Thursday 30 April 2020

டாரோ ரோஸ்ட்

குறிப்பு இல்லாச் சமையல் இது. :-)

டாரோ இங்கே, சாமோவா, டொங்காவில் இது டாலோ. தமிழில்... சேப்பங்கிழங்கு!

இலங்கையில் இருந்தவரை சாப்பிட்டது இல்லை. ஆனால் சிங்களவர்கள் சாப்பிடுவார்கள் என்பது தெரிந்திருந்தது. ஏதோ ஒரு பழைய திரைப்படத்தில் (பதர்பாஞ்சாலி என்பதாக நினைவு. நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.) வறுமையிலிருக்கும் பிள்ளைகளுக்கு உணவு சமைக்க, இருட்டில் தாய் இந்தக் கிழங்குகளைப் பிடுங்கிப் போவதாகப் பார்த்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைத் திரைப்படம், அதிலும் மிகப் பழைய பிரதி வேறு. டாரோ என்று ஊகிக்க முடிந்தது.

பத்து வருடங்களின் முன்பு, கூடக் கற்பித்த ஃபிஜி ஆசிரியை கன்று ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். வேலி ஓரமாக மெதுவே நீண்டு பெருகிற்று தாவரம். வீட்டில் தனித்திருக்கும் பகற்பொழுதுகளில், அவ்வப்போது கிழங்குகளைப் பிடுங்கி மைக்ரோவேவ் செய்து கட்டசம்பலைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவேன். பிஞ்சுக் கிழங்குகள் சற்று வழுக்கும். முதிர்ந்தவை சுட்ட கிழங்கு போல் இருக்கும். க்றிஸ் சாப்பிட மாட்டார். அறிமுகமில்லாத உணவுகளைத் தொடத் தயங்குவார். எனக்கு தாவர உணவு என்றால் அதிலும் புதினமாவை பிடிக்கும். :-) இவற்றின் இலைச் சுருள் பொரியல் மிகவும் பிடிக்கும்.

வேலி ஓரத்தைச் சுத்தம் செய்யும் முயற்சியில் டாரோச் செடிகளை அப்புறப்படுத்த ஆரம்பித்திருந்தேன். வீணாக்குவதாக இல்லை, சாப்பிட்டுத்தான் முடிக்க வேண்டும். அந்தச் சமயம் நாத்தனாரும் இங்கு வந்து சேர, இடைக்கிடை ஒரு தொகுதி கிழங்குகளைப் பிடுங்கி அங்கு அனுப்பி வந்தேன்.








சென்ற வாரத்து அறுவடையில் சமைத்தது இது ----------------> 







வழுக்கும் தன்மையான கிழங்குகளையும் ஒரு வாரம் வரை பிடுங்கி வைத்திருந்து சமைத்தால் சற்று முற்றிவிடும். பிடுங்கியதுமே மண்ணைக் கழுவி வைத்துவிடுவேன்.

அப்படி வைத்திருந்ததை இந்த வாரம் மைக்ரோவேவ் செய்து (எத்தனை நிமிடங்கள் சமைக்க வேண்டும் என்பது கிழங்கின் அளவைப் பொறுத்தது. ஒரே அளவான கிழங்குகளை ஒன்றாக வைத்து இரண்டு நிமிடங்கள் ஓட விட்டு, திறந்து சோதித்து, திருப்பிப் போட்டு மீண்டும் இரண்டு நிமிடங்கள் ஓட விட்டு...  நேரக் கணக்கு பயிற்சியில் தானாக வந்துவிடும்.) ம்... மைக்ரோவேவ் செய்து சில நிமிடங்கள் வெளியே எடுத்து வைக்க வேண்டும். ஆறியும் ஆறாமலும் இருக்கும் போதே தோலைப் பிரிக்க வேண்டும். படைபடையாக வரும். (ஆவி வரும், கை கவனம்.) இப்படியே இட்லிப் பொடி, எண்ணெய் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

அல்லது வட்டமாக கால் அங்குலப் பருமனில் வெட்டிக் கொண்டு, ரொட்டி சுடுவது போல் எண்ணெய் பூசிய தட்டில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கலாம். மேலே உப்பு & mixed herbs, lemon pepper, garlic flakes, tuscan seasoning என்று சுவையூட்ட எதையாவது தூவிக் கொண்டும் சுடலாம். இம்முறை க்றிஸ் நன்றாக இருக்கிறது என்று கொடுத்த முழுவதையும் சாப்பிட்டுவிட்டார்.

இன்னும் ஒரு அறுவடை கிடைக்கும். பிறகு தொட்டியில் வளர்க்கலாம் என்று இருக்கிறேன். தொட்டியில் என்றால், தொட்டியில் அல்ல; பழைய recycle bin இருக்கிறது. இப்போது அவை புழக்கத்தில் இல்லை. காய்கறி பயிரிட உகந்தவை. அவற்றில் ஒன்றில் ஏற்கனவே ஒரு குட்டிக் கிழங்கைப் போட்டிருந்தேன். தளதளவென செழித்து வளருகிறது. பெருப்பித்து எடுக்க வேண்டும்.

10 comments:

  1. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் - நல்லாவே இருக்கும். இரும்பு வாணலியில் செய்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இரும்பு வாணலியில் சுட்டால் நன்றாகத்தான் இருக்கும். நான்ஸ்டிக் பாத்திரம் சுவை குறைவுதான். இரும்பு வாணலி ஒன்று வாங்கத்தான் தேடுகிறேன். இலங்கைக்குப் போனால்தான் உண்டு போல.

      Delete
  2. சேப்பங்கிழங்கு என்பது சீனிவாத்தாழைக்கிழங்கு என்று நினைக்கின்றேன்.மலையகத்தில் அதிகம் இருக்கும்.எதுக்கும் தேடிப்பார்த்து சொல்லுகின்றேன். நலம் தானே டீச்சர்!

    ReplyDelete
    Replies
    1. கனகாலத்திற்குப் பிறகு உங்களோடு கதைக்கிறன். நலம்தான். நீங்கள் சுகம்தானே! சீனிவற்றாளை... அது இங்கத்தைய கூம்ரா என்று நினைக்கிறேன். சேப்பங்கிழங்கும் மலையத்தில் கிடைக்கும். தேடிப் பார்த்து லிங்க் கொடுங்க நேசன்.

      Delete
    2. கொர்னா ஓய்வு தந்து இருப்பதால் வலைப்பக்கம் மேய்கின்றேன் இல்லையேல் முகநூலோடு பொழுது ஓடிவிடும் டீச்சர்![[

      Delete
    3. எனக்கு முன்பை விட வேலை அதிக நேரத்தைப் பிடித்துக் கொள்கிறது. கட்டாயமாக இங்கு வருகிறேன். இல்லாவிட்டால் விசராக இருக்கு. :-)

      Delete
  3. சேப்பங்கிழங்கு ஊரில் சாப்பிட்டதோடு சரி. பார்க்க நல்லாயிருக்கு. தமிழ்கடையில் பார்த்தால் வாங்கி செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கடையில் கிடைக்கிறது பிஞ்சுக் கிழங்குகளாக இராது. வழுவழுப்பில்லாமல் நன்றாக இருக்கும்.

      Delete
  4. Replies
    1. எனக்கு இவ்வளவுதான் தெரியும். இந்தியர்கள் சேப்பங்கிழங்கு விதம்விதமாகச் சமைப்பீர்கள். :-)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா