல்ல நினைச்சுத்தான் சொன்னாவோ தெரியா.

உங்கட வீட்டில பரண், அரண் எல்லாம் இல்லையோ!!

Saturday 15 May 2010

விழுஞாயிறு தொடர்ந்து....

 'கார்க்' குளியல்
 தலைப்புக்காக் காத்திருக்கும் கண்ணாடி
(தலைப்பு உங்கள் கையில்.)

சாரல் விடு சாயல்  ;)

மலர்க் குளியல்
 
தூறல் விடு தூது...
தொடர்ந்து வேறெங்காவது தூவுமா மழை!!  
~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிணைப்பு 
17 / 05 / 2010
இங்கும் ஒரு

இதுவரை வந்து குவிந்த தலைப்புக்கள்
1. கண்ணாடியில் கண்ணடிக்கிற மழைத்துளி - அஹ்மது இர்ஷாத்
2. போகாத பொழுதுகள்!!!! - வாணி
3. இந்த அம்மிணிக்கு பொழுது போகவில்லை என்றால் நான் தானா கிடைத்தேன். எனக்காக இயற்கையே அழுது. - வாணி
4. "காரின் கண்ணாடியில் கார்மேகத்தின் கண்ணீர் துளிகள்" - எல்எஸ்
5. “நியூ மழை” - அதிரா
6. நானும் நனைகிறேனே இமா - ஆஸியா
வருகை தந்த இர்ஷாத், ஜெய்லானி, வானதி, ஆனந்தி, எல்எஸ், அதிரா, ஜீனோ, ஆஸியா, ஹுசேன் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். ;)

பரிசுக்கான தலைப்பு
கண்ணாடியில் கண்ணடிக்கிற மழைத்துளி
பாராட்டுக்கள் அஹமது இர்ஷாத் பரிசு உங்களுக்குத்தான். ;)
கௌரவப் பரிசு ;)
வான் மேகம்..பூப் பூவாய்த் தூவும்..
தேகம் என்னவாகும்? இன்பமாக நோகும்!
- ஜீனோ
- இமா
~~~~~~~~~~~~~~~~
தொடர்கிறது அதிராவின் மழையோசை

Friday 14 May 2010

பப்பி யாருக்காகக் காத்திருக்கிறார்!


பப்பி 90 Miles Beach-ல் யாருக்காகக் காத்திருக்கிறார்!! டோராவுக்காகவா!
என்ன படம் ஷூட்டிங்!

களைச்சுப் போய் இருப்பீங்கள், இந்தாங்கோ, உங்களுக்காக ஸ்பெஷலாக ஃபிளாஸ்கில எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறம். ஸ்ட்ராவும் போட்டாச்சு, குடியுங்கோ. ;)

Thursday 13 May 2010

தாரா தாரா வந்தீரா!!

தாரா தாரா வந்தீரா!!
போட்டிக்கு நீரும் வந்தீரா!!
என்னோட போட்டிக்கு நீரும் வந்தீரா!!

போட்டிக்கு வந்தால் கொத்தித் துரத்திப் போடுவம்.
ஹலோ! என்ன பாக்குறீங்கள்!
பிடிக்கப் போறீங்களோ!!

சாப்பிட என்னவாவது கொண்டு வந்தனீங்களோ, இல்லாட்டி கையைக் கமராவை மட்டும்தான் கொண்டு வந்து இருக்கிறீங்களோ!

முத்துக் குளிக்க வாரீகளா!!
மூச்சை அடக்க வாரீகளா!!
சும்மா. ;)
நாங்களாவது, பூஸோட போட்டிக்கு வாறதாவது.
எல்லாம் ஒரு நட்புத்தான்.
 சரி, போய்ட்டு வாறம்.  
சீயா, மீயா. ;)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொல்ல மறந்த கதை 
பூஸார் 'துணிவு இருந்தால் தொடருங்கோ' எண்டு விட்ட சவாலைக் க.கா.போவேனோ? அப்படிப் போனால் நான் என் வலைப்பூ உறவுகளைக் கைவிட்ட மாதிரி ஆகாதோ! அதனால்... வேறு வேலைகள் இருந்த போதும், உடனடித் தொடராக இந்த இடுகை இடப்பட்டது.
~o~
ஜீனோவின் மூலையில்
பறவைகள் பலவிதம்
காண்க.