Saturday 13 January 2018

உங்களிடம் சில‌ வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்

எச்சரிக்கை! வழமைக்கு மாறாக‌ இது நீ.....ண்ட‌ இடுகையாக‌ இருக்கப் போகிறதோ! :-)
'உங்களிடம் சில‌ வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்' - இது... தொடரை ஆரம்பிக்க‌, 'அவர்கள் உண்மைகள்' மதுரைத்தமிழன் பயன்படுத்தியிருந்த‌ தலைப்பு. தொடர்புள்ளிகளுடன் அப்படியே கொடுத்திருக்கிறேன்.  அவரது அழைப்பை ஏற்று எழுதிய‌ அதிராவைத் தொடர்ந்த இளமதி, தொடருமாறு எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அவரிடம் தனியாக‌ சற்றுத் தாமதமாகத்தான் எழுதக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

என் சிறுவயதுத் தோழியின் தாயார் சொல்லிய‌ ஒரு வார்த்தை, நான் நினைவில் வைத்திருக்க‌ வேண்டிய‌, ஆனால் ‍ நினைவில் வைத்திராத‌ விடயம் ஒன்றுண்டு. (1) 'ஆறிய‌ கஞ்சி பழங்கஞ்சி!' அறுசுவையில் சில‌ இடுகைகள் நான் தாமதித்த‌ காரணத்தால் எழுதப்படாமலே போயின‌. சிலருக்கு உணவுக் குறிப்புகள் அனுப்ப‌வும் இருக்கிறது. இந்தத் தொடரை இப்பொது விட்டுவிட்டால் பிறகு சுட்டியைத் தேடிப் பிடிப்பது சிரமம். (2) 'அலை எப்போது ஓய்வது; தலை எப்போது மூழ்குவது!' (இது நடிகர் நாகேஷ் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு கொடுத்த‌ ஒரு பேட்டியில் நான் முதன்முதலில் கேட்டது.) அலை அடிக்கும் போதே தலை மூழ்குகிறேன். :‍)

ஆலோசனை / அறிவுரை / அட்வைஸ்!! இந்தச் சொற்கள் பற்றி எனக்குச் சரியான‌ விளக்கம் கிடையாது.

கடைசியிலுள்ள‌ ஆங்கிலச் சொல் பற்றி... அது பொருளாகவும் வரும்; வினையாகவும் வரும். சிறு வயது முதலே எனக்கு ஒரே மாதிரி இரண்டு சொற்கள் / விடயங்கள் இருந்தால், எது என்ன‌ என்பதை நினைவு வைத்திருப்பதில் சிரமம் இருந்தது. (3) எதையாவது குறியீடாக‌ நினைத்து வைத்தாலன்றி தவறாகவே எழுதுவேன். உ+ம் அஜி, சுஜி என்று இரு சகோதரர்களிருந்தால், 'அ முதலெழுத்து அல்ல‌.' என்று நினைவு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் மனதினுள் குறியீட்டு வசனத்தைச் சொல்லிப் பார்த்தே பேசுவேன். (அதிராவுக்காக‌... கதைப்பேன்.) ;‍) பெயர்ச் சொல் - advice, வினைச் சொல் - advise. 'If you see a 'C', it's the noun.' S!!! ஸ்ஸப்பா! என்று உணர்வுகளுடன் விளையாடும் சொல் வினை.

சிறு வயதில் தனித்து வாழ்ந்த‌ காலம் அதிகம். உறவுகளிடமிருந்து தொலைவிலிருந்தது எங்கள் வீடு. சுற்றாடலில் ஒரேயொரு வீடுதான் இருந்தது. பேசாமடந்தையாக‌ வளர்ந்த‌ காரணத்தால் இன்றும் நானாகப் போய் யாரிடமும் அட்வைஸ் கேட்பது குறைவு. என் மனதைக் கேட்பேன். நல்ல‌ நட்பாக‌ அமைதியாக‌ அது என்னுடன் பேசும். தைரியமான‌ என் தவறுகளைச் சுட்டிக்காட்ட‌ வல்ல‌ நட்பு அது. அதற்கு மேல்... க்றிஸ் நான் கேளாமலே ஏதாவது சொல்வது உண்டு. நாங்கள் வெகு பிரியமான‌ சோடி, நல்ல‌ நண்பர்கள் என்பதால் எம் சிந்தனைகள் ஒரே விதமாக‌ இருக்க‌ வேண்டும் என்பது இல்லை அல்லவா? நிறைய‌ விடயங்களில் எதிர்மாறுதான். குழந்தையாக‌ இருந்த‌ காலத்திலிருந்தே நான் சற்று முற்போக்குச் சிந்தனை கொண்டவளாக‌ இருந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களோடு பொருந்திப் போக‌ இயலாமல் மன‌ உழைச்சலுக்கு ஆளானது உண்டு. மணமான போது இருபது வயதாகி இருந்தாலும் என் தோற்றம் என்னைச் சின்னப் பெண்ணாகக் காட்டியது எல்லா வகையிலும் எனக்குப் பாதகமாகவே இருந்திருக்கிறது. பிடிக்காதவற்றைப் பின்பற்றவும் இயலாமல் சொல்லவும் மாட்டாமல் தவிக்கும் தருணங்களில் விட்டுக் கொடுக்கச் சொல்லும் க்றிஸ் மேல் தான் என் கோபம் திரும்பும். பாவம் அவர். :‍) குறைந்தது மூன்று நாட்களாவது பேச‌ மாட்டேன். (அது பெரிய‌ பிரச்சினை இல்லை. ஆள் அதிகாலை நான்கு மணிக்கு வேலைக்குப் போனால் வர‌ இரவு பன்னிரண்டைக் கடந்துவிடும். கண்ணை இறுக‌ மூடிக் கொண்டு இருந்தால் வாய்க்கு வேலை ஏது!) பிறகு மெதுவே ஒரு மாற்றம். என்னிலில்லை, க்றிஸ்ஸில். என் பல‌ எண்ணங்கள் அவரிடம் புகுந்திருந்தது. சில‌து என் மாமிக்கும் மாறியிருந்தது. பெருமையோடு மெதுவே அவதானிக்க‌... வார்த்தையால் அறிவுரை சொல்வதை விட‌.... (4) நான் நானாக‌ இருப்பதே மற்றவர்களுக்கு பெரிய‌ அறிவுரையாக இருக்கிறது என்று தோன்றிற்று.

என் பிள்ளைகள் எனக்குப் பல‌ விடயங்களில் உதவியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவுரைகள் கிடைப்பதில்லை. என்னுடனான‌ ஆரோக்கியமான‌ உரையாடல்கள் - (5) கனிவான‌ ஒரு பக்கம் சார்ந்திராத‌ உரையாடல்கள் அவை. என் சரியான‌ எண்ணங்களைச் சிலாகிப்பார்கள்: தவறானவற்றை நாசூக்காகப் புரிய‌ வைப்பார்கள். அவர்கள் சொல்லாமலே என் மனது சரியானதை எடுத்துக் கொள்ளும். வந்து இணைந்த‌ மருமக்களும் இப்படியே தான் அமைந்திருக்கிறார்கள். ஆலோசனைக்கு உகந்தவர்களாக‌, சிந்திக்க‌ இயலாத‌ தருணங்களில் 'என்' சிந்தனாசக்தியாக‌ இவர்கள் நால்வரையும் காண்கிறேன். சென்ற‌ ஞாயிறன்று என் மனதில் உதித்த‌ எண்ணம்... க்றிஸ் உயிருடன் இருந்தாலும், அவருக்கு முன் எனக்கு இயலாமை தோன்றினால் என் பிள்ளைகளையே என் பாதுகாவலர்களாக‌ நியமிக்குமாறு உயில் போன்று எங்காவது குறித்து வைக்க‌ வேண்டும் என்பது. க்றிஸ்ஸுக்கு வெகு மென்மையான‌ மனம். மற்றவர்கள் மனம் நோக‌ நடக்கக் கூடாது என்பதை மட்டுமே நினைப்பார். அவரைப் பொறுத்த‌ வரை, நோயாளிக்கு / வயோதிபருக்கு இன்னின்னது ஆகாது என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அவர்களது சந்தோஷத்திற்குத் தான் முதலிடம் கொடுப்பார் என்பதை என் பெற்றோர் விடயத்திலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன். என் நான்கு பிள்ளைகளும் 'எனக்கு' எது நல்லது என்பதை ஆராய்ந்து, எதற்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டும் என்பதை அறிந்து நடப்பார்கள். இதிலிருந்து யாருக்காவது அறிவுரை (5) கிடைக்குமானால்... எடுத்துக் கொள்ளுங்கள். :‍)

அப்பா... வாழ்ந்து மட்டும் காட்டியவர். அவரிடமிருந்து எப்படி நடக்க‌ வேண்டும் என்பதையும் சில‌ சமயங்களில் எப்படி நடக்கக் கூடாது என்பதையும் அனுபவ‌ அறிவாகப் பெற்றேன்.

அம்மா... சொன்ன‌ பாரதூரமான‌ அறிவுரைகள் இரண்டு. (6) 'சாகிற‌ மாடு கண்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறது இல்லை.' அ+து உன் வாழ்க்கை உன் கையில். நீயே அதற்குப் பொறுப்பு. 'யாரையும்' எதிர்பார்க்காதே. (இங்கு மாடு - 'பசு' மட்டும் தான்எ ன்பதை மனது குறித்துக் கொண்டது.) (7) தனக்கு ஏதாவது ஆனால் உடனடியாக‌ வீட்டை விட்டு வெளியேறி கார்மேல் சபைக் கன்னியர்களுடன் போய் வசிக்கச் சொன்னார். (என் வீட்டில் அப்பாவும் என் தம்பியும் மட்டும் இருந்திருப்பார்கள். வீட்டிற்கு வருவோரும் பெரும்பாலும் ஆண்களாக‌ மட்டும் இருந்திருப்பார்கள்.) இதென்ன‌ இப்படிப் பேசுகிறேன் என்று நினைப்பீர்கள். இந்தக் கதையைப் படியுங்கள், புரியும். அது அம்மா தன் சொந்த அனுபவத்திலிருந்து சொன்ன‌ அறிவுரை. அவரது தாயார் அவருக்குச் சொல்லியிருந்த அறிவுரை. முதலில் தந்தையாரும் தொடர்ந்து தாயாரும் இறந்த பிறகு அம்மா பிரான்சிஸ்கன் கன்னியர் மடத்தில் தான் வளர்ந்தார்.

அம்மாவின் இன்னொரு அறிவுரை! / விருப்பம்! -  வாழ்க்கையில் என்ன‌ ஆனாலும் என் தம்பியை அரவணைத்து வைத்துக்கொள்ள‌ வேண்டும் என்பது. (அவர் தம்பியின் வாழ்க்கை நன்றாக‌ அமையவில்லை. சரிசெய்து கொடுக்கவோ அவருக்கு ஆறுதலாக‌ இருக்கவோ அப்பாவை மீறி எதுவும் செய்ய‌ இயலாத‌ நிலை. அது அவரை வாட்டியிருக்க‌ வேண்டும்.) இதன் வழியே நான் புரிந்துகொண்டது... (8) 'தேவைப்படும் போது.... நிமிர்ந்து நில்; கோழையாக‌ இராதே!' என்பது.

என் மூத்தவர் சிரித்துக் கொண்டே அழகாக‌, ஆளமாகப் பேசும் திறன் வாய்ந்தவர். சொல்வதை நச்சென்று சுருக்கமாக‌ சொல்வார். ஓட்டிப் பழகும் சமயம் மோட்டர் வண்டியை... அதை வண்டு என்றும் சொல்லலாம், ஒரு பள்ளத்தில் இறக்கினேன். வீட்டிற்கு வந்ததும் சிரித்தபடி சொன்னார், "நானும் டடாவும் எத்தனை அக்சிடண்ட் பட்டிருக்கிறம். இது ஒரு இன்சிடண்ட் மட்டும் தான். லைசன்ஸ் கிடைச்ச‌ பிறகு நிறைய‌ அடிபடுவீங்கள். (9) டோன்ட் கிவ் அப்" அதோடு நினைவுக்கு வந்த‌ வாசகம்... அறுசுவையில் இலா வைத்திருந்த‌ விருப்ப‌ வாசகம்... (10) "10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"

நான் நானாக‌ - அறுசுவையில் ஆரம்பத்தில் 'நன்றாக‌ இருக்கிறது' என்றும் 'நன்றி' என்றும் மட்டும் தட்டியிருப்பேன். அதற்கே பல‌ நிமிடங்கள் செலவாகும். பிழையில்லாமல் செய்ய‌ வேண்டும் அல்லவா? இன்று நிலை வேறு. அங்கு பலருக்கும் அட்வைஸ்... :)) சொல்கிறேன். சில சமயம் தோன்றும்.... இதற்கு இன்னொரு பெயர்... 'ஆவலாதி' அல்லவா! மற்றவர்களது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைக்கிறோமோ! இல்லையில்லை! அவர்கள் கேட்பதால்தானே என் மனதில் படுவதைச் சொல்கிறேன்! 'இது உதவிதான்; ஆவலாதித்தனம் அல்ல,' என்று மனம் சமாதானம் சொல்லும். சில சமயங்களில், 'கொஞ்சம் கடுமையாக விமர்சிக்கிறோமோ!' என்றும் தோன்றும். அதற்கும் மனம் ஒரு சமாதானம் தயாராக வைத்திருக்கும் - 'என் பதில் தவறாகவும் இருக்கலாம். அவர்கள் எங்கே முழு விபரத்தையும் கொடுத்திருக்கப் போகிறார்கள்! எனக்கு கிடைத்த தகவலைக் கொண்டு அவர்களை நான் சிந்திக்க வைக்கிறேன், அவ்வளவுதான். முடிவு அவர்கள் கையில்தான் இருக்கிறது,' யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நியாயத்தை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பது அவரவர் பொறுப்பு அல்லவா!


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு. 

அதிகாரம் - அறிவுடைமை 
குறள் - 423
~~~~~~~~~~~~
வேறு ஒரு காரியத்தில் முழுமூச்சாய் ஈடுபட்டிருக்கிறேன். தூக்கக்  கலக்கத்தில்  தினமும் சிறிது சிறிதாகத்  தட்டிய இடுகை இது. எங்காகியினும் எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டால் சுட்டிக் காட்டுங்கள், திருத்தி விடுகிறேன். இப்போதே நன்றி.

20 comments:

  1. அன்பு இமா!..

    உங்களின் இடுகையைக் கண்டவுடன் ஓடி வந்து நன்றி கூறிச் செல்கின்றேன்!

    பின்னர் வந்து படித்துக் கருத்திடுவேன்!..:)

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அன்பு இமா!

    உங்கள் இடுகையைக் கண்டவுடன் ஓடிவந்து நன்றி மட்டும் இப்போ கூறிச் செல்கின்றேன்..

    மீண்டும் வந்து படித்துக் கருத்திடுவேன்!..:)

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆஹா இமா றீச்சரின் ஆலோசனைகளும் சுடச்சுடச் சபைக்கு வந்து விட்டனவே...

    //(அதிராவுக்காக‌... கதைப்பேன்.) ;‍)//

    ஆங் அப்பூடித்தான் கதைக்கோணும் இமா.

    என்னாது 3 நாட்கள்கூடப் பேசாமல் இருப்பீங்களோ? ஹையோ அப்பூடியெனில் எனக்கு கிட்னி வெடிச்சிடும்:)).. என்னால முடியவே முடியாது, ஏதும் பிரச்சனை வந்தால் உடனேயே அடிபிடிப்பட்டு நேராக்கிப்போட்டு பேசிடுவேன்.... ஒரு மணி நேரம்கூட கோபமாக இருந்ததே கிடையாது.. கணவரும் அதே டைப்பூஊஊஊஉ:))

    இப்போ பிள்ளைகளும் அதே... சிலசமயம் கொஞ்சம் கடினமாக குரலை உயர்த்திப் பேசிப்போட்டு நினைப்பேன்... கோபிச்சிடுவினமோ.. கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமோ என... ஆனா அடுத்த செக்கண்ட்டே ... அம்மா அது தாறீங்களா.. என் இது எங்கே என எதுவுமே நடக்காததுபோல கதைப்பினம்...

    என் எண்ணம் .. இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போமே... என்பதே.

    ReplyDelete
  4. //சரிசெய்து கொடுக்கவோ அவருக்கு ஆறுதலாக‌ இருக்கவோ அப்பாவை மீறி எதுவும் செய்ய‌ இயலாத‌ நிலை. ///

    அந்தக்காலம் போல் இக்காலம் இல்லை இமா... இப்போ இப்படியான விசயத்தில் ஒருவருக்கு ஒருவர் தடை போட்டு மூக்கை நுழைப்பதில்லை என்றே நினைக்கிறேன்...

    நீங்க சொன்னது சரி... சில விசயங்களில் ஸ்ரெடியாகத்தான் நிக்கோணும்... அதுக்காக அடிபிடி எதிர்ப்புக் காட்டாமல்.. அன்பால வழைச்சு சேர்த்து நம் வழிக்கு கொண்டு வந்திடோணும்.. ஏதும் எதிர்ப்பிருப்பின்...

    என்ன இமா, சைக்கிள் ஓட்டிப் பழகினனீங்களோ? காரை இப்பூடி ஏத்தியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....

    அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்புக் கேட்டுப் படமும் எடுத்திருக்கிறீங்க:) உங்க திறைமை பார்த்து மீ வியக்கேன்ன்:)..

    ReplyDelete
    Replies
    1. ;) காரை ஏத்தேல்ல; இறக்கியிருக்கிறன். ;))

      படம் எடுத்தது க்றிஸ். எல்லாருக்கும் காட்டி என்னைப் பகிடிபண்ண ஆதாரம் வேணாமோ!

      Delete
  5. ///வேறு ஒரு காரியத்தில் முழுமூச்சாய் ஈடுபட்டிருக்கிறேன்.//

    ஹலோ... றீச்சர்ர்ர்ர்ர்...”தனக்குத் தனக்கெண்டால்.. சுளகு, படக்குப் படக்கெண்ணுமாமே”:).. புரிஞ்சால் ஜெரி:)) ஹையோ இத்தோடு மீ புறப்படுறேன்:)..

    ReplyDelete
    Replies
    1. அது... இந்த இடுகை பதிவு செய்ததற்கு அடுத்த நாள் பொங்கலெல்லோ! ;) எங்க வீட்டில 13 தான் பொங்கல். ;)

      Delete
  6. வணக்கம் இமா!.. மீண்டும் வந்து விபரமா எழுதணும் என்று நினைச்சுப் போயும் செயல்பட இப்பதான் நேரம் வந்திச்சு..

    இந்தத் தொடர் எழுதச் சொன்னபோது நான் அதிராவுக்குச் சொல்லீட்டன். ஐயோ சுய புராணமாய் இருக்கும். அதிலும் அழுத்தம் அதிகமாகி மனம் கனத்துப் போகிறமாதிரி அமைஞ்சிடும் எண்டும் பயந்தேன்.
    எவ்வளவு முயற்சித்தும் மனக் கனதி தரக்கூடிய சம்பவங்கள் + எழுத்தை என்னால் தவிக்க முடியாமல் போச்சு!..

    இப்ப உங்கள் பதிவைப் பார்க்கும்போதும் இரண்டும் கலந்த உணர்வே எனக்கும் ஏற்பட்டது.
    இருப்பினும் கொஞ்சம் மனம்விட்டுவிட்டுப் பேசச் சந்தற்பம் கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு எனக்கு.

    //குறைந்தது மூன்று நாட்களாவது பேச‌ மாட்டேன். //.. ஐயோ.. இது 2 மச் இமா. எப்பிடி இருந்தீங்கள்?..
    எங்களின் வீட்டில் மாறி நடக்கும். அவர்தான் வச்சு வளர்ப்பார். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில தெரியும் என்கிறமாதிரி எனக்கு விளங்கீடும் இவர்3 நாளைக்கு இதை இழுக்கப் போறார் எண்டு.. உடனேயே அழுது, கெஞ்சிக் கூத்தாடி அவரின் கோபமூட்டை மாத்தீடுவன். அதையும் விளங்கீடும் மனுசன்... சிரிச்சிட்டு சொல்லுவார்.. உந்த அழுகைதான் உன் ஆயுதம்.. இருக்கட்டும் ஒரு நாளைக்கு உதெல்லாம் வேலை செய்யாது என்னட்டை. அப்ப பார் என்பார்...:)

    //என் பிள்ளைகள் எனக்குப் பல‌ விடயங்களில் உதவியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவுரைகள் கிடைப்பதில்லை. என்னுடனான‌ ஆரோக்கியமான‌ உரையாடல்கள்..........//

    ஒரே வரியில் சொல்வதென்றால் குடுத்துவைச்சனீங்கள் இமா!..

    //எனக்கு இயலாமை தோன்றினால் என் பிள்ளைகளையே என் பாதுகாவலர்களாக‌ நியமிக்குமாறு உயில் போன்று எங்காவது குறித்து வைக்க‌ வேண்டும் என்பது. ..//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஏனுப்படி உங்களுக்கு கன்னாபின்னா எண்டு இப்படியான சிந்தனை ஓடுது உங்களுக்கு...
    பாவம் க்றிஸ்! நல்ல மனம் அவருக்கு! சந்தோஷமே வாழ்வின் குறிக்கோளாய் இருக்குமாயின் அதற்காக என்ன ஒரு சிக்கல்களையும் சமாளித்துச் சந்தோஷத்தை வரவைப்பினம்தானே!.. அவரின் எண்ணங்களிலும் தப்பிருக்கிறதா தெரியேலை.

    இங்க அதிரா சொன்னதைதான் // என் எண்ணம் .. இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போமே... என்பதே.//
    நானும் நினைக்கிறன்! சொல்லுறன்! இருக்கும் வரை நாமும் சந்தோஷமாகவும் மற்றவர்களையும் சந்தோஷமாகவும் வைத்திருக்க முயலுவோம்!

    என்னுடைய இழப்பு அப்படி இருக்க விடுவதில்லை. ஆயினும் சுற்றி இருப்பர்களுக்காக இப்போதெல்லாம் என்னை மாற்றவேணும் எண்டு நினைக்கிறேன்...
    இதற்கு அதிராவின் பங்கும் பிரச்சனைகளை எப்படிக் கையாள வேண்டும் என்னும் உங்களின் வாழ்க்கை ஸ்டைலும் தந்த பாடங்களே!

    ஹைலைட்டாக சிரிக்க வைத்த விசயம் உங்கள் "வண்டினை" றோட்டால் இறக்கிப் புல்லுமேயவிட்டதுதான்...:))

    நல்ல அனுபவமும் பெற்றுக்கொண்ட அட்வைஸ்களும் சிறப்பு இமா!
    வாழ்க்கைப் பயணத்தில் இடம்பெறும் சம்பவங்களும் அதில் கிடைக்கும் அனுபவங்களும் பெரும்பாலும் திருப்புமுனைகளே!

    உங்களின் முயற்சிகள் திருவினையாக்கட்டும்!

    நலமும் வளமும் பெருகட்டும் உங்கள் வாழ்வில்!
    வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
    Replies
    1. ஹைலைட்டாக சிரிக்க வைத்த விசயம் உங்கள் "வண்டினை" றோட்டால் இறக்கிப் புல்லுமேயவிட்டதுதான்...:))

      Delete
    2. //வாழ்க்கைப் பயணத்தில் இடம்பெறும் சம்பவங்களும் அதில் கிடைக்கும் அனுபவங்களும் பெரும்பாலும் திருப்புமுனைகளே!// உண்மை தான் இளமதி. அதாலதான் இப்பிடிச் சில நேரம் கண்டபடி நினைக்க வாறது.

      ;) நானும் அதை வாசிச்சுச் சிரிச்சன் நிலா. ;)

      Delete
  7. அழகான அனுபவங்கள்.. அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களை விட சிறந்த அறிவுரைகள் ஏது? அம்மா அப்பா பற்றிய செய்திகள் மனத்தை நெகிழ்வித்தன. பிள்ளைகள் கணவர் குறித்த செய்திகள் வியப்பளித்தன.நாம் வாழ்கின்ற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள எனக்கு முன்மாதிரியாக சில நல்லுள்ளங்கள் உண்டு. அவர்களுள் நீங்களும் ஒருவர் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் இமா. அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னை முன்மாதிரிகையாயெல்லாம் எடுக்க வேண்டாம் கீதா. நிறையப் பிழைகள் விடுவன். :-) பெரிய ப்ளஸ் என் மறதி. மறக்க ஏலாமல் இருக்கிற ஒரே விஷயம்... அம்மா. ;(

      Delete
  8. சிந்தித்து முடிவு எடுக்கவும் நல்ல ஆலோசனை கொடுப்பது மிகவும் அவசியம் தானே? அருமையான ஆவலாதி வார்த்தை.

    ReplyDelete
    Replies
    1. 'ஆவலாதி' இலங்கை ஸ்பெஷலோ! இந்தியாவிலயும் கதைக்கிறவங்களோ அப்பிடி!

      Delete
  9. பத்தாவது தடவை விழுந்த போது பூமி சொன்னனது ..ஒன்பது தடவை விழுந்து எழுந்தவனல்லவா நீ ...

    நம்பிக்கை தரும் வார்த்தை ..

    உங்கள் பதிவை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிலாமதி.

      அது இலா ஸ்பெஷல். அவருடன் தொடர்பு விட்டுப் போய் சில வருடங்களாகிறது. ;( என்றாவது மீண்டும் சந்திப்போம்.

      Delete
  10. நான் நானாக‌ இருப்பதே மற்றவர்களுக்கு பெரிய‌ அறிவுரை. உண்மை இமா.

    ReplyDelete
  11. அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை !!!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா