Tuesday 24 March 2020

இமாவிடமிருந்து...

அன்பு இமாவின் உலகத்தோரே!

 நான் இங்கு நலம். எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அப்பா! பார்த்துப் பேசிச் சில வாரங்கள் ஆகுகின்றது. தொலைபேசியிலும் அவரைப் பிடிக்க முடிவதில்லை. சந்தோஷமாக, நலமாக இருக்கிறார் என்பது மட்டும் தெரியும். இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்கு அவசியம் ஏற்பட்டால் தவிர சந்திக்க முடியாது.

தினமும் ஒரு தடவை - 1 மணி நேரம் நடப்பது வழக்கம். இன்று நடக்கக் கிளம்பும் போது மனது நினைவூட்டியது, பாடசாலையிலானால் தினம் எத்தனையோ தடவை மாடி ஏறி இறங்க நேரும்; ஒரு கட்டிடத்துக்கும் இன்னொருக்கும் எத்தனையோ தடவை நடந்துவிடுவேன். இப்போது அது இல்லை எனும் போது... ஒரு மணி நேர நடை போதாது. நாளை முதல் தினமும் இரு முறை நடப்பதாக எண்ணியிருக்கிறோம். பெரும்பாலும் இருவரும் தனித்தனியாக நடப்போம். என் கால்கள் சிறியவை, க்றிஸ் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க இயலாது. ஒரு நடை தனித்தும் இரண்டாவதைச் சேர்ந்தும் நடக்கலாம் என்று இருக்கிறோம். மெதுவே குளிர் தலைகாட்ட ஆரம்பிக்கிறது. இருந்தாலும் நடந்தே ஆக வேண்டும்.

செய்திகள் பார்ப்பதற்கு முன்பை விட அதிக நேரம் செலவழிக்கிறோம். அதில் கொஞ்ச நேரமாவது கொறிப்பதும் நடக்கிறது. :-) நிறுத்த வேண்டும்; முடியாவிட்டால் குறைக்கவாவது வேண்டும். உடற்பயிற்சி இரண்டு நாட்கள் தடைப்பட்டுவிட்டது; தொடர வேண்டும்.

நாளைமறுநாள் மீண்டும் வேலை ஆரம்பம். பாடசாலை வேளை இணையத்தில் இருக்க வேண்டும். என் சின்னவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்; சந்தேகங்களைத் தீர்த்து உதவ வேண்டும். வேறு ஒரு வேலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு. இன்னொரு வகுப்பிற்குப் பாடம் தயார் செய்து கொடுக்க வேண்டும்.

இதற்கு மேல்... கொஞ்சம் சுத்தம் செய்தல், கொஞ்சம் கைவினை, கொஞ்சம் இணைய உலா. இவை மனதில் இருக்கும் எண்ணங்கள். இன்னும் இரண்டு வேலைகள் நினைத்து வைத்திருக்கிறேன். சொல்லாமற் செய்வோர் பெரியர். :-) சொல்ல மாட்டேன் இப்போது. :-)

சனிக்கிழமை அன்று அயல்வீட்டிலிருக்கும் சின்னவர் வழியாக ஒரு தட்டில் உணவும் சிறிய குறிப்பும் அனுப்பியிருந்தார் அவர் தாயார். வேலிக்கு மேல் எட்டிப் பார்த்து, "புதிய தொலைபேசி இலக்கம் அனுப்பியிருக்கிறேன். ஏதாவது உதவி தேவையானால் தயங்காமல் கேளுங்கள்," என்றார். அடுத்து இருக்கும் மற்றவர்களுக்கு முன்பே நான் செய்தி அனுப்பியிருந்தேன். நேற்றுக் காலை முதல் 70 வயதானோரை வீட்டில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்தார்கள். என்னையும் என் ஆஸ்த்துமாவின் தீவிரம் கருதி பாடசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். என்ன உதவி வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்பதாக எல்லோருமே சொல்கிறார்கள்.

முடிந்த வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். எம் நலனையும் கவனத்திற் கொள்வோம்.

எல்லோரும் நலமே இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
இமா

6 comments:

  1. நலமா இருக்க என் பிரார்த்தனைகள் இமா. இங்கு நாங்க நலமே.

    ReplyDelete
  2. அனைத்தும் விரைவில் நலமாக அமையட்டும் என்று வேண்டுகிறேன்...

    ReplyDelete
  3. உங்கள் மூவர் நலனுக்காகவும் என் அன்புப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  4. விரைவில் நலமாக வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே! உங்கள் நலனுக்காகவும் என் அன்புப் பிரார்த்தனைகள்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா