Thursday 24 February 2011

பொன்விழா

மு. கு
ஸாதிகாவின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்தப் பதிவு.
என் பெற்றோர் பொன்விழாவுக்காக (மணநாள்) நான் செய்த கேக் இது. ஸாதிகா பார்த்த படம் இதுவல்ல; இதனை விடத் தெளிவாக இருந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் அதனைத் தற்போது வெளியிட இயலாது உள்ளது . ;( இன்னொரு முறை பார்க்கலாம்.

இடது புறம் உள்ள சிறிய கேக் அவர்கள் விழாவின் போது வெட்டுவதற்காகச் செய்தது. 'ஸ்ட்ரக்க்ஷர்' மூன்று தட்டுகளால் அமைந்து இருந்தேன். அவற்றுள் முழுவதும் துண்டு போடப்பட்ட கேக்குகள், பொன்னிற ஆர்கன்சா துணிப்பைகளில். பைகள் தைத்து எடுத்துக் கொண்டேன்.

ஒரு மாதம் முன்பதாகவே கேக் செய்தாயிற்று. சுற்றி வைக்க.. பையில் போடவெல்லாம் ஏஞ்சல் வீட்டார் உதவினார்கள். (நண்பர்கள் பலரும் உதவ முன்வந்தனர் தான், எனக்கு என் கையால் செய்வதுபோல் வசதியாக இராது. ;) திடீர் திடீரென்று சிந்தனை மாறும். இவர்கள் அயலில் இருந்தார்கள்.. ரசனையும் எப்போதும் எங்களோடு ஒத்துப் போகும். என் எண்ணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்கள் இவர்கள்.

க்றிஸ் வழமைபோல் தனது ஆலோசனைகளோடு தேவையான உதவியும் செய்து கொடுத்தார். 'கேக் போர்ட்' அழகாக வெட்டித் தந்தார். (அறுகோணி வடிவம், மூத்த மகனது யோசனை.)

பெற்றோர் கேக் வெட்டியதும், மேலே உள்ள தட்டை எடுத்து வைத்து விட்டு (வெற்றுத் தட்டு இன்னமும் செபா வீட்டு மேஜை மேல் அலங்காரமாக இருக்கிறது,) அடுத்த இரண்டையும் அப்படியே 'ட்ரே' ஆகப் பாவித்துப் பரிமாறினோம். வெட்டுகிற வேலை & நேரம் மிச்சம் ஆகிற்று. ஒரே ஒரு சிரமம், வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு இவற்றை எடுத்துப் போவது - ஒரு வண்டியில் ஆளுக்கொரு தட்டாக எடுத்துக் கொண்டு போக்குவரத்துக் குறைவான சாலையாகப் பார்த்து மெதுவே பயணித்துப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துப் பொருத்தி விட்டேன். 

'பானர்' பெரிதாகச் செய்யும் நோக்கம் இருக்கவில்லை. எளிமையாக அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். கடையில் கிடைத்ததை எங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொண்டாயிற்று. யோசனை எனது, செயலாக்கியது க்றிஸ்.

மேசைச்சீலையிலிருந்து தேவைப்பட்ட அனைத்தையும் மஞ்சள் & பொன் வர்ணச் சாயல்களில் தெரிந்து கொண்டோம்.  

நத்தார்க் காலம்... பொன்னிற 'மெர்குரிப்பந்துகள்' மலிவாகக் கிடைத்தன. சுவருக்கான அலங்காரம் அமைத்துக் கொண்டேன். (இனி வரும் வருடங்களில் அவை எங்கள் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும்.) 

சுவரில் எங்கும் ஆணிகள் அடிக்கவில்லை, 'க்ளூடாக்' வசதியாக இருந்தது. 

சாட்டின் துணியில் பெரிய 'போக்கள் ' வைத்து இரண்டு கதிரைகளுக்கு உறைகள் தைத்தேன். (நானே தைத்ததால் மீண்டும் தையல்களைக் கழற்றி விட்டு வேறு என்னவென்றாலும் தைத்துக் கொள்ள வசதியாகவே தையல் போட்டிருந்தேன்.) 
ஒவ்வொரு மேசைக்கும் ஒற்றை மஞ்சள் மலர், 'டாலர் ஷாப்பில்' வாங்கிய மெழுகுவர்த்திக்கு மலரலங்காரம் என்று செய்து வைத்தேன். 

இந்தப் படத்தில் உள்ளவற்றை மட்டும் விபரித்திருக்கிறேன். விழா பற்றிய மீதி விபரம் பின்னர் எப்போதாவது வரக்கூடும்.

செபாம்மா திருமணத்தின் பொது அவரது பெற்றோர்கள் உயிரோடு இல்லை; ஒரு தம்பியார் மட்டும் இருந்தார். 

ஐம்பதாவது மணநாளை சிறிதாக இருந்தாலும் என்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். நினைத்தபடியே அனைத்தும் நன்றாகவே நடந்தது. அதற்கும் மேல் மறுநாள் அம்மா தொலைபேசியில் அழைத்து தன் திருமணத்தன்று இருந்ததை விடவும் முதல் நாள் தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகச் சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

என் அன்புப் பெற்றோருக்கு என்னாலான ஒரு சிறு பரிசு. ;)

Thursday 17 February 2011

மீண்டும் ஆ!மை ஆமை.

;)
 விடுமுறையில் ஊருக்குப் போனேன் அல்லவா? முன்வீட்டில்...
 .....இவரோடு...
 இவரும் இருந்தார். தூக்கி வர ஆசைதான், முடியாது.
 இவர்... என் வீட்டு மேசை விளக்கில் இருந்தவர்.
கிறிஸ் முன்பு 7 Island Hotel இல்  வேலை பாரத்த சமயம் பிரியமாய் வாங்கிச் சேர்த்தவற்றில் மீதியாக உள்ளது இது.
மேஜை விளக்கு மூன்று பாகங்களாக இருந்தது. ;) ஆமைக் குட்டியை மட்டும் படம் பிடித்தேன்.
கொண்டு வரலாமா! வேண்டாமா! மூவருமாக ஆராய்ந்து, விட்டு விட்டு வரத் தீர்மானித்தோம்.
இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் எங்காவது நடுவே ஒரு விமான நிலையக் குப்பைத் தொட்டியில் போவதற்கு ஊரிலேயே இருக்கட்டும் என்று முடிவானது.

இவர்.... 'பின் குஷன் ஆமை'.
  கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இவரைப் பார்த்தேன். கொஞ்சம் வயது போய் விட்டது. ;)) கண்ணையும் காணோம். (நான் தான் வைக்காமல் விட்டு இருப்பேன்.)

பாடசாலையில் ஒரு 'வாழ்க்கைத் திறன்' பாடப் பொருட்காட்சிக்காகத் தயாராகிக் கொண்டு இருந்த சமயம்... பக்கத்து வீட்டு அங்கிள் தனது காலுறைகளை எடுத்து வந்து "வீசப் போகிறேன், வேண்டுமா?" எனவும் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துப் போய் என் வீட்டுப் 'பெட்டகத்தில்' பாதுகாப்பாக வைத்தேன். பின்பு ஆமையானது காலுறை. 'கழிவுப் பொருட்களிலிருந்து பயன்பாட்டுக்கான பொருட்கள்' என்னும் தலைப்பின் கீழே முதற் பரிசைப் பெற்றுக் கொடுத்தது.

இன்னுமொன்று சற்றுப் பெரிது... அதனை அடுத்த வட்டப் போட்டிக்காக என்று எடுத்துப் போய் விட்டார்கள். யார் வீட்டில் இருக்கிறதோ! அல்லது எந்தக் குட்டிக் குழந்தை கையிலாவது மாட்டி உயிரை விட்டு விட்டதோ தெரியாது.

இதனை மட்டும் என் ஆசிரியத் தோழி தனக்கு வேண்டும் என்று வாங்கி வைத்துக் கொண்டார். ஏழு வருடங்கள் முன்பு சென்ற போது தான் பத்திரமாக வைத்திருப்பதாக தன் 'ஷோ கேசை'க் காட்டினார். இம்முறையும் அது இருக்கிறதா என்று தேடினேன். இடம் மாற்றி இருக்கிறார். பிறகு பேச ஆயிரம் இருந்தது. நேரம் போதவில்லை, அதனை மறந்து விட்டோம்.

மறுநாள் வெளியே சென்று வரவும் வீட்டில் எனக்காக ஒரு உறை காத்திருந்தது,  உள்ளே இவர். கூடவே தகவலொன்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.. ;) என் மூத்தவர் அலனுக்குக் காட்ட வேண்டுமென்றால் நான் அதை நியூஸிலாந்து எடுத்துப் போகலாமாம். ஆனால் எத்தனை வருடம் கழிந்தாலும் மறு முறை நான் இலங்கை வருகையில் இதனைத் தன்னிடம் நினைவாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமாம். ;) முன்பு என்னிடம் இருந்திருந்தால் இன்று உங்கள் கண்களுக்கு அகப்பட்டு இராது. நான்தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து விட்டேனே. தோழியிடம் இருந்ததால் இன்று எனக்குக் காணக் கிடைத்தது. படம்பிடித்து வைத்துக் கொண்டு பத்திரமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். என் நினைவாக அவரிடமே இருக்கட்டும்.

Monday 14 February 2011

தேன்மெழுகு(வர்த்திகள்)




பழங்கதை பேசுகிறேன் ;)
தட்டச்சு செய்து நேரம் போதாமையால் பாதியில் சேமிக்கப் பட்டிருந்த பழைய இடுகை இது.

1/12/2010
வருட இறுதி, பரீட்சையும் முடிந்துவிட்டது. விசேட ஆக்க வகுப்புகள் நடைபெறுகின்றன இப்போது.
திங்களன்று ரங்கோலி வகுப்பு - ரங்கோலிக் கலைஞர் ஒருவர் இதற்காகவே வருகை தந்திருந்தார். அறிமுகம், விளக்கம் எல்லாம் முடிந்த பின், அட்டையில் ரங்கோலி வரைந்தனர். வரைந்த கோலம், நியூசிலாந்து நத்தார் காலத்தைச் சித்தரிக்கும் விதத்தில் பொஹுடுகாவா மலர். (மேலே இருக்கும் சிவப்புநிறப் பூ அதுதான்,) மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து ஆர்வத்தோடு வேலை செய்தனர். இறுதி முடிவுகள் பிரமிப்பாக இருந்தது. அட்டை என்பதால் க்ளூ + ரங்கோலிப் பொடி பயன்படுத்திய வரைந்து பின்பு ஃபிக்செடிவ்' பயன்படுத்திக் காயவிட்டனர். அவற்றை சட்டம் போட்டு மாட்டிவைக்கலாம். படங்கள் எதுவும் எடுக்கவில்லை அன்று. ;(

இவை 30/11/2010 அன்று என் மாணவர்கள் செய்த கைவேலை - தேன்மெழுகு மெழுகுவர்த்திகள். ஒவ்வொருவருக்கும் beeswax sheet ஒரு முக்கோணத் துண்டும் ஒரு நீள்சதுரத்துண்டும் மட்டும் அனுமதித்திருந்தேன். அடிப்படை விளக்கம் கொடுத்தபின் மீதியை அவர்களிடமே விட்டுவிட்டேன். அவர்கள் தனித்தன்மை என்று ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா?

வேலையை ஆரம்பிக்குமுன் ஒரு கடதாசியில் அவர்களது மெழுகுவர்த்தி அமைப்பைச் செய்து காட்டினார்கள். திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக உருவானவை இவை. சிலர் அலங்காரத்துக்காக சிறிய மெழுகுவர்த்தி வடிவம், வெள்ளை உள்ளம் ;) க்றிஸ்மஸ் மலர்கள் என்று வெட்டி ஒட்டி இருக்கிறார்கள்.
அனேகமானவற்றில் கோடுகள் மட்டும் இருக்கின்றன.

சாதாரண நாள் ஒன்றில் தொணதொணவென்று பேசி கற்பித்தலைக் குழப்பக் கூடிய மாணவரொருவர் இரண்டு ஆக்க வகுப்புகளிலும் கலந்துகொண்டார். அமைதியாகவும் விரைவாகவும் செயற்பட்டார். முழுக்கவனமும் வேலையில் இருந்தது. விளைவும் நேர்த்தியாக இருந்தது. வகுப்பில் எழுதும் போது மட்டும் கிறுக்கிவைப்பார். ;))

இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று என்ன செய்வார்கள்! அறிந்துகொள்ளலாம் என்று கேட்டேன். எல்லோருக்குமே யாருக்காவது நத்தார் காலப் பரிசாகக் கொடுக்கும் யோசனைதான் இருக்கிறது. எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)

Sunday 13 February 2011

Hi!


Happy Valentines Day to all my friends. ;)
love
imma

Monday 7 February 2011

ஒரு இனிய விடுமுறையின் நிறைவு...

இந்த நீண்ட இடைவெளியில் சங்கிலித் தொடராய் இனிமையான நிகழ்வுகள் பல கடகடவென்று வந்து போயின. ஒன்றின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முன் இன்னொன்று. 
மூன்று வாரங்கள் வீட்டில் மாமியோடும் உறவினர்களோடும் தங்கிய இனிமையான நினைவுகளோடு பத்து நாட்கள் சென்னையிலும் தங்கித் திரும்ப... மறுநாள் மாமியார் உடல் நலமில்லாமல் இருப்பதாகச் செய்தி வந்தது. அதற்கும் மறுநாள் பாடசாலையில் இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு துயரச் செய்தியைக் கொண்டு வந்தது. ;(
 
எங்கள் விடுமுறையை விடவும் எனது மாமியின் வாழ்க்கை இனிமையான பயணம்; இனிது நிறைவுற்றதே என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம். 

வாழ்வின் மேடுபள்ளங்களை எல்லாம் புன்னைகையோடு எதிர்கொண்டு எம் குடும்பத்தினருக்கு ஓர் முன்மாதிரிகையாகத் திகழ்ந்த அன்பு தெய்வத்துக்கு என் கண்ணீர் அஞ்சலி.
;(((
R.I.P
- இமா