Wednesday 19 May 2010

கள்ளச்சாவி கோஷ்டி

நான் அரண். அப்பிடித்தான் இங்க எல்லாரும் கூப்பிடுறாங்கள். அதுக்கு என்ன அர்த்தம் எண்டு நான் என்ன சொல்றது, பரண் எண்டு பேர் வைக்கலாம் எண்டால் இப்பிடியும் வைக்கலாம்... எண்டு அம்மா நினைச்சு இருப்பா போல. இல்லாட்டி...ரைமிங்காக இருக்கும் எண்டு வச்சாவோ தெரியா. எப்பிடியும் 'அரணும்' முக்கியம் தானே. முழுப்பேர்... அரண் சாம்ப..க்ருஷ் ('ணன்' சேர்த்து வாசியுங்கோ தமிழ்ச்சனங்களே! கழற்றி விட்டிட்டாங்கள் வெள்ளைகள்.)

நான் நடக்கத் தொடங்கின நாள் நல்லா நினைவு இருக்கு. முதலாவது பிறந்தநாள் அண்டைக்கு என்னைக் கீழ விட்டுப் போட்டு மிச்ச எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டும், வந்த கூட்டாளிமாரில ஒருவர் அழுது கொண்டு நிண்டவர்.. அவரைச் சுற்றி முழுசிக் கொண்டும் நிண்டவங்கள்.

பேர்தான் எனக்கு பிறந்தநாள் எண்டு. என்னை உடுத்தி வச்சுப் போட்டு மற்ற எல்லாரும் முஸ்பாத்தியா இருந்தவங்கள். சும்மா வந்த ஆக்கள் எல்லாம் ஆளாளுக்கு ஒரு பாசலைக் கையில தந்து 'எங்க, ஆ..யம்மா சொல்லுங்கோ பாப்பம்.' எண்டு (சின்னனில நான் அப்பிடிச் சொல்லுவன், ஒண்டுமில்ல. கிஸ் தான்.) தங்கட பௌடர், சென்ட் போட்ட முகங்களை அமர்த்தி அமர்த்திக் கொஞ்சினதில, எனக்கு சொக்கு பேய் நோ நொந்து போச்சு. வெள்ளையா இருந்த முகம் ரூஜ் பூசின மாதிரி ஆகிப் போச்சுது. 

இவங்களுக்குத் தேவை இல்லாத வேலை. இப்பிடிப் 'பாட்டி' எண்டால், பிள்ளைகள் இருக்க வேணும் எண்டு, தனியப் பிள்ளைட பேரைப் போட்டு இன்விடேஷன் அனுப்பி விட அவங்களும் யோசிக்காமல் கொண்டு வந்து இறக்கிப் போட்டுப் போய்ட்டாங்கள் இந்த அண்ணாவ. அவர் தொப்பியப் பிடுங்கி வீசிப் போட்டு 'அம்மாஆ... ஆ... அ... ஆ...ஆ... ஆ... அ... ஆ... எண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு நிண்டதைப் பாக்க எனக்கு பிறந்த நாளே இனிக் கொண்டாடக் கூடாது எண்டு ஒரு வைராக்கியம் வந்துது. நான் சொல்லி யார் கேப்பினம். அம்மாக்கும் அப்பாக்கும் ஷோ காட்ட வேணும். நான் ஒரு சாட்டு. என்னவோ செய்யட்டும்.

எனக்கு போரடிச்சுது. பசிக்க இல்ல, ஆனால் அந்த கேக் நல்ல வடிவாக் கிடக்கு; வச்சு சும்மா பார்த்துக் கொண்டு இருக்கினம்; ஒருக்கா தொட்டுப் பாப்பம் எண்டு நினைச்சு எழும்பிப் போனன். எழும்பேக்க ஒரு ஆட்டம் ஒண்டு வந்துது. சமாளிச்சிட்டன். விழுந்தால் சிரிச்சுப் போடுவாங்கள். காட்டிக் கொள்ளக் கூடாது. அதுக்குள்ள மாமியும் அம்மாவும் கண்டு ஏங்கிப் போனாங்கள் போல. விழப் போற பிள்ளையப் பிடிச்சு உதவுவம் எண்டு இல்லாம வாயில கைய வச்சுக் கொண்டு அங்கேயே நிக்கினம். நான் தனியவே சமாளிச்சிட்டன். பின்ன, நான் யார்? அரண். அரண் சாம்பக்ரிஷ். பெலமான பிள்ளை.

பிறகு என்ன! நடக்கிறது ஒண்டும் கஷ்டமே இல்ல. எதுக்கு இவ்வளவு நாளும் என்ன அந்த 'வோக்கரில' போட்டுப் போட்டு வைச்சாங்களோ! எண்டு நினைச்சன். தவழுறத விட இது லேசு. ரெண்டு பக்கமும் செட்டை மாதிரி கையை நீட்டிப் பிடிச்சுக் கொண்டு... நல்ல பலன்ஸ் வந்திட்டு, ஒர்ரேஏ.... ஓட்டம். நேர போய் கேக்கடியில ப்ரேக் பிடிச்சன். அப்பிடியே நட்ட நடு கேக்கில சுட்டுவிரல விட்டுத் தோண்டி எடுத்து வாயில வைச்சு... சூ..ப்பர். உங்கட வீட்ட 'பாட்டி' நடக்கேக்க ஒருக்கா ட்ரை பண்ணிப் பாருங்கோ.

அண்டைக்கு எனக்கு உதவிக்கு வந்தவ என்ட மச்சாள்.
அவவும் ஒரு விரலில தொட்டு... வாய்க்குள்ள வைக்க, எல்லாரும் சிரிச்சு, சந்தோஷமா அதையும் வீடியோ எடுத்து, போட்டோ எடுத்து வைக்க.. எல்லாம் சுபமாக முடிஞ்சுது. அண்டைல இருந்து இண்டைக்கு மட்டும் ஓடிக் கொண்டு தானே நிக்கிறன்.

எப்பவும் மச்சாள் எண்டால் எனக்கு உயிர். எல்லாத்திலையும் எனக்கு உதவுறவ. கனவிலையும் வருவா. எல்லாத்திலையும் எக்ஸ்பேட் அவ. நல்லா மாமரம் ஏறுவா. தானே நல்லா டீ போடுவா.
உங்கள் எல்லாருக்கும் சமையல் குறிப்பு எழுத, வாசிக்கப் பிடிக்குமெல்லோ! நல்ல நல்ல பின்னூட்டமும் போடுறனீங்கள். அவட ரெசிபியும் சொல்றன், குறிச்சு வையுங்கோ. குடிச்சுப் பாத்திட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கோ, என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குட்டீ (ப.கு - good tea)
~~~~
தேவையான பொருட்கள்
ஒரு கரண்டி தேயிலை
ஒரு கரண்டி பால்மா
அரைப்போத்தல் சீனி
ஒரு கோப்பை ஐஸ் தண்ணி

செய்முறை
  • எல்லாம் ஒண்டா வாய்க்குள்ள போடவும்.
  • நல்லாச் சப்பித் தின்னவும். 
  • ஃபிரிஜ்ஜத் திறந்து தண்ணிப் போத்தலைத் தொண்டைக்குள்ள கவிழ்க்கவும்.
அவ்வளவுதான். வயிற்றுக்குள்ள டீத்திருவிழா.
~~~~~~~~~~~~~~~~~~
பிறகு என்ன நடக்கும் எண்டால், அடுத்த நாளைக்கு மாமி வந்து 'நேற்று என்ன சாப்பிடக் குடுத்தனீங்கள் இங்க? இரவிரவாப் பிள்ளைக்கு கறுப்பா வயிற்றால போச்சுது' எண்டு கேப்பா.

அவவ விடுங்க. எங்கட வீட்டில நான் உதவித்தான் சமையல் நடக்கிறது எப்பவும். நல்...லா 'வெங்காய்' உரிப்பன். ஆனால் ஒண்டும் மிஞ்சுறதுதான் இல்ல. ;( அம்மா 'கடல்' அவிச்சுத் தருவா. அத முழுசு முழுசா விழுங்கினால் நல்லா இருக்கும். அவிக்காட்டியும் ஊறி இருந்தா நல்லா இருக்கும்.

மச்சாளும் நானும் சேர்த்து ஒரு நாள் ஷோகேஸத் திறக்கப் பார்த்தோம். நாங்களே திறப்பு செய்தோம். ரெண்டு ஈக்கில் துண்டு மடிச்சு மடிச்சு ரபர்பான்ட் போட்டு எடுத்தால் வடிவான திறப்பு வந்துது. திறக்கிறதுக்கிடையில மாமா வந்து டீவீயில 'உச்சந்தல உச்சியில' பாட்டுப் போட்டு விட நாங்க எல்லாத்தையும் மறந்து போனம். கதிரைல ஏறி நிண்டு அவர்ட தலையில தப்பினம். அவரும் நித்திரையாப் போனார்.

என்ட அடுத்த பேத்டேக்கு கேக் வெட்ட மெழுகுதிரி எடுக்கிறதுக்கு அப்பா கடைசி நேரம் 'ஸ்குடைவர்' கொண்டு வந்து ஷோகேஸ் திறந்து விட்டவர். இப்பவும் நினைவு இருக்கு. 'யார்ட வேலை இது?' எண்டு கேக்க, நான் மச்சாளையும் அவ என்னையும் கைகாட்டிவிட்டோம். "நல்ல நாளில பிள்ளைகள ஏசப்படாது," எண்டு பாட்டி சொல்லிக் காப்பாற்றி விட்டா. இவ மட்டும் இல்லாட்டி அண்டைக்கு அவ்வளவுதான் நாங்க.

அப்பப்ப பாட்டி சொல்லுவா. 'நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ பிள்ளையள். சின்னனில அம்மாவும் மாமியும் இப்பிடித்தான். உங்களை மாதிரியே! ஒருவரில ஒருவர் உயிரா இருப்பினம்.' எண்டு.

செய்யிறது எல்லாம் செய்து போட்டு இன்னமும் உயிரோடதான் இருக்கினம் எண்டு சொல்ல நினைச்சுத்தான் சொன்னாவோ தெரியா.

உங்கட வீட்டில பரண், அரண் எல்லாம் இல்லையோ!!

19 comments:

  1. குட் டீ தான் குடிக்க முயற்சி செய்யுரேன் ஆனா முடியல. கதை சூப்பர். அதிலும் லங்கா தமிழ் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  2. ஜெய்லானி, அது லங்கா இல்ல. இலங்கை. ;)

    'கொசு வளர்க்க டிப்ஸ்' தர ஏலாது. கள்ளச்சாவி செய்யிறது எப்பிடி எண்டு போடுவம் எண்டு நினச்சன். ;)

    சரி டீ குடிச்சு முடிய திரும்ப வந்து கொமன்ட் போடுங்கோ.

    ReplyDelete
  3. ஹாஹா... என் பரண் போலவே இவரும் குழப்படி.

    // நான் மச்சாளையும் அவ என்னையும் கை காட்டிவிட்டோம்.....///
    அப்படித் தான் ஒருவரை ஒருவர் போட்டுக் குடுக்கோணும் சரியா அரண் குட்டி!!!!!

    ReplyDelete
  4. //ஜெய்லானி, அது லங்கா இல்ல. இலங்கை. ;)//

    இங்கிலிபிஸ் ல லங்கான்னுதாங்க வருது. இனி இலங்கைன்னே எழுத முயற்சி செய்யுரேன்.

    //'கொசு வளர்க்க டிப்ஸ்' தர ஏலாது. கள்ளச்சாவி செய்யிறது எப்பிடி எண்டு போடுவம் எண்டு நினச்சன். ;) //

    ஹி..ஹி... இப்பதான் நல்லா ஃபாமுக்கு வறீங்க

    //சரி டீ குடிச்சு முடிய திரும்ப வந்து கொமன்ட் போடுங்கோ.//

    அரை போத்தல் சீனி இன்னும் வாயிலயே இருக்கு . குச்சி வச்சி தள்ளிக்கிட்டு இருக்கேன் .

    ReplyDelete
  5. சூப்பர் இமா! இப்ப தான் பரணையும் பாத்தேன். எப்படி இப்படி.... சரியான காமெடி கேர்ள் நீங்க...

    ReplyDelete
  6. haa..haa!! Sabash,sariyaana potti! kalakkunga Imma!

    ReplyDelete
  7. "பொட்டி"!!? ;)))))

    இன்னொரு கருத்து இருந்தது போல் தோன்றியது. படிக்கவில்லை. யார் கருத்து என்றும் தெரியவில்லை. காணவில்லை. என் தவறு எதுவும் இல்லை. இருப்பினும் உரியவர்கள் மன்னிக்க.

    ReplyDelete
  8. இமா கொஞ்சம் ஐஸ்மோர் தாங்கோ... முதலில் குடிச்சிட்டுத்தான் தொடர்வேன். எனக்கு கெட்டகோபம் வருது, ஜெய்..லானியின் முதல் பதிவுக்கு அடுத்து நான்தான் பதிவுபோட்டேன்... காணாமல் போய்விட்டது... உங்கள் தவறு இல்லை..

    ”தவறுக்கு வருந்துகிறோம்”...இப்படிக்கு கூகிழார்.

