Saturday 9 May 2020

குட்டிச் சட்டை


எங்கள் வீட்டுக் குட்டிப்பெண்ணிற்கு முதலாவது பிறந்தநாள் முடிந்து ஐந்து மாதங்கள் ஆனதன் பின்பு இந்த இடுகையைத் தட்டுகிறேன்.

மருமகள் கர்ப்பமாக இருக்கும் சமயம், பிறப்பது பெண்ணானால், தன் திருமண ஆடை தைத்து மீந்த துணியில் சட்டை ஒன்று தைத்துக் கொடுக்க இயலுமா என்று கேட்டிருந்தார்.

குட்டிப்பெண் வளர்த்தி பன்னிரண்டாம் மாதம் எப்படி இருக்கும் என்பதை எப்படி ஊகித்து அளவு எடுப்பது! ஐந்து கிழமைகள் முன்பாக, அவர்கள் வசிக்கும் ஊருக்குக் கிளம்பிப் போனேன். பொதுவாக மாதம் இருமுறை செல்வது வழக்கம். இந்தத் தடவை செல்லும் முன் கண் மதிப்புக்கு ஒரு துணியில் மேற்சட்டையைத் தனியாகவும் பாவாடைப் பகுதியைத் தனியாகவும் தைத்து எடுத்துப் போனேன்; கூடவே என் தையல் இயந்திரமும் வந்தது. 

சின்னப் பெண் உண்ணாமல், தூங்காமல் இருக்கும் சமயம் அவரை விளையாட்டுக் காட்டியபடி அளவு பார்த்துக் கொண்டேன். 

வீட்டுக்கு வந்து மறுநாளே சட்டை தயார். :-) மேல் உடம்பு - எம்போஸ்ட் துணி, பாவாடை - சாட்டின், கை, கழுத்திற்கு, மருமகள் கொடுத்திருந்ததிலிருந்து லைனிங் துணியைப் பயன்படுத்தினேன். 

கை கழுத்து எல்லாம் வெட்டியது வெட்டியபடியே இருந்தது. மீண்டும் பயணம்; அளவு பார்த்தல். மேற்சட்டைப் பகுதி சரியாகத் தான் இருந்தது. கை முன்பகுதியைக் கொஞ்சம் குழிவாக வெட்ட நேர்ந்தது. இடுப்பு... நெஞ்சு, இடுப்பு, வயிறு எல்லாம் ஒரே சுற்றளவில் இருந்தாலும் டயப்பர் அளவைச் சேர்த்துப் பார்க்க வேண்டாமா! இடுப்பை சற்றுப் பெரிதாக்க வேண்டும். 



சுருக்கமெல்லாம் உருவி மீண்டும் தைப்பது என்னால் ஆகாது. ;( சாட்டின் துணி, நூல் பிரிந்து சுருக்கி அழகைக் கெடுக்கும். ஒரே நிறத் துணியும் நூலும் - கண் ஒத்துழைக்காது - எப்படிப் பிரித்துத் தைப்பது! 

வட்டக் கழுத்தானாலும் முதுகுப் பக்கம் V வடிவில் வெட்டியிருந்தேன். நட்டநடுப் பகுதியில் மட்டும் சற்றுப் பிரித்து பைப்பிங் கொடுத்துத் தைத்தேன். பெரிதாக ஒரு 'போ' சாட்டினில் செய்து ஒரு பக்கம் பொருத்தினேன். அதிலேயே கொக்கி வைத்து, மறு பக்கம் வளையம் தைத்து முடித்தேன்.                                                                                
வெகு எளிமையாக இருப்பதாகத் தோன்றிற்று. இன்னும் சற்று மெருகேற்ற வேண்டுமே! அகலமாக, நீளமாக ஒரு பட்டி அடித்து இரண்டாக மடித்து இடைப்பகுதியில் பொருத்தினேன். லைனிங் துணியில் ஏழெட்டு வட்டங்கள் வெட்டி, மெழுகுவர்த்திச் சுடரில் காட்டி உருக்கி சில செயற்கை மகரந்தங்களையும் சேர்த்துப் பூவொன்று தைத்துக் கொண்டேன். இரண்டு இலைகளைத் தைத்த பின்பும் திருப்தி வரவில்லை. முத்துக் கோர்வை ஒன்றிலிருந்து சிறு துண்டு வெட்டிப் பொருத்தினேன். 

பிறந்தநாள் அன்று அணிந்து பார்க்க, சின்னப்பெண்ணுக்கு அழவாக, அழகாக இருந்தது.

எதை அணிந்தாலும் அவர் அழகாகத்தான் இருப்பார். :-)

6 comments:

  1. //எதை அணிந்தாலும் அவர் அழகாகத்தான் இருப்பார்//

    ஆம் அதுதான் குழந்தை வாழ்த்துகள் குழந்தைக்கு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. :-)

      Delete
  2. அழகான குட்டிச்சட்டை குட்டிபெண்ணுக்கு..

    ReplyDelete
  3. அழகான உடை - குட்டிச் செல்லத்திற்கு. நேர்த்தியாக இருக்கிறது. கடைசி வரி முத்தாய்ப்பு.

    நன்று.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் என்றாலே அழகுதானே! :-)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா