Showing posts with label மனதோடு மழைக்காலம். Show all posts
Showing posts with label மனதோடு மழைக்காலம். Show all posts

Friday, 2 November 2012

தொலை பேசுகிறேன்

சின்ன வயதில்... (அறுபதுகளில்) (கர்ர்ர் என் 60  இல்லைய்ய்ய்... ) ஒரு அங்கிள் வீட்டில் போன் இருக்கும். அவர்கள் அதற்கு பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அப்போ ஒன்றும் புரியாது. 'பூட்டாமல் விட்டால் திருட்டுப் போகுமோ!' என்று நினைத்திருக்கிறேன்.

பிறகு 1996ல் சற்று அதிகமாக தொலைபேசி இணைப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். பல்வேறு காரணங்களால், தொலைபேசி வைத்திருந்தோர்க்கு இந்தப் பூட்டுப் போடும் தேவை கொஞ்சம் அத்தியாவசியம் என்றாகிற்று. அப்போது எண் சுழற்றும் தொலைபேசி காணாமற் போய் தட்டும் தட்டைத் தொலைபேசி வந்திருந்தது. இவற்றைப் பூட்டி வைப்பது சிரமம்.

திரு செபாவை யாரோ ஒரு நண்பர் இது தொடர்பாக அணுகினார். அப்போது சிந்தனையில் உதித்தது இந்தப் பூட்டி வைக்கக் கூடிய பெட்டி. வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்வதில் சிரமமிராது.

ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்க்கு மட்டும் செய்து கொடுக்க ஆரம்பித்தது தவிர்க்க இயலாது போக பின்னர் ஒரு வியாபாரமாகவே ஆகிற்று.

ஆசிரியத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னால் இதுவே அப்பாவின் முழு நேரத் தொழிலாகிற்று. யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து கூட வந்து மொத்தமாக வாங்கிப் போனார்கள். ஒரு தடவை  முப்பது பெட்டிகள் ஒன்றாகச் செய்து கொடுத்தார்.

பெட்டிக்கான பகுதிகள் எல்லாம் பலகையில் வரைந்து வெட்டி வைத்திருப்பார் 'சட்டைக் கட்டிங்' போல. ஃபோமிகா வாங்கி பலகையில் ஒட்டி, காய விட்டு, வெட்டி.... ஓரங்களுக்கு தங்க நிற ப்ளாஸ்டிக் ரிபன் ஒட்டி... பூட்டு பொருத்தி.... இப்படி நிறைய வேலை இருக்கும். ரிபன்கள் இன்னமும் என்னிடம் மீதி இருக்கின்றன.

இந்த வேலையில் தூசுதான் கொஞ்சம் அதிகம். ;(

ம்... பிறகு... 2010ல் எங்கள் மாமியைப் பார்க்கப் போயிருந்தேன்.

அங்கு வயதாகிப் போனாலும் பயன்கொடுத்துக் கொண்டிருந்தார் இந்தப் பெட்டியார். ஒரு ஞாபகத்திற்கு இருக்கட்டும் என்று அவர்கள் அனுமதியோடு படம் எடுத்துக் கொண்டேன். இப்போது படம் கண்ணில் பட்டதும்... பகிர்ந்து கொள்ள நினைத்தேன். (in other words... மாட்டினீங்க.)

வெளியே...

உள்ளே...

Wednesday, 17 October 2012

மாமா!

கொஞ்ச காலம் மட்டும்
நெருக்கமாக இருந்த உறவு;

பிறகு...
தொலைக்கல்வி போல தொலை உறவு.
பின்னாளில் தொலைந்தே போனது உறவு.

மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கையில்
பழைய நெருக்கம்
அதை விட அதிக நெருக்கம்.

அருமையான மனிதர்
அசாத்திய உயரம்
மென்னையான உள்ளம்
கட்டான உடல்
கருகருத்த நிறம்

சிறு வயதில் என்னை
பயமுறுத்திய தோற்றம்
ஆனால்...
உள்ளமோ மென்மை.

புரிந்து கொண்டோர் சிலர்
பலனெதுவுமில்லையே!
புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!!
அல்லது உரிமையுள்ளோர்க்கு
வேறு முகம் காட்டினாரா!!
இறைவனுக்கே வெளிச்சம்!

வெளிச்சம் அகலவாரம்பித்த
ஓர் காலையில்

கிரிங்கியது தொலைபேசி
கலங்கியது மனம்.

ஒரே சொந்தம்
கிளம்பிப் போனார்.
விடை கொடுக்கும் தருணம்
விரைவில் என்று
விரைந்து கொணர்ந்தார்.

குழந்தையாய்...
"வீட்டிற்கு வர வேண்டும்,"
என அடம் பிடித்தவரை
அழைத்து வராமல் ஐசீயூவில் சேர்க்க
மாதமொன்று
ஐ சீ யூ என்று
எமைப் படுத்தி எடுத்தது.

தவிப்பு, ஏக்கம்,
தவறு, தாக்கம்
துக்கம், தூக்கமின்மை
குழப்பம், குடும்பம்
பரபரப்பு, இயலாமை
நட்பின் அருமையென்று
அனைத்தையும் ஒன்றாய் உணர்த்திய
ஒன்பதாம் மாதமது.

அன்னை தெரேசா இறந்தார்.
இளவரசி டயானா அகாலமானார்.
தொடர்ந்து....
மாமாவும்.

சொற்ப நாட்களில்
சொல்லொணாப் பாசத்தை
என் வாரிசுகள் மேல் சொரிந்து
நிலைத்து விட்டார் எம்மோடு.

அகாலமல்லவது
காலம்தான் என்று பின்பு தோன்றிற்று,
சுனாமி வந்தபோது.

அவருக்கு
அடைக்கலம் கொடுத்திருந்த
என் அத்தை குடும்பம்
மொத்தமாய்த் தொலைந்து போக
அவர்களைத் தேட, அழ
ஆட்களிருந்தனர் அங்கே.

நாமிங்கே இருக்க
நால்வர் தேடிப் பார்த்து
முறைகள் செய்திடினும்
முறையிலாப் பேச்செமக்கு.

அது கேட்கவேண்டாம்
தன் நேசத் தமக்கை மற்றும் மைந்தர்
என்றுதான்
அப்படியோர் காலம்
தெரிந்து  காலமானாரோ!!

உற்றார் உறவு கூடி
ஊர் மெச்சும் சிறப்பாய்
இறுதி ஊர்வலம்.
எவரும் அவரைத் தப்பாய்ப் பேசவில்லை.
அன்பானவர்,
நல்லவர்
தானும் தன் பாடுமென்றார்.

என்னாயிற்று!
எங்கே தவறு! யார் தவறு!

புரிய வேண்டியவர்க்குப் புரியவில்லையா!!
அல்லது உரிமையுள்ளோர்க்கு
வேறு முகம் காட்டினாரா!!

புதிர் விலகவில்லை இன்னமும்
விலகாது
விலக்க முயலவுமில்லை நாம்.
சிவற்றை...
அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது.
13/09/2012 அன்று பதினைந்தாம் ஆண்டு நிறைவையிட்டு வெளியிட இருந்தேன்; தடைப்பட்டுவிட்டது. அதனால் இப்போது.
- இமா

Tuesday, 11 September 2012

என் முதிர்தோழி

ஒரு பத்திரத்தை நிரப்பிக் கையெழுத்திடும்போது நினவு வந்தது, இன்று செப்டெம்பர் பதினொன்று; என் தோழியின் பிறந்தநாள்.

மூன்று வருடங்கள் முன்பாக, இதே நாளில் இதேபோல் நினைவுவர... வேலை முடிந்ததும் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே தொலைபேசியில் எண்களை அழுத்தினேன். சுலபமான எண் அவரது, அறுபத்து மூன்று... எழுபத்துமூன்று... அறுபத்துமூன்று... ஏழு... மறுமுனையில் அடித்துக் கொண்டே இருந்தது. துண்டித்துவிடலாமென எண்ணிய தருணம் "ஹலோ!" என்று மூச்சு வாங்கினார்.

"ஹாய் இட்ஸ் ரோஸி ஹியர்."

"நான் ஜேஜே" "எப்படி இருக்கிறீர்கள்?" எனவும், 'ஹூப்!' என்று பெருமூச்சு விட்டார்.

அவர் தனி ஆள்; தோட்டத்தில் வேலையாக இருந்திருக்கிறார்.  சட்டென்று எடுக்க வசதியாக தொலைபேசியை ஜன்னல் ஓரம் வைத்து விட்டு வெளியே போவார். அன்று மறந்திருக்கிறார். சுற்றி உள்ளே வர நேரமாகிவிட்டதாம். மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஸி." "ஓ!" அந்த 'ஓ' வெளிப்படுத்திய தொனி... புரிந்துகொள்ள இயலவில்லை.

"வேலை முடிந்து போகும் வழியில் வரட்டுமா? பார்க்கவேண்டும் உங்களை"
"சரி, எத்தனை மணிக்கு?"
"மூன்று நாப்பத்தைந்தளவில்!!"

வேலை முடிந்ததும் வழியில் நிறுத்தி ஒரு கார்ட் வாங்கி வாழ்த்தெழுதி உறையிலிட்டேன். அவருக்குப் பிடித்த 'மில்கஃபே' மற்றும் சாக்லேட்டுகள் வாங்கினேன். வாகனத்தில் எப்பொழுதும் தயாராக புதிய பைகள் ஒன்றிரண்டு இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக உள்ளே வைத்து மடித்துக் கொண்டேன்.

வாசல் மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். முடியெல்லாம் சுருட்டி க்ளிப் மாட்டிய தலையோடு வந்தார். சிரித்த முகமாக அழைத்துப் போனார். வழியில், "இது என் அறை," "இது விருந்தினர்க்கு," "இதுதான் ப்ரூஸ் இருந்த அறை," "இது குளியலறை," எல்லாமே எனக்கு முன்பு தெரியும். எத்தனை தடவை போயிருக்கிறேன். அவர் கணவர் ப்ரூஸ் காலமாகி 20 ஆண்டுகளாகின்றன. மகள், பேரக்குழந்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் சென்ற பிறந்தநாளன்று. ஏன் இப்போ மீண்டும்!

வரவேற்பறையில் சென்று அமர்ந்தோம். அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார். பேசினோம். குடும்பத்தார் பற்றி விசாரித்தார். முன்பு ஒன்றாக வேலை செய்த இடம் பற்றிய கதைகள் பரிமாறிக் கொண்டோம். ப்ரூஸ் தன்னைத் தனியே தவிக்க விட்டுப் போனாரே என்று புலம்பினார். பாவம்.

அன்பளிப்பைத் திறந்து பார்த்து தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினார். அறைகளுள் அழைத்துச் சென்று காட்டினார். புகைப்படங்கள், ப்ரூஸ் செய்த கைவேலை (ப்ரூஸ் ஒரு turner. lathe வைத்திருந்தார். அவரது கடைச்சல் வேலைகள் அழகாக இருக்கும்.) பிள்ளைகளது புகைப்படங்கள், தனது சிறு வயதுப் படம் என்று எல்லாம் காட்டினார். எதுவும் எனக்குப் புதிதல்ல.

கிளம்பினோம். வாசல்வரை வந்து வழி அனுப்பினார்.
இந்தப் 'பென் ஸ்டாண்ட்' (நியூஸிலாந்து செர்ரி மரத்தில் கடைந்தது. அடியில் விபரமும் ப்ரூஸ் பெயரின் முதலெழுத்தான Bயும் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.) பன்னிரண்டு வருடம் முன்பு ரோஸி எனக்குக் கொடுத்த நத்தார்ப் பரிசு. பச்சைக் கடதாசியில் அழகாக நத்தார் மரம் போல சுற்றிக் கொடுத்திருந்தார்.

என்னவோ சங்கடமாக உணர்ந்தேன். ரோஸியில் என்னவோ மாற்றம் தெரிகிறதே! அவர் சரியாக இல்லை.

வழக்கமாக நான் போனால் தேநீர் மேசையில் புது விரிப்பு விரித்து உள்ளே இருந்து அழகான கோப்பைகள், பொருத்தமான தட்டுகள் எடுத்து வந்து வைப்பார். தேநீர் தயாரிப்பது நான்தான். தானே பேக் செய்த பிஸ்கட்டுகள் கொடுத்து உபசரிப்பார். கிளம்புமுன் நானே எல்லாம் ஒதுங்க வைத்து சுத்தம் செய்து வைத்து விட்டுக் கிளம்புவேன்.

இன்று எதுவும் இல்லை. தேநீர் கொடுக்க முயற்சிக்கவில்லை. இயலாமை என்று நினைத்தேன். ஆனால்... இயலாது என்று உட்காராதவராயிற்றே என் தோழி!

வீடு வந்து சேர்ந்த மறு நிமிடம் தொலைபேசி அழைத்தது. ரோஸிதான் மறுமுனையில்.
"ஹாய்! இது ரோஸி. திருமதி க்றிஸ் வீடா அது?"
குழம்பினேன் நான். "ஆமாம்."
"நீங்கள் திருமதி க்றிஸ்தானா?"
மேலும் குழப்பம் எனக்கு. நிச்சயம் அது ரோஸியின் குரல்தான். 'ஜேஜே' என்னாமல் இது என்ன புதுவிதமாக!!
"ஆமாம், அது நான்தான்"
"நீங்கள் எனக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து தபாலில் வந்து சேர்ந்தது, நினைவு வைத்திருந்து அனுப்பியமைக்கு நன்றி,"

நான் !!!!!!!!! "You are welcome!"
வேறென்ன சொல்வது!! கையிலல்லவா கொடுத்தேன்!!!

"பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?" "வேலை எப்படிப் போகிறது?"

பத்து நிமிடம் முன்புதானே எல்லாம் பேசினோம்!!

மறந்துவிட்டார். எல்லாவற்றையும் மறந்து விட்டார். என்னையும் கூடத்தான். ;(

யாரென்று தெரியாமல், அதைக் காட்டிக் கொள்ளாமல் பொதுவாகப் பேசிச் சமாளித்திருக்கிறார். பிறகு கார்ட் கண்ணில் பட்டிருக்கிறது. மீண்டும் மறதி. அது தபாலில் வந்ததாகப் பாவித்து... தொலைபேசி எண்கள் எழுதி வைக்கும் குறிப்புப் புத்தகத்திலிருந்து இலக்கம் தேடிப் பேசி இருப்பார் போல.

பின்பும் பலமுறை அவரது எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறேன். இன்று வரை இயலவில்லை.

ஒரு நாள் அவர் வீட்டைக் கடந்து வாகனத்தை ஓட்டிச் சென்றோம். தோட்டம் மாறி இருக்கிறது. செடிகள் வேறு; திரைச்சீலை வேறு.

இரண்டு விடயங்கள் சாத்தியம். ஒன்று... என் எண்பத்தொன்பது வயதான தோழி எங்கோ வயோதிபர் இல்லத்தில் நல்ல கைகளின் பராமரிப்பில் இருக்கிறார். அல்லது... !! ;(

ஒவ்வொரு வருடம் கூகுள் நாட்காட்டி மட்டும் மறவாமல் ரோஸியின் பிறந்தநாளை எனக்கு நினைவு படுத்துகிறது. ;( மாற்ற விரும்பவில்லை நான்.
                                                                              - இமா
11/09/2012

Sunday, 11 September 2011

விடுமுறைகள் தரும் பரிசுகள்

விடுமுறைகள் என்றாலே மகிழ்ச்சிதான். கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாகும் ஒவ்வொரு விடயமும் வெகு நாட்கள் நினைப்பில் வந்து வந்து மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டு இருக்கும்.
சில விடுமுறைகள் மட்டும்... மருந்து மாத்திரைகள் பின்விளைவுகளை விட்டுச் செல்வது போல சில பின்விளைவுகளை விட்டுச் செல்கின்றன. இதற்கெல்லாம் பயந்து கொண்டு வீட்டோடு இருந்துவிடமுடியுமா என்ன?

இரண்டு வாரங்கள் முன்பாக நல்லவிதமாக ஒரு நோய்த்தொற்று என்றேனே... அப்போ ஒரு வாரம் விடுப்பிலிருந்தேன். பொழுது போகவில்லை. வீட்டு வேலையும் பார்க்க இயலவில்லை.
நகங்களை எல்லாம் சுத்தம் செய்து புதிதாக வர்ணம் பூசலாம் என்று தோன்றிற்று. என்னில் நான் ரசிக்கும், பெருமைப்படும் பாகங்கள் அவை. ;))
“சுப்பர் சிங்கர்’ பார்த்துக் கொண்டே பஞ்சில் ‘ரிமூவரை’ தொட்டு எல்லாம் நீக்கியாயிற்று. மீந்திருந்தது கைவிரல் நகங்களுக்கு அடியிலிருந்த மருதாணிச் சாயம் மட்டுமே.
அடுத்த வர்ணத்தைத் தொட்டு வைக்கத் தயாரானேன். எப்பொழுதும் இடதுகால் பெருவிரலில்தான் ஆரம்பிப்பேன். அந்த நகம் இம்முறை வித்தியாசமாகத் தோன்றியது.
 
சற்று தொடர்பு விட்டிருந்தது.
ஃபங்கஸ் தொற்று என்று தோன்றிற்று. கூடவே நிறைய சந்தேகங்கள், சிந்தனைகள். அழகு என்பது இரண்டாம் பட்சம்தான். இந்த நிலை தொடர்ந்தால்!! நகம் விழுந்துவிட்டால்!! சப்பாத்துப் போடாமல் குளிர் காலங்களை எப்படிக் கடத்த முடியும்!! சப்பாத்துப் போட வலிக்குமே! ஏதாவது தட்டுப் பட்டால் வலிக்கும். கோடையில் செருப்புப் போட்டால் அசிங்கமாகத் தெரிந்து வைக்கும். நினைக்கவே கஷ்டமாக இருந்தது. ;(
மூன்று நாட்களுக்கு குடும்ப வைத்தியரிடம் ‘பார்வை நேரம்’ கிடைக்கவில்லை. நான்காம் நாள் பார்த்தும் “இது ஒனைகோலைசிஸ்” என்றார். எல்லா நகங்களையும் உள்ளபடி காணட்டும் என்று பூச்சிடாமல் விட்டிருந்தேன். இந்தியர், தமிழ் பேசுவார் இவர். இவரிடம் போக ஆரம்பித்த பின் என் ஆரோக்கியம் பற்றி ஒரு பாதுகாப்பு உணர்ச்சி வந்திருக்கிறது.

இங்கு வந்தது முதல் ஒரு இந்தியத் தமிழ் வைத்தியரிடமே காட்டி வந்தோம். கணவரும் மனைவியுமாக அருமையாகக் கவனித்தார்கள். திடீரென குடும்பத்தோடு அவுஸ்திரேலியா கிளம்பிப் போய் விட்டார்கள். ;( அதன் பிறகு நான் பட்ட சிரமம் அளவில்லை. ஒவ்வொரு தடவை ஒவ்வொரு வைத்தியர் இருப்பார்.

இவர்களிடம் போய்ச் சேர மூன்று மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இருந்தாலும், பயனுள்ள காத்திருப்பு; பார்த்த மாத்திரத்தில் நோயைக் கண்டு பிடித்துவிடுவார்.

என் நக அழகுப் பைத்தியம் பற்றித் தெரிந்திருந்ததால் “கவலையாகத்தான் இருக்கும். ஆனால் கூடுமான வரை ஒட்ட வெட்டிவிட்டு போய் ‘சாம்பிள்’ கொடுத்துவிட்டு வாருங்கள்,” என்றார்.

ஃபங்கஸ் தாக்கம் என்றால் மூன்று மாதம் மருந்து கொடுப்பாராம். வேறு காரணமாக இருந்தால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும், அது தானாகவே மாறுகிற போது மாறும். மாறாவிட்டால்... இப்போது செய்வது போல் பூச்சுப் பூசி மறைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்றும் சொல்லி அனுப்பினார்.

நகத்தை நறுக்கிக் கொண்டேன். பரிசோதனைச்சாலையில் இம்முறை வழக்கமான கேள்விகளுக்கும் மேலதிகமாக இரண்டு கேள்விகள் கேட்டார்கள். 1. சமீபத்தில் எப்போதாவது பொதுக் குழியலறை பயன்படுத்தியதுண்டா? 2. சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டீர்களா? கேட்டுக் கொண்டு மீதமிருந்த பாதிக்கப்பட்ட பகுதியையும் நறுக்கிக் கொண்டார்கள்.
 
தை மாதம் - இலங்கையில் என் விடுமுறைக்காலம், மழைக்காலமாக இருந்தது. தெருவில் ஓடிய அழுக்கு நீரில் கால்கள் நனைந்து வெகு நேரம் ஊறி இருந்த நாட்கள் அதிகம்.

வெள்ளியன்று பாடசாலை முடிந்து வந்து பார்த்த பொழுது தொலைபேசியில் பதிவானதொரு செய்தி இருந்தது. “உங்கள் நகத்துக்கான முடிவு தெரிந்துவிட்டது. வைத்தியர் சொன்னதுதான். மருந்துச் சிட்டை தயாராக இருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுங்கள். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை,” தாதியின் குரல்.

நிறமில்லா நகப்பூச்சுப் போல் சின்னதாக இரண்டு குப்பிகள் கிடைத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பகுதி நகத்தை ஒட்ட நறுக்கி விட்டு மேற்புறத்தைச் சுரண்டிக் கொள்ள வேண்டும். முதல் மாதம் ஒன்றுவிட்டொரு தினம் பூச வேண்டும். வாரமொருமுறை ‘ரிமூவர்’ கொண்டு சுத்தம் செய்து “நெய்ல் ஃபைல்” கொண்டு சுரண்டிக் கொள்ள வேண்டும். மருந்தில் வெடிப்புத் தெரிந்தால் இட்டு நிரப்ப வேண்டும். இரண்டாம் மாதம் வாரம் இருமுறையும் மூன்றாம் மாதம் வாரமொருமுறையும் பூச வேண்டும். மாத்திரை என்றால் சுலபம் போல் தோன்றுகிறது; சட்டென்று வாயில் போட்டு முழுங்கி விடலாம். பரவாயில்லை, ஒரு தீர்வு சொன்னார்கள் என்பது நிம்மதியாக இருக்கிறது.

முதற் சந்திப்பில் வைத்தியர் “கூகிள்’ செய்து பாருங்கள்,” என்று ஒரு கடதாசியில் ‘onycholysis’ என்று எழுதிக் கொடுத்தார். கிடைத்த படங்கள் பார்க்க சங்கடமாக இருந்தது. என் நிலமை பரவாயில்லை என்பது மட்டும் ஆறுதலான விடயம். ;)

மழை, ஈரலிப்பு மட்டுமல்லாமல் நான் செய்யும் வேறு சில (பல) வேலைகளும் தவறாக இருப்பது இப்போ புரிகிறது. ;) சில தீர்மானங்கள் எடுத்திருக்கிறேன்; அவற்றில் முக்கியமானது... நகத்தினால் தட்டச்சு செய்வதில்லை என்பது. (key 'A' - யில் ஏற்கனவே பள்ளம் ஒன்று தெரிகிறது.)

பயமாக இருக்கிறதே. ;) 
Prevention is better than cure

Saturday, 2 April 2011

என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!!

என் சின்னவர் மட்டும் பயன்படுத்தும் மின்னழுத்தி இது. அவருக்கு செபா கொடுத்த அன்பளிப்பு.  ஒரு நாள் 'எரிந்த அடையாளம் வந்துவிட்டது,' என்று  சொன்னார்.

இந்தப் பொருளைக் கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.
எந்தப் பயனுமில்லை. ;((

ஆனால் கோடை வரவும், அது வைத்திருந்த இடத்தில் உருகி (melt) :) மேசையெல்லாம் பிசுபிசுத்துப் போய் இருந்தது. ;(
ஊரில் இருந்த காலத்தில் ஓர் நாள் பேச்சு சுவாரசியத்தில் கவனியாமல் நான் சூட்டோடு துணியை அழுத்திவிட அங்குள்ள அழுத்தியில் கரி படிந்து விட்டது. சோகமாக நான் பார்க்க அண்ணா உடனே "ஒரு பனடோல் போட்டா சரியாகீரும்," என்றார்.
தலைவலியா இது, பனடோல் போட்டுச் சரியாக்க!!

இங்கு வந்தபின் சின்னவர் மோசமாகக் கெடுத்துக் கொண்டார் அழுத்தியை. தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்கிவிடலாம். அதற்கு முன்...

இப்படி இருக்கிற அழுத்திக்கு அண்ணா சொன்ன மாதிரி பனடோல் போட்டுப் பார்த்தால் என்ன!!
குட்டி மாத்திரையைச் சூடு வாங்காமல் கையில் பிடிப்பது தான் கஷ்டம். 
ஒரு குறடு எடுத்துப் பிடித்துக் கொண்டேன்.
மாத்திரை அழுத்தியின் சூட்டில் தானும் உருகி கறையையும் உருக்கி விட்டது. ஒரு துணியால் அழுத்தித் துடைத்ததும் போயே போச். ;)

Saturday, 19 March 2011

சின்னச் சின்ன(வரின்) ஆசை - 3

முத்து மு(த்)து ஆசை

ஊரில் போய் இறங்கி இரண்டு
நாட்களில் சின்னவர் சொன்னார், "ஒரு பாம்பு பார்க்க வேண்டும், பார்த்து நாளாயிற்று," என்று.

நாளாயிற்று, பாம்பு மட்டும் கண்ணில் படக் காணோம்.
பெரியப்பா வீடு பெரிய தோட்டம். நாங்கள் 'தோட்டத்துக்குப் போறோம்,' என்றால், பெரியப்பா வீடு போகிறோம் என்பது சொல்லாமல் புரியும் உறவினர்க்கு.

போனோம், அங்கும் மகன் பாம்பு பார்க்கும் ஆசையைச் சொல்ல 'நேற்றுக் கூட ஒன்று அடித்தோமே,' என்றார்கள்.
மழையில் தீ நடுவில் அணைந்து இருந்தது. ;)

அடுத்து... ஒரு யானை மேல் போக வேண்டும் என்றார். கண்டிக்குப் போகும் போது தம்புல்லையில் யானைகளைக் காணோம். எல்லாம் உலாப் போய் விட்டன போலும். திரும்ப வரும்போதோ ஊரே வெள்ளமெடுத்துக் கொண்டிருந்தது. யானைகளுக்கெல்லாம் விடுமுறை.

கடைசி நாள்.. விளாம்பழத்தைச் சாப்பிட்டு முடித்து எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பி வாகனத்தில் ஏறியதும், கூட வந்த உறவினர் கூட்டம் சின்னவரை ஓட்ட ஆரம்பித்தது... "விளாம்பழ ஆசை மாதிரி யானை ஏறும் ஆசையும் கடைசி நேரத்திலதான் நிறைவேறுமோ!"

மழை முற்றாக விட்டிருக்கவில்லை. எனவே மூன்று மணி நேரம் முன்னால் கிளம்பி வந்திருந்தோம்.
யானை தங்கும் இடத்தை அண்மிக்கவும் 'நேரம் இருக்கிறது, முடிந்தால் முயற்சிக்கலாம்,' என்று தோன்றிற்று. யானைகளைத் தான் காணோம். எல்லாம் வெள்ளை வெளேரென்று யாரையாவது ஏற்றிக் கொண்டு தெருவோடு நடை பயின்றன. எதுவும் ஓய்வாக இல்லை.

கடைசித் தரிப்பிடத்தை நெருங்கினோம். இதை விட்டால் இனிக் கிடைக்காது என்றார்கள். யானை இல்லை. விசாரித்தால் 'வேலை முடியும் தறுவாய், இறுதி உலாவில் இருக்கிறார்,' என்றார்கள். இனிப் பொறுத்தால் எப்படி! பயணப்பட வேண்டுமே!! கிளம்பலாம் என்று மனம் சோர்ந்து புறப்பட...
அட! யானை வருது...

வாகனத்தின் உள்ளே இருந்து எடுத்ததால் படம் மங்கலாக இருக்கிறது. 

 வாகனத்தைத் திருப்பினோம். யானை களைப்பாக இருக்கிறார் என்றார்கள். பணத்தையும் விட விரும்பவில்லை அவர்கள். குட்டி உலா ஒன்று ஒப்பந்தமாயிற்று.


மு(த்)து... சிங்களப் பெயர், அதே கருத்து. முத்துப் போல் அழகாக இருக்கிறாரா? ;)
முதலில் விருப்பமில்லாமல் அரை மனதோடு ஆடி அசைந்து கிளம்பினார். ஒவ்வொரு அடியையும் 'தொப் தொப்' என்று வேண்டாவெறுப்பாக வைத்தார். பாவமாக இருந்தது. ஒரு குழந்தை மேல் ஏறி இருக்கும் உணர்வு... மனதை என்னவோ செய்தது; இறங்கி விடலாமா என்று இருந்தது. ஏறும் போதே சொன்னார்கள்.. அவரது நடு முதுகில் கால் வைக்க வேண்டாம் என்று. முள்ளந்தண்டு அசைவதை ஒவ்வொரு அசைவிலும் உணர்ந்தோம்.

வழியில் புல்லைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டு நின்று விடுவார். பாகன் சொன்னால் புறப்படுவார். பாகனிடம் எங்கள் புகைப்படக் கருவி இருந்தது. இடையில் ஓரிடத்தில் நின்று அழகாக துதிக்கையைத் தூக்கி ஒரு 'போஸ்' கொடுத்தார். (அந்தப் படங்கள் இங்கு இல்லை - என் முதுகு தெரியவில்லையே.)

தன் தரிப்பிடத்தை அண்மித்ததும்  குட்டியருக்கு வந்ததே ஒரு சந்தோஷம்.. பாருங்கள் பின்னங்காலை.. கடகடவென்று ஓட ஆரம்பித்தார். (முன்னங்கால் கழுத்தோடு சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தது.) 

நாங்கள் இறங்கிய பிறகு அவர் அம்பாரி எல்லாம் இறக்கி வைத்து முதுகை மசாஜ் செய்து விட்டார்கள். நாங்களும் தொட்டுத் தடவி ஒரு 'தாங்க்யூ' சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

வாழ்வில் இன்னொரு முறை யானைமேல் ஏற மாட்டேன், பாவம் அது. முத்து இன்னமும் ஒரு குழந்தையாகத் தான் என் நினைவில் இருக்கிறார். 

முத்துவைப் பற்றி உலாவின் போது பலதும் விசாரித்தோம். (விடுமுறை முடிவில் ஏற்பட்ட எண்ணத் தடங்கலில் எல்லாம் மறந்து போயிற்று.) ஒவ்வொரு முறை நான் கேள்வி எழுப்பவும் மகன் தடுத்து "It's a HE Mum," என்பார். என்னால் பெண்ணாகத் தான் பார்க்க முடிந்தது முத்துவை.

 தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! 

Friday, 18 March 2011

சின்னச் சின்ன ஆசை 2

வீட்டுக்கு மேலாகப் பெரிதாக ஒரு விளாமரம் வளர்ந்திருந்தது. இந்த இரண்டு காய்களிலும் என் கண் போயிற்று. விளாம்பழம் சாப்பிட்டிருக்கிறேன். மரத்திலிருந்து பறித்த, உடன் மாம்பழம், கொய்யாப்பழம், வாழை, பப்பாளி எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். அப்படி உடன் விளாம்பழம் சாப்பிடக் கிடைத்தால்.. ;))
அந்த மரம் முன்பும் காய்த்திருக்கிறதாம். ஆனால் யாரும் அதிலிருந்து ஒரு பழம் சாப்பிட்டதில்லையாம். குரங்குப் பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள். இருந்தாலும் ஒரு அவாவில் தினமும் மூன்று முறை பழம் இருக்கிறதா இல்லையா எனப் பார்த்து விடுவேன். 

மூன்று வாரம் முடிவதற்குள் சாப்பிடக் கிடைக்கவேண்டுமே!

தினமும் பார்த்தேன். என் கவலை புரியாமல் விளாங்காய் தொங்கிக் கொண்டே இருந்தது. 

கிளம்ப முதல் நாள், பெட்டிகள் எல்லாம் கூட ஆயத்தம். இனி எதிர்பார்ப்பதில் என்ன பயன் இருக்கிறது. கூடத்தில் எல்லோரும் கூடி இருந்தனர். சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒரே ஆரவாரம். சீட்டு விளையாடத் தெரியாத நான் சமையலறையில் மச்சாளிடம் கடைசியில் சொல்ல இருந்தவை எல்லாம் இறக்கி வைத்துக் கொண்டிருக்க விளையாடுபவர்கள் பேசிக் கேட்கிறது.. "பெரியம்மா போறதுக்கு முதல் இந்த விளாம்பழம் விழுமா?" சிரிப்பு. 
 
தூங்கப் போகிறோம், காலையில் புறப்பாடு.

என்னைவைத்துச் சிரிப்பு நடக்கிறது. நாங்களும் சிரித்து விட்டுப் பேச்சைத் தொடர்கிறோம். 

தலைக்கு மேல் ஒரு 'டொம்' காது வெடிக்கிற மாதிரி ஒரு சப்தம். ஒன்றும் புரியவில்லை.
'டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம ........
சப்'

வெளியே விளக்கு எரியவில்லை. மின்விளக்கினைக் கொண்டு சென்று எடுத்து வந்தேன் இதனை. ;)
மறுநாட் காலை சீனி போட்டுக் குழைத்து சந்தோஷமாக ஆளுக்கொரு கரண்டி கொடுத்துச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டேன்.

Thursday, 17 March 2011

சின்னச் சின்ன ஆசைகள்


மீண்டும் மழைக்காலம் தொடர்கிறது...

வளவைச் சுற்றி வந்து இந்தப் பந்தலைக் கண்டுவிட்டேன், ஒரு நாள் தூதுவளைச் சம்பல்

தினமும் முருங்கைக் கீரை சாப்பிடச் சொல்லி யாரோ ;) அறிவுரை சொன்னார்கள். ஊரில் ஆசைப் பட்ட மட்டும் சாப்பிட்டு விட்டு வந்தாயிற்று. ஆனாலும் எனக்குப் பிடித்த மாதிரி சம்பல் அரைத்துச் சாப்பிடக் கிடைக்கவில்லை, மீதி எல்லோரும் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். ;(

இப்போ எல்லாம் இப்படி எண்ணெயும் தேங்காய்ப்பூவுமாகப் பார்த்தால் கொஞ்சம் பயம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் விடவில்லை. சண்டிக்கீரைச் சுண்டல் இது. நாங்கள் ஊரில் லெச்சகட்டை என்போம்.
சென்னையில் நிறைய இடத்தில் இந்தத் தாவரத்தை அழகுக்காக வளர்க்கிறார்கள். முன்பு அறுசுவையில் இதைப் பற்றிப் படித்திருக்கிறேன். நேரில் காணக் கிடைத்த போது ஆச்சரியமாக இருந்தது.
அறுசுவையில் இருக்கும் 'சண்டிக்கீரை சுருள் பொரியல்' சமைத்துப் பார்க்க நினைத்தேன். அங்கிருக்கும் சமயம் அறுசுவைக்குப் போக முடியவில்லை. ;(

இது எப்போதும் என் ஃபேவரிட்'. கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது. என் சமையல் அல்ல.
மீதியைத் தணலில் சுட்டு.. ஹும்ம்.. அந்த வாசனை இன்னும் நாசியில் இருக்கிறது.

அறுசுவையில் யாரோ என் 'ப்ரொஃபைல் பார்த்து எனக்கு ஆமை ஓட்டுக்குள் ஆஸ்மியும் அதை உடைக்கவென்று சுத்தியலும் வைத்து அனுப்பினீர்களே, நினைவு இருக்கிறதா? ;) அந்த ஆஸ்மி இது தான். மெத்தென்று வாயில் கரைந்தது. சர்க்கரை போதவில்லை. அதுவும் நல்லதுதான்.

எதுவும் முன்பு போல் இல்லை. தரம், சுவை மாறி விட்டிருந்தது. எனக்கு இன்னும் கருகிய நிறத்தோடு இருந்தால்தான் கவும் பிடிக்கும். கொண்டையும் அழகாக இல்லை. பரவாயில்லை,ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. ;P

இது... பூஸ் & இமாவின் ஃபேவரிட். ;))) படம் தெளிவாக எடுபடவில்லை. செல்வியம்மா... வந்து பாருங்க, இதுதான் நீங்க வேலியெல்லாம் தேடின குறிஞ்சா.

Monday, 14 March 2011

சல்மல்


ஒரு மழைநாள், கண்டிவாவியைச் சுற்றி இருந்த வீதியில் நடந்துகொண்டிருந்த பொழுது பெரிய பெரிய காய்களோடு நின்றிருந்த இந்த மரம் என்னைக் கவர, மழையையும் பொருட்படுத்தாது தரித்து நின்று எடுத்த படங்கள் இவை.
இந்தக் காய்களை முன்பெப்போதும் கண்டதில்லை. தரையில் கொட்டிக் கிடந்த பூக்கள்... சல்மல் - தம்புல்ல விகாரையில் புத்தர் பெருமான் முன்னால் அர்ச்சனைக்காக வைக்கப்பட்டிருந்து பார்த்திருக்கிறேன்.

மேலே அதே மலர் இந்த மரத்தில்.

இங்கு வந்ததும் இணையத்தில் தேடிப் பார்க்கலாம் என்று பெயர்ப்பலைகையையும் மரத்தோடு சேர்த்து படம் எடுத்து வைத்தேன்.

இதே தாவரம் மீண்டும் சில நாட்களில் வேறு ஓர் இடத்தில் என் கண்ணில் பட்டது, சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகப் பக்கம் பெரிதாக ஒரு மரம் நின்றது - நாகலிங்கப் பூ மரம்.

எனக்கு இது புதிதானாலும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தாவரமாக இருக்கலாம். இருப்பினும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

சிங்களவர் இதை சல்மல் என்று அழைத்தாலும் இது அந்த மரம் அல்லவாம்.

காய்கள் பீரங்கிக் குண்டுகள் போல் இருந்தன. மேலதிக விபரம் இங்கே.

இந்த வீதியுலா ;) பற்றி வேறொரு சம்பவமும் இப்போது நினைவு வருகிறது.
அங்கங்கே மரங்களின் அடியில் அர்ச்சனைக்கான பொருட்களைச் சிலர் விற்றுக் கொண்டிருந்தனர். உரக்கப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த மழைக்குப் பயந்து விரைந்து கொண்டிருந்த வேளை எதிர்பாராமல் என் முன்னே ஒரு கை அட்டைப்பெட்டி ஒன்றை நீட்டியது. தவிர்த்துவிட்டு நகர்ந்தேன். முன்னே சென்ற மருமகன் சட்டென்று நின்று என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்தார். "அவ சந்தனக்குச்சு விக்கப் பிடிச்ச ஆளப் பாருங்க,"
இமாவுக்கு ஊதுபத்தி வாசனை ஆகாது. ;( மீதிப் பயணம் முழுக்கச் சிரிப்பதற்கு இதுதான் தலைப்பாக இருந்தது அனைவருக்கும். ;)

Tuesday, 8 March 2011

மனதோடு மழைக்காலம் - 2


மச்சாள் வீட்டில் பழைய ஆல்பங்களைப் புரட்டிக் கொண்டிருந்த சமயம் இவை கண்ணில் பட்டன.  கூட அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சின்னவர் சொன்னார் "Superb Mum, you made this didn't you?" ஆமாம், நான் செய்ததுதான். சந்தோஷமாக இருந்தது படத்தைக் காண.

1992 அல்லது 93 ஆக இருக்கவேண்டும்; மருமகள் முதல்நன்மைக்காகச் செய்தது. அப்போ அங்கு உதவிக்குப் புத்தகங்களோ இணையமோ இருக்கவில்லை. மனம் போன போக்கில் செய்தது இது.

பட்டர் கேக் & பட்டர் ஐசிங்
இலைகளும் மகரந்தங்களும் செயற்கைதான்.
அட்டையில் பல்லுகள் போல் வெட்டி வைத்து பைபிள் முகப்பில் இழுத்து விட்டேன். அதே போல் சிறிதாகப் பல்லுகள் வெட்டி தாள்கள் வரைந்தேன்.
புக்மார்க் - பேப்பர் ரிபன்.
குருசினைச் சுற்றி உள்ள நீள்சதுர பார்டர் வெள்ளி அட்டையில் வெட்டி எடுத்தது.
பூக்கள், மீதி ஐசிங் எல்லாம் 'ஸ்டார் நொசில்ஸ்' கொண்டு வைத்தேன்.

செபமாலை வைப்பது சிரமமாக இருந்தது நினைவு வருகிறது. ஒரு இடத்தில் ஆரம்பித்து மணிகள் வைத்துக் கொண்டு வர.. தேவையான இடத்தில் முடியாமல் மீதம் வரும் போல் தோன்றிப் பயமுறுத்தியது. ;) ஒரு மாதிரி வளைத்து நெளித்துக் கொண்டுபோய் அழகாக முடித்துவிட்டேன்.

அப்போ இருந்ததை விட இப்போ படத்தைப் பார்க்க இன்னும் அதிக சந்தோஷமாக இருக்கிறது.
படத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு இருப்பவர் என் மருமகள், இப்போ மணமாகி கனடாவில் இருக்கிறார். அந்தச் சட்டை.. மாமி தைத்தது. அழகாகத் தைப்பார். அவர் எனக்கு மட்டும்தான் எதுவும் தைத்துக் கொடுத்தது இல்லை என்று அடிக்கடி சொல்வேன். ஹும். ;(

கேக் போர்ட்... என் தந்தையார்தார்  ஊரில் கேக் செய்யும் எல்லோருக்கும் கேக் போர்ட் செய்து கொடுப்பார். ஆசிரியர், இளைப்பாறியதன் பின் அவரது பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றாக மாறி இருந்தது. இதில் அவருக்கு நல்ல வருமானமும் வந்தது.
ஆனால் இங்கு உள்ளது என் சமையலறைக்காக அப்பா செய்து கொடுத்த பாண் வெட்டும் பலகைதான். அதுதான் சரியான அளவாக இருந்தது. தேயிலைப் பெட்டியில் ஒட்டிவரும் வெள்ளிக் கடதாசியை ஒட்டி எடுத்தேன்.

Monday, 7 March 2011

என் மனதோடு ஓர் மழைக்காலம்

விடுமுறை முடிந்து வீடு வந்து மாதம் ஒன்றாகிவிட்டது. இனிமையான பலவிடயங்கள் ஓரளவுக்கு மேல் சுவைக்க இயலாது சுவை தெரியாத சுவடுகளாக மட்டும் தங்கிவிட்டன.

ஆனாலும் கிடைத்தற்கரிய பாக்கியம் இந்தப் பயணம்; கடல்கடந்து வந்தமையால் நாம் இழந்து போன பல தருணங்களுக்கும் ஈடுகட்டும் விதமான மனதோடு என்றும் தங்கிவிட்ட மழைக்காலம்.

விடுமுறை என்று கிளம்பியதே எதிர்பாராதது. இந்த இவ்வருட இறுதியில்தான் போவதாக இருந்தது. திடீரென்று ஒரு அதிகாலை வேலைக்குக் கிளம்புமுன் க்றிஸ் "அம்மாவைப் பார்க்க இப்போதே போய் வருவது நல்லது என்று தோன்றுகிறது.  ஒரு வருடம் வெகு தொலைவில் இருப்பது போல இருக்கிறது," என்றார்.

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நாங்கள் திடீரென்று நினைத்துக் கொண்டு செய்த காரியங்களில் இதுவும் ஒன்று.

அன்று மதியம் பாடசாலை முடிந்து வருகையில் பயணச் சீட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். அந்த 20 நிமிட இடவேளையில் தோன்றியது தான் இந்தியப் பயண யோசனையும்.பிற்பாடு சின்னமகனும் எங்களோடு இணைந்து கொண்டார். ஊருக்குப் போவதற்காக கிரிக்கட் கோச்சிங்கையும், விடுமுறை கிடைக்காத நிலையில் வேலையையும் விட்டுவிட்டுக் கிளம்பினார்.

பொன்விழா 26ம் தேதி, மறுநாள் எங்கள் மணநாள். பயண ஆயத்தவேலைகள் இருந்தமையால் இம்முறை பெரிதாக எதுவும் செய்யவில்லை.

ஊரில் இறங்கியதும் நேரே வீடு செல்லவில்லை. நீர்கொழும்பில் என் தந்தையின் சிறியதந்தையாரைப் போய்ப் பார்த்தோம். அப்படியே கொழும்பில் என் பிரியத்துக்குரிய ஆசிரியை, என்னைக் கற்பித்த பழைய அதிபர் எல்லோரையும் பார்த்துக் கொண்டு (இதன் நடுவே பாதிப்பில்லாமல் ஒரு சிறு வாகனவிபத்து.) கிட்டத்தட்ட 26 மணி நேரம் கழித்து வீடு போய்ச் சேர்ந்தோம்.

மழை.. விடாது மழை. சோவென்று இராவிடினும் விடாது பெய்துகொண்டே இருந்தது. எங்கும் வெள்ளம்.

அதுவும் நல்லதற்கே என்று இப்போது தோன்றுகிறது. வெளியே அதிகம் செல்லாமல் மாமியோடு அதிக நேரம் செலவளிக்கக் கிடைத்தது.

இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருந்தார்.

அழகான குழந்தைச் சிரிப்பு, குழந்தைபோல் பொக்கை வாயைத் திறந்து சொல்வதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

குளிக்க வைத்து, ஊட்டி விட்டு... எல்லோருக்கும் ஏவல் பார்த்தவர், மற்றவர் தயவில் தங்கி இருந்தார். ஆனாலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லை. அவர் இருக்கும் இடம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் எப்போதும். இயாலாமையைக் காட்டிக் கொள்ளமாட்டார். யாரிடமும் உதவி கேட்கப் பிடிக்காது. யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பார்.

முன்பே தொலைபேசியூடாகக் கேட்டிருக்கிறோம், எப்போதும் 'நாட்டுக்குச் சமாதானம் தாரும்' அல்லது 'எனக்குச் சமாதானத்தைத் தாரும்,' என்று சத்தமாகப் பிரார்த்தித்தபடியே இருப்பார். உணவு உண்கையில் கூட பிரார்த்திப்பது தெரியும். இதன் கருத்து... வாழ்ந்தது போதும் என்பதா? பழைய எண்ணங்களில் இருந்தாரா? எதுவாக இருப்பினும் ஒரு நிமிடம் விடாது உதடுகள் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே இருந்தன, ராத்திரிகளில் கூட.

விடுமுறையில் நிறைவேற்றவென்று சில காரியங்கள் எண்ணி இருந்தேன். அனைத்தும் நிறைவேறாவிடினும் முக்கியமானவை ஆயிற்று. தவிர்க்க இயலாது சிலது தவறிப் போயிற்று.

எனக்கும் மகனுக்கும் ஆளுக்கொரு விநோத ஆசை வந்தது. ;) நடக்காது என்று நினைத்திருக்க இறுதித் தருணத்தில் நிறைவேறின இரண்டும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் அவை பற்றி. ;)

க்றிஸ் மனதில் ஒரு எண்ணம் எப்போதும் இருந்தது. அது நிறைவேறிய விதம்தான் நம்ப இயலாததாக இருக்கிறது. இது ஒரு தாயும் மகனும் பற்றிய கதை.

என் மாமனார் எங்கள் திருமணத்துக்கு முன்பாகவே காலமாகிவிட்டார். க்றிஸ்ஸின் மூன்று சகோதரர்கள் இப்போ இல்லை. இவை எல்லாம் கடந்து வந்தும் எப்போதும் சொல்வார் "என் அம்மா என் நினைவில் எப்போதும் உயிரோடு சிரித்த முகமாக மட்டும் தங்கிவிட வேண்டும்,' என்று.

ஏழு வருடங்கள் முன்பாக ஊர் சென்றிருந்தோம். புறப்பட மூன்று நாட்கள் இருக்கையில் 'அதிக சுகவீனமாக இருக்கிறார். விரைவில் வர முடிந்தால் நல்லது,' என்றார்கள் வீட்டார். பயண சீட்டை முன் கொணர முயற்சித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் செய்தி, "இப்போ பரவாயில்லை, நீங்கள் முன்பு செய்த ஏற்பாட்டின் படி வந்தால் போதும்,' என்றார்கள்.

நாம் அங்கிருந்த ஆறு வாரங்களில் உடல்நிலையில் ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. மாமியின் எண்பதாவது பிறந்தாநாளுக்குக் கிளம்பலாம் என்றிருக்க, மூத்தவர் பாட்டியை இங்கு அழைக்கலாம் என்பதாக யோசனை சொன்னார். க்றிஸ் அரை மனதாக இருந்தார். வயதானவை அலைக்கழிக்க வேண்டுமா? இங்கு அவருக்குக் காலநிலை ஒத்து வருமா? அவருக்குத் தேவையான மருந்துகள் இராதே. மறுமுறை  தொலைபேசியில் அழைக்கையில் வீட்டார் சொன்னார்கள்.. எங்கெல்லாமோ தேடித் தன் கடவுச்சீட்டைக் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள்.

சக்கர நாற்காலியில் இங்கு வந்து ஆறு வாரங்கள் எங்களோடு தங்கினார். நண்பரொருவர் அவரது தாயார் பயன்படுத்திய நாற்காலியை இரவல் கொடுத்திருந்தார்.

அந்த ஆறு வாரங்களில் தாயும் மகனும் எத்தனையோ பேசினார்கள். சமயத்தில் தோழர்கள் போல் தெரிவார்கள். சில சமயம் ஒரு தந்தையும் மகளும் பேசிக் கொள்வது போல இருக்கும் பார்க்க. அப்போதான் க்றிஸ் தன் மனதிலிருப்பதைச் சொன்னார். ம்.. அம்மா தன் நினைவில் எப்போதும் சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்பதை. அவரது மரணச் சடங்கிற்காக மட்டும் வருவதாக இருந்தால் வர மாட்டார் என்பதையும் சொன்னார். மாமியும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகத் தான் தெரிந்தது. கிளம்பப் பிரியமில்லாது கிளம்பினார் இங்கிருந்து.

இதோ இம்முறை அவரோடு மூன்று வாரங்கள்... இனிமையாகக் கழித்துவிட்டு வந்தோம். மகனைக் கண்டதும் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சிப் புன்னகை பூத்தது. அதிகம் பேசாவிட்டாலும் எங்கள் அருகாமையை விரும்பினார். கிளம்ப இரண்டு நாட்கள் இருக்கையில் மனதைத் தயார் செய்ய எண்ணி, "அம்மா.. நான் இன்னும் ரெண்டு மூண்டு நாளில வெளிக்கிட்டுருவன். நியூசிலாந்து போறன் என்ன."என்றார். "ஆ!" என்று தலையை ஆட்டினார் தாயார். "போகத்தானே வேணும்," அப்போதும் சின்னச் சிரிப்பு.

கிளம்பிய அன்று காலை மீண்டும் "இன்னும் கொஞ்ச நேரத்தில வெளிக்கிட்டுருவன்," எனவும்.. "போய்ட்டு!!" என்று சந்தேகமாக வந்தது வார்த்தை. இனி எப்போ பார்ப்பது என்றா? அல்லது வருவாயா? என்று கேட்க நினைத்தாரா? அப்போதும் கூட அவரது அழகுச் சிரிப்போடுதான் இருந்தார்.

பத்து நாட்கள் இந்தியாவில் இருந்தோமே.. எல்லாமே ஒழுங்காகத் தான் இருந்தது. இங்கு வந்த மறுநாள் சொன்னார்கள் 'அம்மாவுக்கு கொஞ்சம் சுகமில்லை. தண்ணிச் சாப்பாடு மட்டும் தான் இறங்குது,' கொஞ்சமாக மனது கவலையானது. ஆனாலும் எதிர்பார்க்கவில்லை எதையும். கிளம்பும்போதும் நன்றாகத்தானே இருந்தார்கள்.

மறுநாள் பாடசாலையில் இருக்கையில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசாமலே புரிந்து விட்டது. ;(

மகன் விருப்பப்படி ஆகவேண்டும் என்று காத்திருந்தாரா? நாம் கிளம்பியதும் உணவை நிறுத்திவிட்டாராம். இந்தியப் பயணமும் முடித்து வரும்வரை குழப்ப வேண்டாம் என்று காத்திருந்ததுபோல் இருந்தது மாமியின் முடிவு.

எல்லாம் நல்லதற்கே என்று நினைக்க முயற்சித்தாலும் மனதில் ஒரு சிறு வலி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.