Wednesday 13 January 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!


எடிபில் ஃபிஷ்ஷை எல்லாம் செடிக்கு உரமாகப் போட்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா! இல்லை, இந்தக் கோரச் சம்பவம் நடந்தது நேற்று மதியம்.

நாள் எல்லாம் சரியாகத்தான்  போய்க் கொண்டிருந்தது. உறவினர்களை எதிர்பார்த்திருந்தேன். சமையல் ஆக வேண்டி இருந்தது, பெரிதாக ஒன்றும் இல்லை - ஒரு கேக், ஒரு கட்லட் - இது வழைமையான மெனு, கூடவே ஒரு வடை என்று நினைத்துக் கொண்டேன். குக்கீஸ் திடீரென்று லிஸ்ட்டில் இணைந்து கொண்ட பதார்த்தம். :)

சமைப்பது எப்படி!! தரைக்குப் புதுப் பொலிவு கொடுக்கவென்று வேலை நடந்து கொண்டு இருந்ததில் பெரிய மீன் தொட்டியைத் தற்காலிகமாக சமையலறைக்கு இடம் பெயர்த்திருந்தோமே! மூத்தவரும் நானுமாய் மீண்டும் பழைய இடத்துக்கு தொட்டியை நகர்த்த முயற்சிகள் மேற்கொண்டோம்.

மீன்களை வேறு சிறு தொட்டிக்கு மாற்றி, பெரிய தொட்டியைச் சுத்தம் செய்து, புதிதாக பின்புறம் காட்சியமைப்பு எல்லாம் ஒட்டி, கடைசியாக... வாங்கி வந்த பரல்களையும் பரவி நீர் நிறைத்தாயிற்று.

அப்பாடா! நிம்மதி என்று சற்று நேரம் கழித்து மீன்களையும் விட்டோம். அப்போதான் ஆரம்பித்தது சிக்கல். ஒரு குட்டி வெள்ளிச்சுறா திடீரென விநோதமாக நீந்த ஆரம்பித்தது. பார்த்திருக்க அடுத்தது, அடுத்தது என்று கிட்டத்தட்ட எல்லா மீன்களுமே ஒரு ஐந்து நிமிட நேரத்துக்குள் வேறு வேறு நிலைகளில் மிதந்தன.

என்னவென்று புரியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. மகனார் புலம்புகிறார் 'என் மீன்களை நானே கொன்றுவிட்டேன்,' என்று. சின்னவரும் நானும் இவரைத் தேற்றுவதா, முதலுதவிக்கு முயல்வதா! (மீன்களுக்கு எப்படி CPR செய்வது!) மீன்களும் இன்னமும் உயிரோடு இருப்பதாகவே பட்டது. பெரிய வெள்ளிச் சுறா ஏற்கனவே ஒரு வருடம் முன்பு பயங்கர விபத்தில் இருந்து தப்பியவர். அவரைப் பற்றி எங்களுக்குப் பயம் இருக்கவில்லை, தாங்குவார் என்று தோன்றிற்று.

இத்தனைக்கு நடுவில் 'ஞ்ங்கீஈ....' என்று அவன் (எவனும் இல்லை, வெதுப்பியைத்தான் சொல்கிறேன்.) கத்த ஆரம்பித்தது.

இப்போது நாங்கள் மும்முரமாக எல்லோரையும் மீண்டும் குட்டித் தொட்டிக்கு மாற்றிக் கொண்டிருந்தோம்.

பாதி வேலையில் கையைக் கழுவிக் கொண்டு போய் அவனை அணைத்து விட்டு (யாரும் தப்புத் தப்பாகப் படிக்கக் கூடாது - நான் சோகக் கதை சொல்கிறேன். ;(  ) மீன் பிடிக்கிற வேலையைத் தொடர்ந்தோம்.

எதிர்க்கச் சக்தி அற்று இருவர் நீரோட்டத்தோடு போய் ஃபில்டரில் சிக்கிக் கொண்டார்கள்.

நடுவே வேலையால் வந்த கிறிஸ் எங்களோடு இணைந்து கொண்டார். ஓடி ஓடி ஆளுக்கொரு வேலை பார்த்துக் களைத்துப் போனோம். ஆயினும் சிலரைத்தான் காப்பாற்ற முடிந்தது.

நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் எங்கள் பிரியத்துக்குரிய செல்ல சில்வர் ஷார்க் பரிதாபமாக எங்கள் கண்முன் உயிர் துறந்தார். ;( ;( ;(

*
*
*
*

எல்லோருக்கும் மனது களைத்துக் கனத்து  விட்டது. மகனுக்காக சோகத்தைக் காட்டிக்கொள்ளாமல் நாளைத் தொடர வேண்டியதாயிற்று. மீன்களை அடக்கம் செய்யும் வேலை தன்னால் ஆகாது என்று என்னிடம் ஒப்படைத்து விட்டு மகன் வெளியே கிளம்பி விட்டார். 

என்னைப் போலவே இருக்கிறார்.

செல்லங்கள் உயிரோடு இருக்குமட்டும் எது வேண்டுமானாலும் செய்வேன். இறந்தால் என்னால் தாங்க முடியாது. முன்பு இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் என் தாயாரோ மாமியோ எனக்காக இந்த வேலையைச் செய்வார்கள்.இப்போது என் முறை.

ஒரு பூத்தொட்டியில் எல்லோரையும் அமைதியாக உறங்க வைத்திருக்கிறேன்.

கட்லட் தவிர மீதியெல்லாம் ஆரம்பித்த மாதிரியே தயாரித்து வைத்தேன். உறவினர் வந்து போயினர். மீதி எல்லாம் வழமைபோல் நடந்தது. மனது மட்டும் பழைய நிலைக்கு இன்னமும் வரவில்லை.


இப்போ தப்பி இருப்பவர்கள் இவர்கள்.



ஆமையாரின் சிறு வயதுத் தொட்டியில் நன்றாக இருக்கிறார்கள். பெரிய தொட்டிக்கு இப்போதைக்கு மாற்றுவதாக இல்லை. முதலில் என்ன நடந்தது என்று கண்டு பிடித்தாக வேண்டும். புதிதாகச் சேர்த்த பரல்களில் ஏதாவது இரசாயனப் பொருள் கலந்திருந்திருக்கலாம் என்பது எங்கள் அனுமானம்.




 
காரணம் எதுவானாலும் பல வருடங்கள் எங்களோடு இருந்த எங்கள் செல்லத்தை இழந்து விட்டோம். ;( நெஞ்சு பொறுக்குதில்லை. ;(

இந்தச் சுறாவுக்கு புகைப்படக் கருவியை நன்றாகத் தெரியும். சாதாரண நாட்களில் கண்டால் ஒழிய ஆரம்பிப்பார். இப்போதோ... ஹ்ம்ம்.

இந்தச் சுறா போல் தானே நாம் சமைக்கும் சுறாக்களுக்கும் உணர்வு, விருப்பு வெறுப்பு எல்லாம் இருக்கும்!!

12 comments:

  1. Imma amma its really very sad to read this :(((

    ReplyDelete
  2. இமா கேட்கவே ரொம்ப கழ்டமா இருக்கு, பிள்ளைகள் ரொம்ப வாடி போய் இருப்பார்கள்.

    ReplyDelete
  3. ஆன்ட்டி...என்ன இது?? ;( ;(
    ஜீனோக்கு ரொம்ப அழுவாச்சியா வருது..ஜீனோ பெட்ஷாப் போனப்போ கூட உங்க சில்வர் ஷார்க் இருக்கான்னு தேடி தேடித் பாத்துது!
    இட்ஸ் ரியலி பேட்! :(

    ஜீனோ & டோரா'ஸ் ஹார்ட் ஃபெல்ட் கண்டலன்ஸ் டு யுவர் பேமிலி ஆன்ட்டி..

    ReplyDelete
  4. அனானி, நீங்க அறுசுவை மெம்பர் என்று ஊகிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    இன்று இருப்போர் நாளை இல்லை. நாளை என்பது நிரந்தரம் இல்லை.
    I really miss the biggy. She was so attached to everyone at home.


    வருகைக்கு நன்றி ஜலீலா. பிள்ளைகள் மட்டும் இல்லை, எல்லோருமே வாடிப் போய் இருக்கிறோம். தொட்டி வெறுமையாக இருப்பது வீடு ஜீவனில்லாத மாதிரி இருக்கிறது. ஒரே ஒரு இனமும் ஒரு கிளாஸ்கிளீனரும் மட்டும் தப்பி இருக்கிறார்கள். தப்பி உள்ள விதமான மீன்களை, முதலில் வாங்கி விடலாம் என்று நினைக்கிறோம்.

    ஜீனோ, உங்கள் ஆறுதல் வார்த்தைகள் இதமாக இருக்கிறது.
    என்ன செய்வது! இதுதான் லைஃப்.

    வீட்டில் யாரிடமும் டிஸ்கஸ் பண்ணவில்லை, கொஞ்ச நாள் கழித்து இரண்டு சோடி சில்வர் ஷார்க் வாங்கி விடலாம் என்று இருக்கிறேன். பெரியவரது புத்திசாலித்தனமும் ஒட்டுதலும் வேறு மீன்களிடம் நான் கண்டதில்லை.

    ;(

    ReplyDelete
  5. என் இழையிலிருந்து வந்து இப்போது தான் வருகிறேன்.. அங்கு விளையாட்டாய் பேசிவிட்டு இங்கு வந்து.. இமா.. அவ்வளவு பெரிய விபத்திலிருந்து தப்பிய சில்வர் ஷார்க்.. இதிலே..இப்படிப் போய்.. ம்ம்.. கண் கலங்குகிறது.. ஆறுதல் கொள்ளுங்கள் இமா.. தன் துணையிடம் போய்ச் சேர்ந்தாரென்று..

    ReplyDelete
  6. தங்கள் பதிவு ஆறுதலாக இருக்கிறது. நன்றி சந்தனா. என்ன செய்வது! இப்படித்தான் எல்லாம்.

    ReplyDelete
  7. இமா அக்கா யாரது அங்க ஒரு சூப்பரா ஷூட் பண்ணுவது நீங்கள் தானா?

    வாங்க என் பகுதி www.allinalljaleela.blogspot.com

    ReplyDelete
  8. என்ன இமா இது? அந்த சில்வர் சார்க்கோ? எனக்கு இன்னும் சந்தேகமாகவே இருக்கு. ஒரு வருடத்துக்கு முன் நீங்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது(உளக்கியதைச் சொன்னேன்), அதனால் மீண்டும் சந்தர்ப்பம் பார்த்துத் தாக்கிவிட்டீங்களோ?.

    என்ன இருந்தாலும் இதயம் கனக்கிறது. எங்கள் தொட்டியிலும் புதியவர் வந்தால் எப்படியும் ஒரு பழையவர் மறைவார்... பிள்ளைகள் பார்க்கமுன் அடக்கம் செய்யும் பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்துவிடுவேன்.... சிறு பிராணியானாலும் செல்லமாக வளர்த்தால் குழந்தைபோலத்தான் இருக்கும். மீனுக்கு தண்ணி மாற்றும்போது ஒருநாளும் இடம்மாற்றக்கூடாது இமா, முக்கால்பங்கு தண்ணீரை மட்டும்தான் மாற்றவேண்டும்... உங்களுக்குத்தெரியாததா...

    கவலைக்கிடையிலும் "அவசர அணைப்பு" வேறு.

    ReplyDelete
  9. அது நானேதான் ஜலீலா. கமராவைப் பார்த்து ஒழுங்கா உங்க ட்ரேட் மார்க் சிரிப்பு சிரிச்சீங்க இல்ல! :)

    உங்களுக்குத் தெரியாது, உங்கள் அனைத்து வலைப்பூக்களும் நான் வெகு காலமாகவே பார்க்கிறேன். பின்னூட்டம் கொடுத்ததுதான் இல்லை.

    ReplyDelete
  10. அவரேதான் அதிரா. ;( இப்போ தெரிந்ததா டிஷ்யூ எல்லாம் முடிந்ததெப்படி என்று.

    'மரத்தால விழுந்தவனை.....' மாதிரி இருக்கு உங்கட கதை. நான் அழுதுருவேன் மொப்ஸ். ;;;;(((((

    இருக்கிற இடத்திலயே தண்ணி மாத்துறது எண்டால் அப்பிடித்தான் செய்யிறனாங்கள். இது முழுத் தொட்டியையும் இடம் மாற்றி, கொஞ்சம் மெருகு குடுக்கலாம் எண்டு பெபிள்ஸ் எல்லாம் போடப் போய் இப்பிடி கொடுமையாப் போச்சு. ;(

    என்ன பிரச்சினை எண்டாலும் நடத்திறது எல்லாம் நடத்தித்தானே ஆகவேணும். அவனில ஆசையாக நான் பேக் பண்ணப் போட்ட குக்கீஸ் இருந்துது.

    ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
    மாண்டார் வருவரோ மாநிலத்தில்!... ;((

    ReplyDelete
  11. குக்கீஸ் என்னாச்சு இமா?

    ReplyDelete
  12. இந்தக் கேள்விக்குப் பதிலாக, இன்று உங்களுக்காக ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் அதீஸ். :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா