Wednesday 28 April 2010

மாற்றங்கள்

வெகு காலங்களாக இருந்த இந்தக் கட்டிடங்கள் இன்று இல்லை. 
 இந்த இடத்தைத் தினமும் கடந்து போக வேண்டி இருக்கிறது. ஒரு காலைப் பொழுதில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்த சமயம் இந்த இரண்டு கடற்காக்கைகள் சோகமாக் கூரையில் அமர்ந்திருந்ததைக் கண்டபோது கூடவே அருகே இருந்த சில கட்டிடங்கள் காணாமல் போயிருப்பதும் கவனத்துக்கு வந்தது. ம்... நாளை இந்த இரண்டு கட்டடங்களும் பிரிக்கப்பட்டால் பறவைகள் எங்கே போகும்!!

படம் எடுத்துச் சில காலங்கள் ஆகி விட்டது. சில நாட்கள் முன்பு மஞ்சளும் செம்மஞ்சளுமாக இருபது இருபத்தைந்து இயந்திரங்கள் இந்த இடத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. இப்போ கட்டிடங்கள் முழுவதாகக் காணாமல் போய் விட்டன. இடிபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. கற்கள் தூளாக்கப் பட்டுச் சீராகப் பரவிக் கிடக்கிறது. எதைத்தான் கட்டப் போகிறார்கள் இங்கே என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒரு ஸ்டேடியத்தின் பின் பகுதி. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~
தினமும் கடந்து சென்றாலும் என் அதிஷ்டம், ;) இப்போதெல்லாம் அந்த இடத்தில் உள்ள பச்சை விளக்கு நாங்கள் கடக்கையில் எல்லாம் பச்சையாகவே இருக்கிறது. அதனால் படம் எடுப்பது முடியவில்லை.
வேலை நடப்பதை மட்டும் பார்க்கிறேன். விதம் விதமான அளவுகளில் இயந்திரங்கள், மண்ணை அள்ளுவதும் குவிப்பதுமாக பார்க்க சுவாரசியமாக இருக்கும். ஒன்று மஞ்சள் வர்ணம், ஒன்று செம்மஞ்சள், ஒன்று பச்சை. எல்லாம் ஒவ்வொரு டைனோசர் மாதிரி நின்ற இடத்திலேயே தலையைத் திருப்புவதும் குனிந்து எடுப்பதும் தூக்கிப் போடுவதுமாக மும்முரமாக வேலையில் ஈடுபட்டு இருக்கும்.

இன்று ஒரு கட்டிடத்திற்கான சட்டங்கள், அமைப்புப் பூர்த்தியான நிலையில் தெரிந்தது. விரைவில் அந்த இடத்தில் பெரிதாக ஏதோவொரு முக்கியமான கட்டடம் நிற்கும்.
பறவைகள்!!

அவற்றுக்கா இடம் இல்லை. எங்களைப் போலவா அவை! லோன் விண்ணப்பிக்க வேண்டாம், 'ரியல் எஸ்டேட் ஏஜென்ட்' பின்னால் அலைய வேண்டாம். மீதி வேலைகள் எதுவும் இல்லை. பிடித்து இருக்கிறதா, உடனே அந்த இடத்தில் குடிபுக வேண்டியதுதானே! ;)
பென்ரோஸ் பாலத்தைக் கடந்து திரும்புகிற முனையில் ஓர் கட்டிடம் இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக அதன் கூரை மேல் இருந்த பெயர்ப் பலகைகள் நடுவே ஒரு கடற்காக்கைக் குடும்பம் குடியிருந்தது. ஓரளவு பெரிய கூடு, தூர இருந்தே தெரியும். குஞ்சுகள் தெரிவதில்லை, ஆயினும் சத்தம் கேட்கும். தாய்ப் பறவை இரையோடு மேலே பறப்பதைக் கண்டிருக்கிறேன். கூரை அவ்வப்போது (waterblast) கழுவப்படும். கூட்டைப் பிரித்துப் போட்டிருப்பார்கள். திரும்ப அடுத்த இனப்பெருக்க காலத்தில் மீண்டும் ஒரு கூடு அங்கு அமைக்கப்பட்டுவிடும். அவை மனம் சோர்வது இல்லை. இடம் மாறுவதும் இல்லை. கூரை எல்லாம் எச்சமும் பெயர்ப்பலகையில் அழுக்காய் அடையாளங்களும் தெரியும்.

சென்ற வாரம் புதிய தவணைக்காகப் பாடசாலை ஆரம்பித்த அன்று பெயர்ப்பலகை பளீர் சிவப்பில் தெரிந்தது. கட்டிடம் கைமாறி இருக்கிறது. இன்னும் புதிய பெயர் எழுதப்படவில்லை.
கட்டிடத்திற்கான பெறுமதியை யாரோ பெற்றிருப்பார்கள். கூரையின் இந்தப் பகுதிக்குச் சொந்தக்காரக் குடும்பத்திற்கு அதற்கான நஷ்ட ஈடு வழங்கப் பட்டிருக்குமா!!!!
 
எனக்கென்னவோ கட்டிடக்காரர்கள் நஷ்டப்படப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. ;) பெயர் எழுதுமுன் மீண்டும் கூடு அமைக்கப்பட்டால்.... 
'கீச்.. கீச்
கூடவே... 'பீச்.. பீச்'  
;D

5 comments:

  1. உங்கள் உணர்வுகள் நானும் இப்படி எல்லாம் சிந்திப்பதுண்டு.இதமான பகிர்வு.

    ReplyDelete
  2. Maatrangalai thavaira ellam

    maarum..

    photos nice..

    kooda unga commedyum rasthen
    'கீச்.. கீச்'
    கூடவே... 'பீச்.. பீச்'
    ;D

    ReplyDelete
  3. //இதமான பகிர்வு.// நன்றி.
    வருகைக்கு நன்றி ஆசியா. ;)

    ~~~~~~~~~~

    //Maatrangalai thavaira ellam maarum..//
    m. நன்றி சூர்யா. ;D

    ReplyDelete
  4. //'கீச்.. கீச்'
    கூடவே... 'பீச்.. பீச்'
    //
    பெயர் சூட்டும் விழாவிற்கு உங்களைத் தான் கூப்பிடப் போகிறார்கள்.

    ReplyDelete
  5. இன்று பாடசாலை விட்டு வரும்போது பார்த்தேன் வாணி. அதெல்லாம் சூட்டி விட்டார்கள். ;( வேறொரு மோட்டார்க் கம்பெனிக்காரர் போல இருக்கிறார்கள். சுற்றிச் சுற்றிப் பெயர் போடுகிறார்கள்.

    இனிமேல் பறவை கூடு வைக்க இயலாதவாறு வேலை நடந்து இருக்கிறது. ;(

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா