Showing posts with label DIY. Show all posts
Showing posts with label DIY. Show all posts

Tuesday, 26 May 2020

அனைத்தும் சுழலும்


காலச்சக்கரம் சுழலும்; மாதங்கள் மீண்டும் மீண்டும் வரும். ஒவ்வொரு பிறந்தநாளும் மாறிய ரசனைகள் கொண்டனவாக வந்து போகும். வாழ்த்திதழ்கள் வரும். சேகரித்துப் பத்திரப்படுத்தி அடிக்கடி எடுத்துப் பார்த்து இரைமீட்கலாம். 

என்னிடம் உள்ள வாழ்த்திதழ் ஒன்றில் எழுதப் பயன்படுத்தப்பட்ட மை என்ன காரணத்தாலோ மெதுவே மங்கிக் கொண்டு வருகிறது. அந்த வாழ்த்திதழின் வயது - குறைந்தது முப்பதாக ஆவது இருக்க வேண்டும். ஒரு திருமண அழைப்பிதழ் வைத்திருக்கிறேன். அதன் வயது பத்துப் பண்ணிரண்டு இருக்கலாம். கையில் கிடைத்த சமயம் அதன் அமைப்பை அத்தனை வியந்திருக்கிறேன். அதனால்தான் பத்திரப்படுத்தினேன் என்று கூடச் சொல்லலாம். கையால் தயாரித்த காகிதத்தில் அழகுப் பொன் நிற மையில் அழைப்பு அச்சிடப்பட்டிருந்தது. சமீபத்தில் எடுத்துப் பார்க்க, பெரும்பாலான விபரங்கள் மறைந்துவிட்டிருக்கின்றன. தேதி, மணமக்கள் பெயர் எதுவும் தெரியவில்லை. 

ஔவை பணத்தைப் புதைத்து வைப்பது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. கூடுவிட்டு ஆவி போன பின் யாரே அனுபவிப்பார், பாவிகாள் என் சேகரிப்புகள்!! :-) 

இன்று பாடசாலையில் இருவருக்குப் பிறந்தநாள். அவர்கள் அனுபவிக்கட்டும் என்று உரு மாற்றினேன் இரண்டை. பெறுபவர்கள் மட்டுமல்லாமல், காண்பவர்களும் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறேன். 

பழைய வாழ்த்திதழின் முகப்பை வெட்டி: சட்டத்தோடு, சட்டத்தினுள் பூக்கள் இலைகள் இல்லாத இடங்களையும் வெட்டி நீக்கினேன். (இரவு நேரம் எடுத்த காரணத்தால் படத்தில் விபரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.) இந்த அமைப்பை 3D ஸ்டிக்கர்கள் கொண்டு புதிய அழைப்பிதழின் முகப்பில் ஒட்டினேன். மணிகளைச் சேர்ப்பதை, சமீப காலத்தில் என் அனைத்து வாழ்த்திதழிலும் செய்துவருகிறேன். விரைவில் வேறு முறைக்கு மாற வேண்டும். :-)
இது மம்மிக்கு அவரது தோழி இலங்கையிலிருந்து அனுப்பிய வாழ்த்திதழிலிருந்து வெட்டி எடுத்தது. பூக்களின் நடுவில் வழமை போல், மணிகள். பூச்சாடியும் பூக்களும் 3D ஸ்டிக்கர்கள் உதவியோடு உயர்த்தி ஒட்டப்பட்டிருக்கின்றன.

Sunday, 24 May 2020

ஒரு பித்தான், ஒரு ரப்பர் வளையம்!

 தலைப்பில் சொல்லியிருப்பவற்றை, மேலே உள்ள படத்தில் காண்பீர்கள்.
ரப்பர் வளையத்தை மடித்து பித்தான் கொக்கியூடாக மாட்டி மறுபக்கம் எடுத்து...
ஒரு பக்கத்தை வளைத்து சுருக்குப் போட்டு....
 இழுத்து இறுக்க வேண்டும்.
கூந்தலில் மாட்டுவதற்காகத் தான் செய்தேன்; ஆனால் எனக்காக அல்ல. அதனால், என் பின்னலில் மாட்டி புகைப்படம் எடுக்க விடும்பவில்லை.

இந்த பித்தான் ரப்பர் வளையத்திற்கு இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. லொக்டௌனில் நன்றாகச் சாப்பிட்டு, ஓய்வு எடுத்துவிட்டு வேலைக்குக் கிளம்பும் சமயம் skirt / trousers பித்தான் மாட்டுவது சிரமமாக இருந்தால், ஆடையில் ஏற்கனவே இருக்கும் பித்தான் அளவில் இன்னொன்றை எடுத்து சாதாரண ரப்பர் பட்டி ஒன்று - மிகவும் சிறியதாக இருப்பது அவசியம் - இப்படி மாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடையில் உள்ள பித்தான்கண் வழியே புதிய! பித்தானை மாட்ட வேண்டும்; ரப்பர் வளையத்தை ஆடையில் உள்ள பித்தானில் மாட்ட வேண்டும்.
வேலையைச் சரியாகச் செய்திருக்கிறேனா! :)
புரியாவிட்டால் கடைசிக்கு மேலே உள்ள படத்தைப் பார்த்துக் கொண்டே.... இந்தப் பந்தியை மீண்டும் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஒருவேளை....  2 / 3 / 4 துளைகள் கொண்ட பித்தான்தான் கிடைத்தது என்றால், ஏதாவது ஒரு துளை வளியே ரப்பர் வளையத்தை மாட்டி, இன்னொரு துளை வழியே மறுபக்கம் இழுத்துப் பார்க்க இரண்டாவது படத்தில் இருப்பது போல் தெரியும். பிறகு மீதிப் படிமுறைகளைப் பின்பற்றுவது சுலபமாக இருக்கும்.

Monday, 27 April 2020

சிகையலங்காரம்!

தலைமுடியை வளர்க்க அம்மா அனுமதி கொடுத்தது எப்போது என்பது நினைவில் இல்லை, ஏழாம் வகுப்பின் பின் இருக்கலாம். எனக்குப் பின்னுவதற்கு வராது. குட்டையாக இருக்கும் போதும் அடர்த்தி அதிகமாக இருக்கும். கையைச் சற்றுத் தளர்த்தினால் சட்டென்று பின்னல் பிரிந்துவிடும்.

நானாகப் பின்ன நேர்ந்தது... 1976ல். கூட்டுச் சேரா நாடுகள் மகாநாடு இலங்கையில் நடந்த சமயம் முதல் நாள் நிகழ்வுகளுக்காக நாட்டின் பல பாடசாலைகளிலுமிருந்து அவற்றின் வாத்தியக் குழுக்கள் (school bands) அழைத்துச் செல்லப்படிருந்தோம். முழங்கால் வரை நீண்டிருந்த கூந்தலைப் பின்னி எடுப்பது பெரும் பியத்தனமாக இருந்தது எனக்கு. மேல்ப்பாதியைப் பின்னிவிட்டுப் பார்த்தால், அதன் கீழ் உள்ள முடி சிக்கிக் கிடக்கும். திரும்ப அதைச் சிக்கெடுத்து மீதியைப் பின்னி... ;( அதற்குள் எங்களை பயிற்சிக்கு அழைத்துப் போக பேருந்து வந்துவிட்டிருக்கும். மஹரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம். அங்கிருந்து மகாநாடு நடந்த பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்திற்கு மூன்றுநான்கு நாட்கள் தினமும் பயிற்சிக்காக எங்களை அழைத்துப் போனார்கள். பாதிக் கூந்தலைப் பின்னிக் கொண்டு வண்டியில் ஏறிவிடுவேன். மீதியைப் பயணத்தின் போது எப்படியாவது பின்னி மடித்துக் கட்டிக் கொள்வேன்.

பிறகு ஒரு சமயம்... 1979 என்பதாக நினைவு - அம்மா நன்கு குட்டையாக வெட்டிவிட்டார். அது சில மாதங்கள்தான் குட்டையாக இருந்தது. கிடுகிடுவென்று வளர்ந்து முன்பை விட நீண்டு போனது. இம்முறை முடி அடர்த்தி முன்பை விடச் சிறிது குறைந்தும் தன்மையில் மென்மையாகவும் சுருளாகவும் மாறி வளர்ந்தது.

பிறகு மூத்தவர் பிறந்த சமயம் அதிக இரத்த இழப்போடு நிறைய முடி கொட்டிப் போயிற்று; ஆனாலும் நீளம் குறையவில்லை.

எனக்கு 35 வயதில் உச்சந்தலையிலும் பிடரியிலும் ஒரு ரூபாய் அளவுக்கு நரை இருந்தது. அதை மறைக்க, வகிடு எடுக்காமல் தலை வார ஆரம்பித்தேன்.

இங்கு வந்த பின் ஒரேஒரு முறை, அதுவும் நான் அறிந்து கொண்டால் பிறகு நானே நரையை மறைக்கும் வேலையைச் செய்யலாம், நேரமும் பணமும் மீதம் என்று நினைத்து தலையை ஒருவருவரிடம் காட்டி வைத்தேன். உண்மைக் காரணம் வேறு இருந்தது. எனக்கு என் வேலைகளை இன்னொருவரிடம் கொடுத்துச் செய்ய வைத்துப் பழக்கமில்லை; நானே செய்தால் தவிர திருப்தி கிடைப்பதில்லை. தலையைக் கொடுத்தேன். அரை மணி நேரம் பூசிய மையின் மேல் glade wrap சுற்றி உட்கார வைத்தார் அந்தப் பெண்மணி. காதோரம் ஏதோ ஊர்ந்தது. கையை வைக்காமல் பொறுமையில்லாமல், பொறுமையாக அமர்ந்திருந்தேன். அழைத்துச் சொல்ல, வந்து பார்த்தவர், 'அது வியர்வை' என்று விட்டுப் போய்விட்டார். அரைமணி கழித்து, கூந்தலைக் கழுவிவிட்ட பிறகு பார்த்தால் காதோரம் தடிப்பாக கோலம் போட்டிருந்தது. கர்ர்ர்ர்ர் என்று ஆகிவிட்டது எனக்கு. நான் கேட்ட நிறம் தன்னிடம் இல்லை என்று என்னைக் கொண்டே வாங்க வைத்திருந்த அந்த சிகையலங்கார 'நிபுணர்', மீதியை என்னையே எடுத்துச் சென்று, மறு முறை வரும் போது கொண்டுவரச் சொல்லி இருந்தார். பிறகு நான் போகவே இல்லை.

பல வருடங்கள் கழித்து உச்சி நரை சற்று அசிங்கமாகச் தெரிய ஆரம்பித்த போது, க்றிஸ்ஸைத் துணைக்கு வைத்துக் கொண்டு நானே மை பூச ஆரம்பித்தேன். பாடசாலை விடுமுறை காலங்களில் இயல்பாக விட்டுவிடுவேன். பாடசாலைக் காலங்களில் கூட மூன்று நான்கு கிழமைகளுக்கு ஒரு முறைதான் வேலை. இடையில் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால் தவிர, அலங்காரமாகச் சீவி மறைத்து விடுவேன். சிறிய வாசனையானாலும் சட்டென்று வேலையைக் காட்டும் என் நுரையீரலின் செயற்பாடு காரணமாக, நம்பிக்கை & தேவை இருந்தால் தவிர மையைத் தொடுவதில்லை. க்றிஸ்ஸின் வேலை, எங்காவது தவறிச் சிதறி விட்டால் உடனுக்குடனே துடைத்து விடுவது.

மருமகளைப் பார்க்கக் கனடா சென்றிருந்த சமயம் அவர் ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அழைத்துப் போனார். நான் கேட்ட விதம் ஒன்று, அது சரிவராது என்று அவர்கள் சொன்ன காரணம் நியாயம் என்று அரை மனதாக ஒப்புக் கொண்டு தலையைக் கொடுத்தேன். முடிவு... பரவாயில்லை என்று தோன்றிற்றே தவிர முழுத் திருப்தி கிடைக்கவில்லை. அன்றே தீர்மானித்தேன், இனி என்ன ஆனாலும் இன்னொருவரிடம் தலையைக் கொடுக்க மாட்டேன் என்று.

குழந்தைகள் வளர்ந்து விட, மூன்று கிளைக் குடும்பங்களாக என் குடும்பம் பெருகி இருந்தது. அம்மாவின் உடல்நிலை, அவர் தொடர் சிகிச்சைக்காக ஓய்வு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டது, அதற்காக தயார் செய்தல், அவர் வீட்டை ஒழித்து மீண்டும் வீட்டு உரிமையாளரிடம் கையழித்தது, அதே சமயம் சின்னவரது திருமணம் என்று வேலைப் பழு அதிகமாகிப் போன சமயம் தோன்றிற்று... முடியை வெட்டலாம், நேரம் மிச்சமாகும், சுலபமாக உலரும், இழுப்பு இருக்கும் நாட்களிலும் பயமில்லாமல் முழுகலாம். க்றிஸ்ஸிடம் கேட்டேன். "சேலைக்குக் குட்டை முடி அழகாக இருக்குமா?" என்றார். அவர் பிரச்சினை அது அல்ல, என்னை அப்படிப் பார்த்து அவர் கண்களுக்குப் பழக்கமில்லை. என்னால் சேலைக்கு ஏற்றபடி & முன்னிருந்து பார்த்தால் முடியை வெட்டியதே தெரியாதபடி வெட்ட முடியும் என்றேன். நீண்ட முடியோடு கடைசி நாள் என்று முழுகி தலையை ரசித்து வாரி நீளமாக விரித்து உலரவிட்டுக் கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனேன். அறைக்குப் போகும் வழி நெடுக, கண்ட பெண்கள் என் கூந்தல் அழகைச் சிலாகித்துப் பேசக் கேட்டு மனம் மாறிற்று. வெட்டவில்லை அன்று.

இப்படியே மூன்று முறை ஆயிற்று. இதற்குள் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது - என் கூந்தல் என் பெருமை ஆயிற்றே! வெட்டுவதா!! நீளமாக இருந்தால் அழகழகாகக் கட்டி அழகுபார்க்கலாமே!

அம்மா இறுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாம் நாள், தன் முடியைக் குட்டையாக வெட்டி விடச் சொன்னார். அவருக்கும் என்னைப் போல் மற்றவர்கள் அவர் தலையைத் தொடுவது இஷ்டமில்லை. சின்னவரது திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் இருந்தது. பின்னிப் பிடித்து, முன்பிருந்து பார்த்தால் முடி குறைந்திருப்பது தெரியாத விதமாக வெட்டி விட்டேன். அந்தக் கற்றை அப்படியே என்னிடம் பத்திரமாக இருக்கிறது இன்னும். எண்பத்தொரு வயதானாலும் கன்னங்கரேலென்ற கருத்த சுருண்ட முடி. மரணித்த சமயம் மீண்டும் அதே நீளத்திற்கு வளர்ந்திருந்தது.

உடற்பயிற்சி செய்யும் சமயம் குறுக்கே பாம்பு போல் தொங்கி பார்வையை மறைக்கும் போது சற்று அலுப்பாக இருக்கும். வெட்டிவிடும் எண்ணம் மீண்டும் தலைதூக்கியது. இலங்கைக்குப் போகும் சமயம் என் பெறாமகளைக் கொண்டு வெட்டலாமா! அழகுக்கலை நிபுணர் அவர். அவரது ரசனை எனக்குப் பிடிக்கும் என்பதால்... தயங்காமல் தலையைக் கொடுக்கலாம்.

அதற்குள்... கொரானா வந்தது. நானே வெட்டிக் கொள்ள முடிவு செய்தேன். உதவிக்கு இருக்கவே இருக்கிறது யூட்யூப். இந்தக் காணொளியில் சொல்லப்பட்டிருக்கும் முறை சரிவரும் என்று மனம் சொன்னது.

முன்பொருமுறை வெகு மலிவாக எங்கோ கண்ணில் பட, இந்த இரண்டு உபகரணங்களையும் வாங்கி வைத்திருந்தேன். இரண்டிலும் அசையக் கூடிய நீர்மட்டங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. உள்ளே கூந்தலைப் பற்றிப் பிடித்துக் கொள்ள சின்னச் சின்னப் பற்கள் இருக்கின்றன.

சிறியதை மட்டும் எடுத்துக் கொண்டேன். க்றிஸ்ஸின் முடி திருத்தும் கத்தரிக்கோலை (அவருக்கு நான் தான் வெட்டிவிடுவேன்.) எடுத்துக் கொண்டேன். இன்னொரு ரப்பர் பட்டியும் சுத்தமான கடதாசி ஒன்றையும் எடுத்து வைத்தேன். முடியைக் கழுவி, கண்டிஷனர் போட்டு அலம்பி, வீடியோவில் சொன்னபடி முன்பக்கமாக நீளமாக, சீராக வாரிக் கட்டிக் கொண்டேன். பிறகு அந்த உபகரணத்தை சரியான இடத்தில் மாட்டிவிட்டு க்றிஸ்ஸைக் கொண்டு நீர்மட்டம் சரிபார்க்க வைத்தேன். அதன் பின் கவனமாக, சற்றுச் சரிவாக, நறுக்! நறுக்!

விளைவு இதோ!
(இது உண்மையில் ஆறு வாரங்கள் கழித்து எடுத்த புகைப்படம்.)


நறுக்கியவற்றை ஒன்றாகப் பிடித்து ரப்பர்பட்டியை மாட்டி, கடதாசியில் உலரும் வரை வைத்திருந்து எடுத்து வைத்திருக்கிறேன். என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்துவைத்திருக்கிறேன். தேவையான உபகரணங்களும் நேரமும் கிடைத்ததும் செயலில் இறங்க வேண்டும்.

Monday, 17 June 2019

காப்பிக் கிண்ண அணிகலன்!

சில வருடங்கள் முன்பு, என் சிறு வயதுத் தோழி ஒருவர், காப்பிக் கிண்ணங்களில் (Espresso capsules) அழகழகாக அலங்கார வேலை செய்து பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

என் சின்ன மகன் வீட்டில் தான் முதல்முதலில் கிண்ணங்களை நேரடியாகக் கண்டேன். சேகரித்துத் தருமாறு கேட்டிருந்தேன்; கிடைத்தது.

கையில் கிடைத்தவற்றையெல்லாம் ஒட்டி அலங்கரித்தேன். பெரிதாய்த் திருப்தி கிடைக்கவில்லை. அவற்றைப் படம் எடுத்து வைக்கவில்லை. 

தொடர்ந்து வந்த நாட்களில் கூகுளில் தேட அருமையான கைவினைகள் கண்ணில் பட்டன. ஆரம்பத்தில் கிடைத்தவை எவையுமே ஆங்கிலத்தில் இருக்கவில்லை. வெறுமனே, 'படம் பார்; பாடம் படி,' என்கிற விதத்தில் புரிந்துகொண்டேன்.

என்னிடம் என் கைக்குப் பெரிதான பண்டோரா பிரேஸ்லட் ஒன்று இருந்தது. அவற்றுக்கான மணிகளை வாங்கலாம் என்று பார்த்தால், விலை வாங்க இடம் கொடுக்கவில்லை. இப்போது தான் யோசனை கிடைத்துவிட்டதே! நானே மணிகள் செய்து எடுத்தேன்.

செய்முறை பிறிதொரு சமயம் வெளியாகும்.

Friday, 1 March 2019

டைல் கோஸ்டர்கள்

2017 நத்தாருக்காக நான் தயார் செய்த அன்பளிப்புப் பொருட்கள் சிலவற்றின் தயாரிப்பு முறையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையானவை

அளவான சதுர டைல்கள்
க்ளாஸ் & செரமிக் பெய்ன்ட் (பச்சை, சிவப்பு, மஞ்சல், கறுப்பு)
ப்ரஷ்கள்
மெதைலேட்டட் ஸ்பிரிட்
பஞ்சு விடாத துணி / டிஷ்யூ
சதுர‌ ஃபோம் துண்டுகள்

செய்முறை சுருக்கமாக‌...

டைல்களை கழுவி உலரவிட‌ வேண்டும்.
பெய்ன்ட் செய்யும் முன் ஒரு முறை பஞ்சு விடாத‌ துணி / கடதாசியால் மெதைலேட்டட் ஸ்ப்ரிட் தொட்டு பெய்ன்ட் செய்யப் போகும் மேற்பரப்பைத் துடைத்துக் கொள்ள‌ வேண்டும்.
விரும்பியதை வரைந்து கொண்டு, பெய்ன்ட் தயாரிப்பாளர் அறிவுறுத்தலின் படி உலர‌ விட‌ வேண்டும். (நான் பயன்படுத்தும் க்ளாஸ் & டைல் பெய்ன்ட் 48 மணி நேரம் கழித்து பேக் செய்து எடுக்கும் வகை.)
அவனிலேயே ஆற‌ விட்டு, நன்கு ஆறிய‌ பின், கோஸ்டரின் பின்பக்கம் நான்கு மூலைகளிலும் (மேசையில் உராய்வு ஏற்படுவதைத் தவிர்க்க‌) ரப்பர் /  ஃபோம் தக்கைகளை ஒட்டிவிட‌ வேண்டும். (அல்லது முழுவதாக ரப்பர் அல்லது ஃபோம் ஷீட் ஒட்டி அளவுக்கு வெட்டிவிடலாம்.)

சூடான‌ கிண்ணங்களை வைப்பதால், நடுவில் வரைந்தால், கிண்ணங்களைத் திரும்பத் தூக்கும் போது பெரும்பாலும் கோஸ்ட்டரும் சேர்ந்து மேலே வரும். (அனுபவம்) விபத்துகளைத் தவிர்க்க‌ நடுவில் எதுவும் வரையாமலிருப்பது நல்லது. நான் கிண்ணத்தின் அளவில் ஒரு கடதாசி வட்டம் வெட்டி வைத்திருக்கிறேன். இது பெய்ன்ட் வகைகளோடு அதே பெட்டியில் சேமிப்பில் இருக்கும். அதை டைலின் மத்தியில் ஒட்டி (செலோடேப்பின் ஒட்டும் பக்கத்தை மேலே வைத்து விரலில் சுற்றி ஒரு வளையம் போல் செய்து எடுக்க வேண்டும். அதை வட்டக் கடதாசியின் பின்பக்கம் ஒட்டி, டைலின் மத்தியில் ஒட்டிக் கொண்டால் வேலை முடிந்ததும் பிரித்து எடுப்பது சுலபம். அதே வட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.) வைத்து, மீதி இடத்தில் மட்டும் பெய்ன்ட் செய்தேன். பேக் செய்யும் முன் நினைவாக‌ செலோடேப் ஒட்டியிருந்த இடத்தை மெதைலேட்டட் ஸ்ப்ரிட் தொட்டுத் துடைத்தேன். அல்லாவிட்டால் புகைத்து நிறம் மாறிப் போயிருக்கும்.

பொதி செய்வதற்கு பபிள் ராப் பொருத்தமாக‌ இருக்கும். டிஷ்யூ பயன்படுத்துவதானால், கசக்கி வைத்துப் பொதி செய்வது நல்லது.
நடுவில் உள்ளது - சும்மா ஒரு முதல் முயற்சி. ஓர் பழைய நத்தார் வாழ்த்திதழை எடுத்தேன். டைலின் மேற்பகுதியில் mod podge பூசி சீராக படத்தை ஒட்டினேன். நன்கு உலர்ந்த பின், தலைக்கீழாக ஒரு கட்டிங் மாட்டில் வைத்து மேலதிகமான அட்டைத் துண்டுகளை க்ராஃப்ட் நைஃப் கொண்டு வெட்டி நீக்கினேன். திருப்பிப் போட்டு, படத்தின் மேல் இரண்டு தடவை mod podge பூசிக் காயவிட்டேன். உலர்ந்த பின் மீண்டும் திருப்பிப் போட்டு ஃபோம் ஷீட் ஒட்டி, அதைச் சரியான அளவில் வெட்டி, பபிள் ராப் சுற்றி வைத்து...

வெள்ளை டைல்களை இரண்டிரண்டாகப் பொதி செய்யத் தக்கதாக முன்பு முட்கரண்டிகள் வாங்கியபோது கிடைத்த வெற்றுப் பெட்டிகளிரண்டு கிடத்தன. அழகாகப் பொதி செய்து அனுப்பிவைத்த இடம்... க்றிஸ் வேலைத்தளம். 

Wednesday, 8 August 2018

பெட்டியொன்று பையான கதை!

என் மூத்த மருமகள் சற்றுத் தீவிரமான ப்ளாத்திக்கு எதிர்ப்புப்போராளி. :-) அவர் வீட்டில் அவற்றைக் காண்பது குறைவு.

எதையாவது அன்பளிப்பாகக் கொடுக்கும் போது ப்ளாத்திக்குப் பையில் எடுத்துப் போனால், அதை என்ன செய்வது என்கிற கேள்வி உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்பே அவர் முகத்தில் தெரியும். ஆரம்பத்தில் நானே திரும்ப எதையாவது போடும் சாக்கில் என்னோடு எடுத்து வந்திருக்கிறேன். பிற்பாடு நல்ல கடதாசிப் பைகள் கிடைக்கும் போது, இவர்கள் வீட்டிற்குப் போகும் சமயம் உதவும் என்று சேமிக்க ஆரம்பித்தேன்.
ஒரு முறை சிறிய பிரம்புக் கூடையில் எடுத்துப் போனேன். அந்தக் கூடை இப்போது அவர்கள் பழக்கூடையாக மாறி இருக்கிறது.

மகனது கடந்த பிறந்தநாளுக்கான அன்பளிப்பை எடுத்துச் செல்ல என்னிடமிருந்த எந்தப் பையும் நீள அகலம் தோதாக இருக்கவில்லை. பாதி அளவாக 'வீட்பிக்ஸ்' பெட்டி அளவாகத் தெரிந்தது. அதைக் கொண்டு ஒரு பை செய்யலாமா!

செய்தேன்.
மகனுக்கு நாய் வளர்ப்பு பிடிக்கும். நாய்ப் படங்களுடனான பொதி சுற்றும் தாள் ஒன்று இருந்தது. செபாவின் சேகரிப்பிலிருந்து ஒரு துண்டு நாடாவைப் பொறுக்கிக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன். கூடவே... பசை, கத்தரிக்கோல் & ஒரு துளையிடும் உபகரணமும் தேவையாக இருந்தன.
பெட்டியின் வாய்ப் பகுதியை உட்புறமாக மடித்து ஒட்டிக் கொண்டேன்.
பெட்டியைச் சுற்றிச் சுருக்கமில்லாமல் கடதாசியை ஒட்டினேன். கீழே இருந்த கடதாசியை மடித்து ஒட்டிவிட்டேன்.
மேலே மீந்திருந்ததை இப்படி மூலை வழியே வெட்டி விட்டு....
உட்புறமாக மடித்து ஒட்டினேன்.
அகலமான வாய்ப் பகுதியில் துளைகள் செய்து நாடாவைக் கோர்த்துக் கட்டிக் கொண்டேன்.
உள்ளே அன்பளிப்பாக வாங்கியவற்றை  - எல்லாம் இலங்கைக் கடையில் வாங்கிய உணவுப் பொருட்கள் தான். வேண்டாதவற்றைக் கொடுத்தால் என்ன செய்யப் போகிறார்கள்! பிடித்ததை, கிடைக்காததை வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் பயன்படுத்தி முடிப்பார்கள் அல்லவா! - உள்ளே வைத்து எடுத்துப் போனேன்.

இம்முறை உறுத்தலாக இருக்கவில்லை எனவே பையைத் திரும்பக் கொண்டு வரவில்லை. :-)

Thursday, 28 December 2017

டேப் & டிஸ்பென்சர்

 நத்தார் அன்பளிப்புகளைப் பொதிகளாகச் சுற்றும் சமயம் இடைநடுவே 'டேப்' தீர்ந்து போயிற்று. புதியதை மாற்ற‌ முயன்றேன். என் சின்னக் கைகளுக்கு பிரயத்தனமாக‌ இருந்தது. கர்ர்... மாடியிலிருந்து இறங்கி வந்து, தோட்டத்தில் நின்றிருந்த‌ மனிதரிடம் உதவி கேட்டேன். அவரும் பழையதைக் கழற்ற‌ சிரமப்பட்டார்.
 திடீரென்று தோன்றிற்று... புதியதை மாட்டிவிட்டுத் தள்ளினால் வராதோ! வந்தது. புதியதும் தானாகப் பொருத்தமான‌ இடத்தில் சென்று அமர்ந்தது.
எல்லோரும் இப்படித் தான் செய்வார்கள் போல‌. நமக்குத்தான் தாமதமாக‌ வெளித்திருக்கும் என்று தோன்றிற்று. :‍)

Monday, 18 December 2017

வெயிலுக்கு முளைத்த‌ காளான்!

அவ்வப்போது கைவேலைக்காக‌ வாங்கிச் சேர்த்தவற்றில், சில செரமிக் பொருட்களை நேற்று வெளியே எடுத்தேன். யாருக்கு என்ன‌ அன்பளிப்பு என்பதை   யோசித்து குறித்து வைத்தாயிற்று. செரமிக் பெய்ன்ட் இருந்த‌ பெட்டியில் எப்பொழுதோ ஒரு கைவேலைக்காக‌ வாங்கி மீந்து போன‌ மலிவு விலை வர்ணங்கள் தெரிந்தன‌. சிவப்பும் வெள்ளையும் மஞ்சளும் பாதி காய்ந்து இருந்தன‌. 

வீசாமல் பயன்படுத்த‌ முடியாதா! 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2003ல் இந்த‌ வீட்டை வாங்கினோம். வாங்கும் போது ஒரு ப்ளம் மரம் & நிறைய‌ புல்லும் களைகளும் அவற்றின் நடுவே களையாக‌ வளர்ந்திருந்த‌ ப்ளம் கன்றுகளுமே இருந்தன‌. தோட்ட‌ வேலையை ஆரம்பித்தேன். 


அந்த‌ வருட‌ நத்தாருக்கு சின்னவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது... ஒரு காளானை. $ கடைகள் சின்னவர்களுக்கு ஒரு பெரிய‌ வரப்பிரசாதம். :‍-) கையிலிருக்கும் சொற்பப் பணத்தில் அழகாக‌ எதையாவது தேடி வாங்கிவிடலாம். 

பல‌ வருடங்கள் கழித்து அதன் வர்ணப் பூச்சுகளை இழந்தும் என்னைப் பிரியாமல் செடி மறைவில் இருந்துவந்த காளானை, சுரேஜினியின் கைவேலை ஒன்று வெளியே எடுத்து வரச் செய்தது. படிந்த‌ பாசியைத் தேய்த்துத் தேய்த்துச் சுத்தம் செய்வது நச்சுப் பிடித்த‌ வேலையாக‌ இருந்தது.
இந்த‌ நிலை வரைதான் கொண்டுவர‌ முடிந்திருந்தது. அழுக்குப் போகாவிட்டாலும் சிரிப்புப் போகவில்லை. ;-) மீண்டும் அழுக்காகி விடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் உறங்கப் போய்விட்டார் காளான் பிள்ளையார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொட்டால் ‍ தூரிகையில் கெட்டித்தயிர் போல் ஒட்டிப் பிடித்தது தீந்தை. பளிச்! 

எங்கே என் காளான்! 
தேடிப் பிடித்தேன். 

பூசாமல் இழுபட்ட தீந்தை, காளான் மேல் கோடுகள் போன்ற‌ தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. காய்ந்த‌ பின் முகத்தை வரைந்தேன்.
 
அடிப்படை கரடுமுரடாக‌ இருந்ததால், மெல்லிய‌ கோடுகள் வரைவது சிரமமாக‌ இருந்தது.

மஞ்சள் பச்சக் பச்சக்! :‍) தூரிகையின் பின்புறத்தால் தொட்டு பொட்டுகள்வைத்தேன்.  பரவாயில்லை. 
கடும் வெயில் இங்கு.  சட்டென்று உலர்ந்துவிட்டது. என் தோட்டத்தில் எங்கே வைக்கலாம்!
                                     .. இந்தக் களைகளைத் தொலைக்க‌ முடியாமலிருக்கிறது. கர்ர். க்றிஸ்ஸிடம் சொல்லி தற்காலிகமாக‌ ஏதாவது விசிறச் சொல்ல‌ வேண்டும்.
 சின்னவர் ஓரிரண்டு நாட்களில் வருவார். நன்கு தெரியும் எனக்கு‍ ‍ காளானைப் பார்த்ததும் ஒரு சிரிப்புச் சிரிப்பார். ;-) அதன் கருத்து... "மம்மி இன்னும் சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடுறா!"

Wednesday, 15 January 2014

அறுசுவையும் நானும்

ஏற்கனவே  அறுசுவையில் உள்ள எனது படைப்புகளுக்கான தொடர்புகளை உலகில் அங்கங்கே இணைத்திருக்கிறேன்.
இப்போ புதிதாக...
'தொட்டுக்கொள்ள...'
~~~~~~~~~
தேவையான எல்லாவற்றையும் ஓரிடமாகத் தொகுத்து வைத்தால் தேடுவதற்குச் சுலபமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்தத் தொகுப்பு. என்னைப் பின்தொடரும் கவினையில் ஆரவமுள்ள, தமிழ் படிக்கத் தெரியாத நட்புக்களுக்காக ஆங்கிலத்தில் சிலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

க்றிஸ் கைவினைகள்

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ஏஞ்சல் செய்தவை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அம்மா செபா செய்தவை

Silver Bells
Flower Arrangement
Paper ducks - Origami / Papaer Serviette foldings
First communion crown
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அலனது சமையல்கள்

Sunday, 28 July 2013

பூட்டிய கதவு

காலையில் கோவிலுக்குக் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடியை எடுக்க மறந்து போனேன். திரும்பக் கதவைத் திறக்க முயன்றால் இயலவில்லை. ;( கண்ணாடி இல்லாமலே போய் வந்தாயிற்று.

திறக்கவே இயலவில்லை. பூட்டை மாற்றலாம் என்றால்... அது அறையின் உட்பக்கமிருந்துதான் மாட்டினோம். உள்ளிருந்துதான் மாற்றவும் வேண்டும். பிறகு ஹாச்ஸா (hacksaw), க்ரைண்டர் (இது சமையலறை க்ரைண்டர் இல்லை) எல்லாம் கொண்டு ஒரு பாதியை தீப்பொறி பறக்க அறுத்து, திருகி, மீண்டும் மறு பாதியை அறுத்து... நெம்பி...
 ஒரு விதமாக துண்டு துண்டாகப் பிடுங்கி எடுத்தோம்.
 புதிய பூட்டும் வாங்கி வந்தாயிற்று. பழைய துவாரம் சிறிதாக இருந்தது.
 பெரிதாக்க... புகை மண்டலம்.
கதவின் மறுபக்கம்
 மதியம் வேலை முடிந்தது.
 புகை அடையாளங்களைச் சுத்தம் செய்தேன். ஆனால் ஆங்காங்கே வாள், சுத்தியல் தட்டுப் பட்ட அடையாளங்கள் நிறையவே இருக்கின்றன. கதவை ஒரு முறை பெய்ன்ட் செய்ய வேண்டும் போல இருக்கிறது.
 கோடை வரும் வரை அப்படியே இருக்கட்டும்.

Thursday, 15 November 2012

மறைவாக ஒரு மரப் பெட்டி

 என்ன எடுக்கிறார் க்றிஸ்!
 தோட்டவேலைக்கான கருவிகள்....
 
இரண்டாவது பகுதியில் மேலதிக தேவைக்கானவை.
 
மேலும் சிலது மூன்றாவது பிரிவில்.
நான்காவது பிரிவில்...
இரண்டு பிரிவுகளுக்கிடையே ஒரு மறைவிடம். மேலே கொழுகொம்புகள். ;)
 இவையெல்லாம் இருப்பது இந்த... பெட்டகம் ;) அலுமாரி, மரப்பெட்டி, ராக்கை பெயர் என்ன வேண்டுமானாலும் உங்கள் இஷ்டத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள். ;)) 
 மறுபுறம் இருந்து பார்த்தால் இப்படித் தெரியும்.
 அந்தப் பெட்டகம் அமைந்து இருப்பது வேலியோடு வேலியாக, மறைவாக இந்த இரண்டு குறுக்குச் சட்டங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியின் மீதிப் பகுதியில் சில வருடங்கள் முன்பாக அடித்தார். திடீரென்று எப்போவாது நினைத்தாற்போல் பிடுங்கி வைப்பார். அதற்குள் உங்களோடு பகிர்ந்து வைக்கிறேன். ;)
வேலியின் நிறத்தை இப்போதான் கவனிக்கிறேன். கர்ர்... ;( நிறைய வேலை இருக்கிறது தோட்டத்தில்.
அதனால் இமா அடிக்கடி வலைப்பூவுக்கு வரமாட்டார்.... நிம்மதி என்று மட்டும் நினைக்க வேண்டாம். செய்யும் தொழிலெல்லாம் இங்கு டமாரமடிக்கவாவது வருவேன். ;)

Saturday, 8 September 2012

பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி

;) _()_

பூ வைக்க இந்தப் பூவைக்குக் கொள்ளை ஆசை, அதிலும் சரம் வைக்க. ஆனால் ஊசி நூல் கொண்டு கோர்க்க மட்டும் வரும்.

எப்போதோ பக்கத்து வீட்டுக் கலியாணத்திற்கு அவர்கள் சொன்னது போல் கட்டிக் கொடுத்துவிட்டு மறந்து போனேன். பிறகு ஒரு இந்தியத் தோழி (Aunty) காட்டிக் கொடுத்தார்கள். திரும்பவும் மறந்தேன். டச் விட்டுப் போச். பூ இருந்தால்தானே டச்.

சமீபத்தில் ஒரு இணையத்தோழி உதவ.... செய்முறை கிடைத்தது. ஆனால் பூ!! இருந்த மல்லிகையை வெட்டியாயிற்றே!! காலை செபா வீட்டுக்குப் போய் வெளியே வருகையில் கண்ணில் பட்டது இந்த மல்லிகையின் சக்களத்தி. ;))

பிடுங்கி வந்தேன். வீட்டில் இறங்கும் போது ஒருமாதிரி மயக்கமாக இருந்தது, அவ்வளவு வாசனை.

இரவெல்லாம் மழை. பூக்கள் நிறையவே நீரை உறிஞ்சிவைத்திருந்தன. காம்பும் சின்னது. எப்படியோ மல்லுக்கட்டி.... சரம் கட்டி...

கூந்தலில் சூடினால் படம் பிடிக்க ஆள்!!! க்றிஸ் உதவிக்கு வந்தார். ஏதோ கலியாண ஃபோட்டோ ஷூட் போல அரைமணி நேரம் சுட்டு மீந்தது இந்த இரண்டும்தான். அதற்குள் பாதிப் பூக்களுக்கு பாதிப்பு வந்து கொட்டிப் போய் விட்டது.

ஒரு ஆன்டிஹிஸ்டமைன் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.... தங்கள் கனிவான கருத்துக்களை எதிர்பார்த்து. ;)))))

நன்றி _()_