    இட்ஸ் ஓக்கை. இனி அதுபோல் பெரிய பதிவு அடிக்க முடியாமல் இருக்கு, படுத்த படுக்கையாகிவிட்டேன், இன்று எப்பூடியும் பதில்கள் போட்டிடவேணும் என வந்தேன்.


    கதை அழகு இமா. நீங்கள் சூட்டியிருக்கும் கால் எடுத்த(ணன்) பெயர்//சாம்பக்ரிஷ்// என்னை மிகவும் கவர்ந்துள்ளது... பை த வே ..இது கிரிஷ் அங்கிள் இல்லையே???

    //எப்பவும் மச்சாள் எண்டால் எனக்கு உயிர். // மச்சாள் எண்டால் எல்லோருக்கும் உயிர்தான்....

    சாம்பக்.... நடக்கத்தொடங்கியவிதம் அருமை.. பேபிஅதிராவும் உப்பூடித்தான், ஒருவரும் எதிர்பாராத நேரத்தில ஓடத்தொடங்கினேன்... என்னா ஸ்பீட்டு:):):)

    ReplyDelete
  9. //தேவையான பொருட்கள்
    ஒரு கரண்டி தேயிலை
    ஒரு கரண்டி பால்மா
    அரைப்போத்தல் சீனி
    ஒரு கோப்பை ஐஸ் தண்ணி

    செய்முறை

    * எல்லாம் ஒண்டா வாய்க்குள்ள போடவும்.
    * நல்லாச் சப்பித் தின்னவும்.
    * ஃபிரிஜ்ஜத் திறந்து தண்ணிப் போத்தலைத் தொண்டைக்குள்ள கவிழ்க்கவும்.
    ///

    avvv

    ReplyDelete
  10. அருமையான டீ

    அரண் ரொம்ப நல்ல இருக்கார்.
    // விழுந்தால் சிரிச்சுப் போடுவாங்கள். காட்டிக் கொள்ளக் கூடாது//

    ஹ்ம்ம் சரி சிரிக்கல ..

    அருமை இமா ரொம்ப நல்லா இருக்கு உங்கள் நடை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கமெண்ட் பாக்ஸ கானவில்லை அடுத்த பதிவில்.. பாருங்க... செபா ஆண்ட்ரி பிளாக்கிலும் கானவில்லை (any virus pls check your system )

    ReplyDelete
  12. அன்பு அதி,

    //உங்கள் தவறு இல்லை.// புரிந்து கொண்டமைக்கு நன்றி.

    //படுத்த படுக்கையாகிவிட்டேன்,// Get 'bed'ter soon. ;)

    //இது கிரிஷ் அங்கிள் இல்லையே?// இல்லை. சும்மா ரைமிங். ;)

    //பேபிஅதிராவும் உப்பூடித்தான்,// ;))

    ReplyDelete
  13. LK ;)

    //நல்லா இருக்கு உங்கள் நடை// சும்மா சொல்லப் படாது, அரண் நடைதானே? ;) //வாழ்த்துக்கள்// நன்றி.

    ReplyDelete
  14. அங்கு கமன்ட் பாக்ஸ் வைக்கவில்லை ஜெய்லானி. (கமன்ட் சொல்லும் விஷயம் இல்லை என்று தோன்றிற்று.) குறிப்பிட மறந்தமைக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  15. பார்வையிட்டேன் ஜெய்லானி. விரைவில் வந்து பெற்றுக் கொள்கிறேன். ;) மிக்க நன்றி. மகிழ்ச்சி. ;)

    சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும்.

    ReplyDelete
  16. இந்த விருது விஷயத்தை போடலாம் என்றுதான் தேடினேன் . அதனாலதான் அந்த க்மெண்ட் . பின் இரவில் இதிலேயே போட்டு விட்டேன். உங்கள் விளக்கம் புரிந்தது.நன்றி.

    ReplyDelete
  17. பரணுக்கு அரண் சரியான போட்டி இமா.. நீங்களும் இன்னும் தொடரனும்..

    ReplyDelete
  18. நன்றி ஜெய்லானி & எல்ஸ். ;)

    ReplyDelete
  19. சேச்சேச்சே அநியாயத்துக்கு சிரிப்பா வருது . நல்ல மச்சாள் .
    திருப்பியும் வாசிச்சன் அவளவு மனசு கரையிது பேச்சுவழக்கு வார்த்தைகளை வாசிக்க .
    சம்பவங்கள் இன்னும் சிரிப்பு .குழப்படிகள்.திருட்டுக்கேற்ற படம் வேற கீறி வச்சிருக்கா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா