Wednesday 14 September 2016

எதுவும் கடந்து போகும்!

இது.... ஊரிலிருந்த காலத்தில்... கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முன்பு, நான் தைத்த தலையணை உறையில் இருக்கும் பூவேலைப்பாடு. அப்பா ஸிக்ஸாக் மெஷின் வாங்கிக் கொடுத்ததும், முதல் முதலில் தைத்துப் பார்த்த ஆப்ளிக் வேலை இது. ஊரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அம்மா இங்கு வரும் போது கூட எடுத்து வந்திருந்தார். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த படத்தை இந்த இடுகைக்காக தேடிப் பிடித்தேன்.
           
காலையில், வழக்கமாகப் பாடசாலையில் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டுத் திரும்பினேன். அருகே தரித்திருந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் பெண் ஒருவர்... ஏதோ தைப்பது போல் தெரிந்தது.

இறங்கி நான்கைந்து அடி தாண்டி நடந்திருப்பேன். மனம் திரும்பிப் பார்க்கச் சொன்னது. அந்தப் பெண் மும்முரமாகத் தைத்துக் கொண்டிருந்தார். என்னவோ தோன்றிற்று... அருகே சென்றேன்.

"Hi! good morning"

சத்தம் கேட்டு நிஷ்டை கலைந்தது போல் நிமிர்ந்தார். சின்னதாக ஓர் புன்னகை. ஆனால்... ஏதோ ஒன்று குறைந்தது போல் தெரிந்தது.
ஆளமான அமைதிப் புன்னகை!
ஓர் தீவிரம் இருந்தது அவர் முகத்திலும் வேலையிலும்.

"என்ன தைக்கிறீர்கள்? அழகாக இருக்கிறது."

காற்றும் அதிராமல் நிமிர்ந்து துணியைக் காட்டினார். ஓர் நீள்சதுர வெள்ளைத் துணியில், மாட்டியிருந்த தையல் வளையத்தின் நடுவே ஓர் சிவப்பு நிறப் பூவை உருவாக்கிக்கொண்டிருந்தார். சுற்றிலும் பரவலாக, பெரிய பெரிய செவ்வரத்தம்பூக்களும் இலைகளும் தெரிந்தன. சாமோவன் பெண் என்னும் என் ஊகம் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

முப்பது வயது இருப்பார் என்று நினைக்கிறேன். பிள்ளைகளோ மருமக்களோ அல்லது சகோதரர்களோ எங்கள் பாடசாலையில் கற்க வேண்டும். அவர்களை இறக்கிவிட்டு தையலில் ஈடுபட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட பாதி தையல் வேலை முடிந்திருந்தது. மீதி, பென்சில் கோடுகளாகத் தெரிந்தது.

"வேலைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு முப்பது நிமிடங்கள் தைத்துவிட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும்." என்றார் மென்மையாக.

"கடந்த வாரம் என் கணவரை இழந்துவிட்டேன். அந்தத் துயரிலிருந்து வெளியே வரும் முயற்சி இது." என்றார் அதை விட மென்மையாக.  ஒரு நொடி பேச்சிழந்து நின்றேன்.

அவர் கண்கள் கலங்கவில்லை; ஆனால் வெறுமை மட்டும் அழுத்தமாகத் தெரிந்தது. அவர் முகத்தில், வெளியே வந்துவிடவேண்டும் என்கிற உறுதியும் அதற்கு மேல் ஓர் தெளிவும்  தெரிந்தது.

ஒரேயடியாக உடைந்து போகாமல் மீள நினைக்கும் அவர் போக்கு... மனதைத் தொட்டது. இழப்புகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை நீரோட்டத்தோடு இயல்பாகப் பயணப்பட நினைக்கும் அவர் முயற்சி  வெற்றியளிக்க வேண்டும். சின்னதாக ஓர் பிரார்த்தனை மனதினுள் ஓடியது.

என் பேச்சு அவர் துயரத்தைக் குறைக்க உதவாவிட்டாலும் பரவாயில்லை;  அதிகரிக்க வைத்து விடக் கூடாது. நானும் அவர் போக்கிலேயே, மென்மையாக தையலைப் பாராட்டிவிட்டு, இன்றைய நாள் நன்றாக அமையட்டும் என்று வாழ்த்திவிட்டுக் கிளம்பினேன்.

3 comments:

  1. நல்லதொரு பகிர்வு. அத்தையலின் துயரத்தைப் போக்கட்டும் தையல்....

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் மீண்டும் அவரைச் சந்தித்தேன். இம்முறை இரண்டு ஊசிகளை வைத்து என்னவோ பின்னிக்கொண்டிருந்தார்.

      நன்றி சகோதரரே.

      Delete
  2. ஒரேயடியாக உடைந்து போகாமல் மீள நினைக்கும் அவர் போக்கு... மனதைத் தொட்டது...

    உங்கள் பகிர்வும் என் மனதை தொட்ட்து . தொடருங்கள் பா ராட்டுக்கள்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா